P.J.
0
ஆர்.ஏ.சி.யில் ஓர் இரவும் அரைப்படுக்கை அனுĪ
ஆர்.ஏ.சி.யில் ஓர் இரவும் அரைப்படுக்கை அனுபவமும்!
September 8, 2015
சாயந்திரம்தான் ரயில்வேயிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது. உடனே சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தேன். என்னுடைய வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட், ஆர்.ஏ.சிக்கு பதவி உயர்வு பெற்றிருந்தது. எனக்கு முன்னால் காத்திருப்பு பட்டியலில் இருந்து டிக்கெட்டுகளை ரத்து செய்த 45 பேரும் எனக்கு சாமிகளாகத் தெரிந்தார்கள். டிக்கெட் முன்பதிவு செய்யும்போது எனக்கு முன்னால் பதிவு செய்திருந்த அத்தனை பேருக்கும் நன்றி சொன்னேன்.
ஆனால் அதற்குப் பிறகுதான் ஒன்று உரைத்தது. இருக்கைதான் உறுதியாகி இருக்கிறதே ஒழிய, படுக்கை இன்னும் உறுதியாகவில்லை. மோசமான நிலையில், வேறு ஒருவருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள நேரலாம். 7 அடிப் படுக்கையில், 5 அடியை அவர் ஆக்கிரமிக்க, 2 அடியில் நான் அமர வேண்டி வரலாம்.
முகம் தெரியாத ஆளுடன் பயணிக்க வேண்டி வரும் அபாயத்தை எண்ணி பயந்தவாறே, ரயில் நிலையத்துக்குள் நுழைந்தேன். கம்பார்ட்மென்டில் நுழைந்தவுடனே, அங்கே ஒருவர் இருந்தார். இருவரும் ஒரே சமயத்தில் கேட்டோம்.
'ஆர்.ஏ.சி?'
'ஆமாம்!' - இருவரின் குரல்களும் சேர்ந்து ஒலித்தன.
எங்களின் இக்கட்டான நிலைமை உணர்ந்து, கொஞ்ச நேரம் சிரித்துக்கொண்டே இருந்தோம். சில நிமிடங்களிலேயே அடுத்த ஒன்பது மணி நேரத்துக்கு அந்தப் படுக்கையிலே இருவரும் பயணிக்க வேண்டிய நிர்பந்தம் ஞாபகத்துக்கு வந்தது. அதுவே உறங்கப்போகும் படுக்கையை நோக்கி, எங்களை கொஞ்சம் வேகமாகவே செல்ல வைத்தது.
ஆர்.ஏ.சி. பயணிகளை மற்றவர்கள் புனித நதியில் கிடக்கும் அழுக்கைப்போல நடத்தும் நினைவும் தேவையில்லாமல் வந்து தொலைத்தது. தலையணை, போர்வை, விரிப்புகள் என எதுவுமே எங்களுக்குக் கிடைக்காது. அருகில் வந்த பணியாளரும், "பெட்டியில் இருக்கும் 64 பயணிகளுக்கு மட்டுமேதான் கம்பளி, விரிப்புகள் சரியாக கொடுக்கப்பட்டிருக்கின்றன" என்று கூறி அலட்சியமாக தோள் குலுக்கிவிட்டுப் போனார்.
முன்னரே தயாராகக் கொண்டு வந்திருந்த கம்பளியை எடுத்துக்கொண்டு, எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த பாதிப்படுக்கைக்கு(!) மெல்ல நடந்தேன். எங்களின் மேல் பெர்த் பயணி, மூன்று மணி நேரம் கழித்தே ஏறப்போகிறார் என்பதை எப்படியோ அறிந்துகொண்டு வந்தார் என்னுடைய ஆர்.ஏ.சி நண்பர். என்னிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு மேலே ஏறிப் படுத்துக் கொண்டார்.
இருவரும் உறங்க ஆரம்பித்தோம். ஆ, என்ன ஒரு சுகமான தூக்கம்? கடவுளர்கள் எங்கோ, என்னைத் தூக்கிச் சென்றார்கள். இனிய கனவுகளை அளித்துத் திரும்பவும் விட்டுச் சென்றார்கள்.
அடுத்த சில கண் இமைத்துளிகள் கழிந்திருக்கும். தொண்டை வறண்டு கை, தானாக தண்ணீர் பாட்டிலைத் தேடியது. யாரோ, மின்விசிறியை அணைத்திருந்தார்கள்.
கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். ஓடிக்கொண்டிருந்த முட்கள், மணி இரவு 11.45 என்றன. கண்ணைக் கசக்கியவாறே, எந்த ரயில் நிலையத்தில் இருக்கிறோம் என்பதைப் பார்க்க முயற்சித்தேன். மங்கிய ஒளி வெளிச்சம், அரைகுறையாக அது எந்த இடமென்பதைக் காட்டிக் கொடுத்தது. இந்த இடத்தில்தான் எனது நண்பர் மேல் பெர்த்தில் இருந்து, பழைய தனது ஆர்.ஏ.சி. துயரத்துக்கு திரும்பியாக வேண்டும். ஓர் அசட்டுச் சிரிப்புடன் அவருக்காகக் காத்திருந்தேன். அவரும் சொர்க்கத்தில் இருந்து நரகத்திற்குத் தள்ளப்பட்ட சோகத்துடன் கீழே இறங்கி, ஏக்கத்துடனே என்னைப் பார்த்தார். களைப்பான புன்னகையை இருவருமே பரிமாறிக் கொண்டோம்.
அடுத்த சில நிமிடங்களுக்கு, சரியான நிலையில் படுக்க முயற்சித்து, மிகுந்த சிரமப்பட்டோம். 69 ஆக எதிரெதிர் வரிசையில், ஒரே மாதிரியாக தலை, கால் மாற்றிப் படுக்க முயன்றோம். ''நான் அந்தப்பக்கமாய் கால்களை நீட்டிக் கொள்கிறேன்; நீங்கள் இந்தப்பக்கமாய் நீட்டிக் கொள்ளுங்கள்; பிறகு பிரச்சினை இருக்காது; அடுத்த சில நிமிடங்களில் இருவருமே நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்துவிடுவோம்'' என்றார் நண்பர்.
அப்படியே செய்தேன். ஆனால் தூக்கம் வருவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. 40 கிலோமீட்டர் வேகத்தில் சீராக ஆடிக்கொண்டே சென்று கொண்டிருந்த ரயிலில் திடீரென, இரண்டு கம்பார்ட்மெண்ட்களும் பிரிவது போல தோன்றியது. உடல் கட்டுப்பாட்டை இழந்து, நிலையாக இல்லாத என்னுடைய படுக்கையில் இருந்து பொத்தென்று கீழே விழுந்தேன். ஆச்சரியமாக ரயிலின் தாளமும் நின்றுபோனதாய்த் தோன்றியது.
யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அவசரமாக மேலே எழுந்து பார்த்தேன். கூடாரத்துக்குள் மெல்ல மெல்ல புகுந்து ஆக்ரமித்துக் கொண்ட ஒட்டகம் போல், என் நண்பர் முழு இடத்தையும் ஆக்கிரமித்திருந்தார். இந்த வாய்ப்புக்காகவே காத்திருந்தவர் போல, முழுப் படுக்கையிலும் தனது உடம்பை நீட்டி நன்றாகப் படுத்திருந்தார். இன்னும் நான் கலக்கத்திலிருந்து விடுபடவில்லை.
அய்யோ, இந்தப் படுக்கை கிடைக்க, போன பிறவியில் என்ன பாவம் செய்தேனோ?
என்னுடைய ஒட்டுமொத்த பலத்தையும் ஒன்றுதிரட்டி, தூங்கிக் கொண்டிருக்கும் என்னுடைய எதிரியை (போன நிமிடம் வரைக்கும் நண்பர்தான்!) முன்னுக்குத் தள்ளினேன். ஒருவாறாக, அந்தப்படுக்கையில் - இல்லையில்லை -இருக்கையில் என் உடலை இருத்திக் கொண்டேன்.
மணி மூன்றானது. 7 மணிக்கு, நான் இறங்குமிடம் வரும். அதுவரை, இருக்கும் நான்கு மணி நேரத்தில் ஒழுங்காகத் தூங்க வேண்டும். கடைசியில் ஒரு வழியாக அடித்துப் போட்டது போல் உறங்கினேன். சீக்கிரத்திலேயே நான் இறங்க வேண்டிய இடமும் வந்தது. பேருந்தில் ஏறி வீட்டுக்குச் சென்றேன்.
நீங்கள் கேட்கலாம், ஆட்டோ... எதாவது? இல்லை வேண்டாம்... நன்றி, வணக்கம்!
