• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் ?

உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் ?

( திருவாலி திருநகரி மேலத்திருமாளிகை எம்பார் சடகோபாச்சாரியார் சதாப்தி திருநக்ஷ்த்திரம் - மார்கழி விசாகம்)

மார்கழி விசாகம்:

திருமங்கையாழ்வார் திருவதரித்த திருவாலி நாட்டிலே, ஸ்ரீ.உவே. எம்பார் ரங்காச்சாரியார் ஸ்வாமியின் திருமகனாராக அவதரித்தார் ஸ்வாமி. விசாக நக்ஷத்திரத்தில் அவதரித்ததால், இவருக்கும் சடகோபர் என்றே திருநாமம் ஏற்பட்டது போலும். தன்னுடைய திருத்தகப்பனாரிடத்தில் உபய வேதாந்தங்களையும், ரஹஸ்ய க்ரந்தங்களையும், காலக்ஷேபத்தையும் பூர்த்தி செய்தார். ஸ்வாமிக்கு திருவாலி பரவஸ்து அமிர்தவல்லி அம்மங்காரையும் உரிய நேரத்தில் விவாஹம் செய்து வைத்தனர் பெரியோர்கள்.

இருவராய் வந்தார்:

சகோதர்கள் இருவர், செய்யும் செயல்களில் ஒற்றுமையாக இருந்ததால் அவர்களை ராம லக்ஷ்மணர்கள் என்று புகழ்வது இயல்பு. எம்பெருமானார் தரிசனத்தில் பராசர பட்டரும், வேத வியாச பட்டரும் அவ்வாறே எழுத்தருளியிருந்தனர். பின்பு திருஅவதரித்த பிள்ளைலோகாச்சார்யரும், அழகிய மணவாள பெருமாள் நாயனாரும் அவ்வாறே திகழ்ந்தனர். திருவாலி திருநகரி மேலத்திருமாளிகையிலும், ஸ்வாமியும், அவரது திருத்தம்பியாரான திருவேங்கடாச்சாரியாரும் அவ்வாறே திகழ்ந்தனர். சன்னதிகளில், அருளிச்செயல் கோஷ்டியில் இருவரும் ஒன்றாகவே அனுபவிப்பர். இருவரும் உபய வேதாந்தங்களில் கரை கண்டவர்கள். இராமனின் வார்த்தைக்கு அடங்கிய இளையோன் போலே, ஸ்வாமியின் திருத்தம்பியாரும், தனது திருத்தமையனாரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டே இருப்பார். திருவேங்கடாச்சாரியார் இந்நிலவுலகில் எழுத்தருளியிருந்தவரை, இருவரும் பிரியாமல் இருந்தனர்.

தேவுமற்றறியேன்:

நம்மாழ்வாரை தவிர ஏதும் அறியாத மதுரகவியாழ்வாரை போலவும், எம்பெருமானாரை தவிர ஏதும் அறியாத வடுக நம்பியை போலவும், நம்பிள்ளையை தவிர ஏதும் அறியாத பின்பழகிய பெருமாள் ஜீயரை போலவும், ஸ்வாமி திருமங்கையாழ்வாரின் திருவடிகளை தவிர தெய்வம் மற்று அறியாதவர். ஆழ்வாருக்கு செய்யும் கைங்கர்யத்தையே போக்யமாக கொண்டவர்.

அருளிச்செயலில் புலமை:

பெரிய திருமொழியில் ஒருவர் புலமை கொள்ள வேண்டுமென்றால், அதனுடைய தனியனான " எங்கள் கதியே! இராமானுச முனியே!" என்கிற தனியனை நமது மனதில் இருத்த வேண்டும் என்பது ஸ்ரீ காஞ்சி ஸ்வாமியின் திருவுள்ள கருத்து. எம்பெருமானாரின் க்ருபை ஒழிய, வேறேதும் நம்முடைய மனதில் திருமங்கையாழ்வாரின் ஈரச்சொற்களை இருத்தாது. இத்தனியனை அருளிச்செய்தவர் எம்பார். அவரோ எம்பெருமானாரின் நிழல். ஸ்வாமியோ, அவருடைய திருவம்சத்தில் அவதரித்தவர். ஸ்வாமிக்கு அருளிச்செயலின் புலமையை நாம் தான் சொல்ல வேண்டுமோ ? ஆழ்வாரின் சன்னதியில் அனுதினமும் காலை மாலை மெய் உருகி, உள்ளம் கசிந்து தனது மிடற்றோசையால் ஆழ்வாரையும் உருக வைத்தவர். ஸ்வாமியின் அருளிச்செயல் சேவிக்கும் அழகு, நம்முடைய செவிக்கு அழகு.

இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம், குடி கொண்ட கோயில்:

ஸ்வாமி அனுதினமும் வால்மீகி இராமாயணத்தை வாசிப்பார். ஸ்ரீ இராமாயணத்தின் ஆழ்ந்த அர்த்தங்களில் ஈடுபாடு கொண்டவர். ஆந்திர தேசத்தை சேர்ந்த அம்மணி அம்மாள் என்பவர் காஞ்சி ஸ்வாமியிடம் இராமாயணப் பாடம் கேட்க சென்றபோது, அவகாசம் நிலையில் இருந்த ஸ்வாமி, தம்முடைய நிலையை பெண்மணியிடம் தெரிவித்து, இராமாயணத்தை வழுவறக் கற்றவரும், உள்ளபடி சொல்பவரும், அதிகாரியுமான நம் ஸ்வாமியிடம் அனுப்பி வைத்தார்.

குணந்திகழ் கொண்டல்:

ஸ்வாமியின் மேதாவிலாசம் என்றும், ஸ்வாமியின் எளிமையை தடை செய்ததில்லை. மிகவும் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். அனைவரிடமும் இன் சொல் பேசி, தன் வயப்படுத்தி கொள்ளும் ஆற்றல் மிக்கவர். தன்னுடன் பழகுபவரின் சிறுமை பெருமை பாராது எளிமையாக பழகும் பெருமை உடையவர். ஸ்வாமியின் திருவாய் என்றும் புறம் பேசியதில்லை. திருச்செவிகள் என்றும் புறம் கேட்டதில்லை. பொறுமை, எளிமை, பண்பு ஆகிய எண்ணற்ற திருக்கல்யாண குணங்கள் நிரம்பியவர் ஸ்வாமி.

ஸ்வாமியின் வைராக்கியம்:

அடியேனுடைய திருத்தகப்பனாரின் அனுபவம் இது,
தற்காலத்தில், தேவதாந்தரத்தை பூஜிப்பது என்பது வாடிக்கையாகி விட்டது. எம்பெருமான் ஒருவனுக்கே அடிமையான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு தேவதாந்தரம் பஜனம் என்பது அறவே கூடாது. நமது ஸ்வாமியோ, தேவதாந்தர பெயரை கொண்ட நபர்களை, என்றும் அவரது பெயர்களை கொண்டே அழைக்க மாட்டார், மேலும் நம்மிடையே பேசும் போதும் என்றும் தேவதாந்தர பெயர்களை உச்சரிக்க மாட்டார் ஸ்வாமி. அத்தகைய வைராக்கியம் கொண்டவர் ஸ்வாமி.

சிறியேனான அடியேனுக்கும் ஸ்வாமியின் தேஹ சம்பந்தம் ஏற்பட்டது பெரும் பாக்கியம். அடியேனுடைய ப்ர மாதாமஹர் ( தாய் வழி பாட்டனார்) ஸ்வாமி. ஸ்வாமியுடைய சதாப்தி திருநக்ஷ்த்திரத்திலே அடியேன் ஸ்வாமியின் பெருமைகளை சிறிதே எழுதினேன். பிழையிருந்தால் க்ஷமிக்க ப்ரார்த்தனை.

இத்தகைய பெருமை வாய்ந்த ஸ்வாமி அடியேனுடைய உபநயனத்திலும், பஞ்ச சம்ஸ்காரத்திலும் அடியேனை ஆசீர்வதித்தது அடியேனுடைய பெரும் பாக்கியம்.
 

Latest ads

Back
Top