தமிழில்: க.சே. ரமணி பிரபா தேவி
http://tamil.thehindu.com/opinion/blogs/
ஆர்.ஏ.சி.யில் ஓர் இரவும் அரைப்படுக்கை அனுபவமும்!
September 8, 2015
சாயந்திரம்தான் ரயில்வேயிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது. உடனே சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தேன். என்னுடைய வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட், ஆர்.ஏ.சிக்கு பதவி உயர்வு பெற்றிருந்தது. எனக்கு முன்னால் காத்திருப்பு பட்டியலில் இருந்து டிக்கெட்டுகளை ரத்து செய்த 45 பேரும் எனக்கு சாமிகளாகத் தெரிந்தார்கள். டிக்கெட் முன்பதிவு செய்யும்போது எனக்கு முன்னால் பதிவு செய்திருந்த அத்தனை பேருக்கும் நன்றி சொன்னேன்.
ஆனால் அதற்குப் பிறகுதான் ஒன்று உரைத்தது. இருக்கைதான் உறுதியாகி இருக்கிறதே ஒழிய, படுக்கை இன்னும் உறுதியாகவில்லை. மோசமான நிலையில், வேறு ஒருவருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள நேரலாம். 7 அடிப் படுக்கையில், 5 அடியை அவர் ஆக்கிரமிக்க, 2 அடியில் நான் அமர வேண்டி வரலாம்.
முகம் தெரியாத ஆளுடன் பயணிக்க வேண்டி வரும் அபாயத்தை எண்ணி பயந்தவாறே, ரயில் நிலையத்துக்குள் நுழைந்தேன். கம்பார்ட்மென்டில் நுழைந்தவுடனே, அங்கே ஒருவர் இருந்தார். இருவரும் ஒரே சமயத்தில் கேட்டோம்.
'ஆர்.ஏ.சி?'
'ஆமாம்!' - இருவரின் குரல்களும் சேர்ந்து ஒலித்தன.
எங்களின் இக்கட்டான நிலைமை உணர்ந்து, கொஞ்ச நேரம் சிரித்துக்கொண்டே இருந்தோம். சில நிமிடங்களிலேயே அடுத்த ஒன்பது மணி நேரத்துக்கு அந்தப் படுக்கையிலே இருவரும் பயணிக்க வேண்டிய நிர்பந்தம் ஞாபகத்துக்கு வந்தது. அதுவே உறங்கப்போகும் படுக்கையை நோக்கி, எங்களை கொஞ்சம் வேகமாகவே செல்ல வைத்தது.
ஆர்.ஏ.சி. பயணிகளை மற்றவர்கள் புனித நதியில் கிடக்கும் அழுக்கைப்போல நடத்தும் நினைவும் தேவையில்லாமல் வந்து தொலைத்தது. தலையணை, போர்வை, விரிப்புகள் என எதுவுமே எங்களுக்குக் கிடைக்காது. அருகில் வந்த பணியாளரும், "பெட்டியில் இருக்கும் 64 பயணிகளுக்கு மட்டுமேதான் கம்பளி, விரிப்புகள் சரியாக கொடுக்கப்பட்டிருக்கின்றன" என்று கூறி அலட்சியமாக தோள் குலுக்கிவிட்டுப் போனார்.
முன்னரே தயாராகக் கொண்டு வந்திருந்த கம்பளியை எடுத்துக்கொண்டு, எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த பாதிப்படுக்கைக்கு(!) மெல்ல நடந்தேன். எங்களின் மேல் பெர்த் பயணி, மூன்று மணி நேரம் கழித்தே ஏறப்போகிறார் என்பதை எப்படியோ அறிந்துகொண்டு வந்தார் என்னுடைய ஆர்.ஏ.சி நண்பர். என்னிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு மேலே ஏறிப் படுத்துக் கொண்டார்.
இருவரும் உறங்க ஆரம்பித்தோம். ஆ, என்ன ஒரு சுகமான தூக்கம்? கடவுளர்கள் எங்கோ, என்னைத் தூக்கிச் சென்றார்கள். இனிய கனவுகளை அளித்துத் திரும்பவும் விட்டுச் சென்றார்கள்.
அடுத்த சில கண் இமைத்துளிகள் கழிந்திருக்கும். தொண்டை வறண்டு கை, தானாக தண்ணீர் பாட்டிலைத் தேடியது. யாரோ, மின்விசிறியை அணைத்திருந்தார்கள்.
கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். ஓடிக்கொண்டிருந்த முட்கள், மணி இரவு 11.45 என்றன. கண்ணைக் கசக்கியவாறே, எந்த ரயில் நிலையத்தில் இருக்கிறோம் என்பதைப் பார்க்க முயற்சித்தேன். மங்கிய ஒளி வெளிச்சம், அரைகுறையாக அது எந்த இடமென்பதைக் காட்டிக் கொடுத்தது. இந்த இடத்தில்தான் எனது நண்பர் மேல் பெர்த்தில் இருந்து, பழைய தனது ஆர்.ஏ.சி. துயரத்துக்கு திரும்பியாக வேண்டும். ஓர் அசட்டுச் சிரிப்புடன் அவருக்காகக் காத்திருந்தேன். அவரும் சொர்க்கத்தில் இருந்து நரகத்திற்குத் தள்ளப்பட்ட சோகத்துடன் கீழே இறங்கி, ஏக்கத்துடனே என்னைப் பார்த்தார். களைப்பான புன்னகையை இருவருமே பரிமாறிக் கொண்டோம்.
அடுத்த சில நிமிடங்களுக்கு, சரியான நிலையில் படுக்க முயற்சித்து, மிகுந்த சிரமப்பட்டோம். 69 ஆக எதிரெதிர் வரிசையில், ஒரே மாதிரியாக தலை, கால் மாற்றிப் படுக்க முயன்றோம். ''நான் அந்தப்பக்கமாய் கால்களை நீட்டிக் கொள்கிறேன்; நீங்கள் இந்தப்பக்கமாய் நீட்டிக் கொள்ளுங்கள்; பிறகு பிரச்சினை இருக்காது; அடுத்த சில நிமிடங்களில் இருவருமே நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்துவிடுவோம்'' என்றார் நண்பர்.
அப்படியே செய்தேன். ஆனால் தூக்கம் வருவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. 40 கிலோமீட்டர் வேகத்தில் சீராக ஆடிக்கொண்டே சென்று கொண்டிருந்த ரயிலில் திடீரென, இரண்டு கம்பார்ட்மெண்ட்களும் பிரிவது போல தோன்றியது. உடல் கட்டுப்பாட்டை இழந்து, நிலையாக இல்லாத என்னுடைய படுக்கையில் இருந்து பொத்தென்று கீழே விழுந்தேன். ஆச்சரியமாக ரயிலின் தாளமும் நின்றுபோனதாய்த் தோன்றியது.
யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அவசரமாக மேலே எழுந்து பார்த்தேன். கூடாரத்துக்குள் மெல்ல மெல்ல புகுந்து ஆக்ரமித்துக் கொண்ட ஒட்டகம் போல், என் நண்பர் முழு இடத்தையும் ஆக்கிரமித்திருந்தார். இந்த வாய்ப்புக்காகவே காத்திருந்தவர் போல, முழுப் படுக்கையிலும் தனது உடம்பை நீட்டி நன்றாகப் படுத்திருந்தார். இன்னும் நான் கலக்கத்திலிருந்து விடுபடவில்லை.
அய்யோ, இந்தப் படுக்கை கிடைக்க, போன பிறவியில் என்ன பாவம் செய்தேனோ?
என்னுடைய ஒட்டுமொத்த பலத்தையும் ஒன்றுதிரட்டி, தூங்கிக் கொண்டிருக்கும் என்னுடைய எதிரியை (போன நிமிடம் வரைக்கும் நண்பர்தான்!) முன்னுக்குத் தள்ளினேன். ஒருவாறாக, அந்தப்படுக்கையில் - இல்லையில்லை -இருக்கையில் என் உடலை இருத்திக் கொண்டேன்.
மணி மூன்றானது. 7 மணிக்கு, நான் இறங்குமிடம் வரும். அதுவரை, இருக்கும் நான்கு மணி நேரத்தில் ஒழுங்காகத் தூங்க வேண்டும். கடைசியில் ஒரு வழியாக அடித்துப் போட்டது போல் உறங்கினேன். சீக்கிரத்திலேயே நான் இறங்க வேண்டிய இடமும் வந்தது. பேருந்தில் ஏறி வீட்டுக்குச் சென்றேன்.
நீங்கள் கேட்கலாம், ஆட்டோ... எதாவது? இல்லை வேண்டாம்... நன்றி, வணக்கம்!
தமிழில்: க.சே. ரமணி பிரபா தேவி
http://tamil.thehindu.com/opinion/blogs/