• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அர்ஜுனன் சொன்னது

அர்ஜுனன் சொன்னது

ஸ்ரீமத்பகவத்கீதை - அத்தியாயம்-18 - அர்ஜுனன் சொன்னது
-
18.1 ஹிருஷீகேசா, மகாபாகுவே,கேசிநிஷீதா, சந்நியாசத்தினுடையவும்,தியாகத்தினுடையவும் தத்துவத்தை தனித்தனியே தெரிந்துகொள்ள விரும்புகிறேன்
-
18.2 ஸ்ரீபகவான் சொன்னது
ஞானிகள் ஆசையோடு கூடிய கர்மங்களை துறப்பதை சந்நியாசம் என்று சொல்கிறார்கள். தீர்க்கதரிசிகள் எல்லா கர்மத்தின் பலனையும் துறப்பதையே தியாகம் என்று கூறுகிறார்கள்.
-
18.3 சில அறிஞர்கள் எல்லா கர்மங்களும் குற்றமுடையவை எனவே துறக்கப்பட வேண்டியது என்கிறார்கள். இன்னும் சிலர் யக்ஞம்.தானம்,தபம் ஆகிய கர்மங்களை துறக்கக்கூடாது என்கிறார்கள்
-
18.4 பரதகுலத்தில் சிறந்தவனே, புருஷனில் சிறந்தவனே, தியாகத்தை குறித்து என்னுடைய சித்தாந்தத்தை கேள். தியாகமானது மூன்றுவிதமானதென்று சொல்லப்படுகிறது
-
18.5 கர்மயக்ஞம்,தானம்,தபம் ஆகிய கர்மம் துறக்கப்படவேண்டியதில்லை.அது செய்யப்படவேண்டியதே. யக்ஞமும். தானமும்,தபமுமே அறிஞர்களுக்கு தூய்மை தருபவை
-
18.6 பார்த்தா, இந்த கர்மங்கள் அனைத்தையும்கூட பற்றுதலையும், பயனையும் ஒழித்து செய்யப்படவேண்டியவைகள் என்பது என்னுடைய நிச்சயமான உத்தமமான கொள்கை
-
18.7 மேலும். நித்தியகர்மத்தை விடுவது அறிவுடைய செயலல்ல. அறிவின்மையால் அதை துறப்பது தாமஸமென்று கூறப்படுகிறது
-
18.8 உடல் வேலைக்கு அஞ்சி, கர்மத்தை துன்பம் என கருதி அதை விடுவது ராஜஸம். அவன் தியாகத்தின் பலனை அடைவதே இல்லை
-
18.9 அர்ஜுனா, பற்றுதலையும்,பயனையும் தியாகம் செய்து, செய்வதற்குரியதென்று எந்த நித்திய கர்மம் செய்யப்படுகிறதோ. அந்த தியாகமானது சாத்திவிகமானது என்று கருதப்படுகிறது
-
18.10 சத்வம் மேலோங்கப்பெற்றவனும், மேதாவியும், சந்தேகத்தை அகற்றியவனும் ஆகிய தியாகியானவன் துன்பம்தரும் கர்மத்தை வெறுக்கமாட்டான். இன்பம் தரும் கர்மத்தை விரும்பமாட்டான்
-
18.11 உடலெடுத்துள்ள ஜீவனால் எல்லா கரமங்களையும் முற்றிலும் விடுவது சாத்தியமில்லை. ஆனால் யார் வினைப்பயனை துறந்தவனோ அவன் தியாகி என்று சொல்லப்படுகிறான்
-
18.12 தியாகம் பண்ணாதவனுக்கு மரணத்திற்குப்பிறகு, இஷ்டமில்லாதது,இனியது,இவ்விரண்டும் கலந்தது என மூன்றுவிதமான வினைப்பயன் உண்டாகிறது. ஆனால் கர்மத்தை துறந்த தியாகிகளுக்கு ஒருபொழுதும் மூன்றுவித வினைப்பயன் உண்டாவதில்லை
-
18.13 மஹாபாஹோ, கர்மம் இது என்று கூறுகின்ற சாங்கியத் தத்துவத்தில் உள்ள எல்லா கர்மங்களினுடைய நிறைவு சொல்லப்பட்டுள்ளது. இந்த ஐந்து காரணங்களை என்னிடமிருந்து அறிந்துகொள்
-
18.14 (தேகியின்) இருப்பிடமாகிய உடல், கர்த்தா, பலவிதமான இந்திரியங்கள்,பலவிதமான செயல்கள்,ஐந்தாவதாக தெய்வமும் காரணங்களாகின்றன
-
18.15 மனிதன் உடலால்,வாக்கால்,மனத்தால் நியாயமான அல்லது விபரீதமான எக்கர்மத்தை தொடங்கினாலும், இந்த ஐந்தும் அதற்கு காரணங்கள் ஆகும்
-
18.16 அது அப்படியிருக்க. யார் இனி முழுமுதற்பொருளாகிய ஆத்மாவை(தன்னை) கர்த்தாவாக காண்கிறானோ, புத்தி தெளிவில்லாத அவன் உண்மையை பார்ப்பதில்லை
-
18.17 யாருக்கு நான் கர்த்தா என்ற எண்ணம் இல்லையோ, யாருடைய புத்தி பற்றுவைப்பதில்லையோ. அவன் இவ்வுலகத்தாரை கொன்றாலும் கொல்லாதவனே, பந்தப்படாதவனே
-
18.18 ஞானம்(அறிவு), ஞேயம்(அறியப்படும் பொருள்),அறிபவன் என கர்மத்திற்கு தூண்டுதல் மூன்றுவிதம். கருவி,
கர்மம், கர்த்தா(செய்பவன்) என கர்மபற்றிற்கு இருப்பிடம் மூன்றுவிதம்
-
18.19 ஞானமும், கர்மமும்,கர்த்தாவும் குணபேதத்தினால் மூன்றுவிதம் என்றே குணங்களைப்பற்றி கூறும் சாங்கிய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவைகளையும் உள்ளபடி கேள்
-
18.20 வேறுவேறாக உள்ள பூதங்களில், வேறுபடாத அழியாத ஒரு வஸ்துவை(ஆத்மாவை) எதனால் பார்க்கிறதோ அந்த ஞானத்தை சாத்விகமென்று அறி
-
18.21 பின்பு எந்த ஞானமானது எல்லா பூதங்களிலும் வெவ்வேறுவிதமான பல உயிர்களை தனித்தனியாக அறிகிறதோ, அந்த ஞானம் ராஜஸம் என்று அறிந்துகொள்
-
18.22 ஒரு பகுதியை முழுவதும் பற்றிக்கொண்டு,யுக்திக்குப் பொருந்தாததாகவும், உண்மைக்கு ஒவ்வாததாகவும், அற்பமாகவும் உள்ள ஞானம் எதுவோ அது தாமஸம் எனப்படுகிறது
-
18.23 பயனில் விருப்பம் வைக்காதவனால் பற்று இல்லாமல், விருப்பு, வெறுப்பின்றி தனக்காக நியமிக்கப்பட்டுள்ள கர்மத்தை செய்வது, சாத்வீகமானது என்று சொல்லப்படுகிறது
-
18.24 ஆசைவசப்பட்டவனாய், மேலும் அகங்காரம் உடையவனாய், அதிக முயற்சியுடன் எந்த கர்மம் செய்யப்படுகிறதோ, அது ராஜஸமானது என்று சொல்லப்படுகிறது
-
18.25 வினையின் விளைவையும், நஷ்டத்தையும், துன்பத்தையும், தன் திறத்தையும் எண்ணிப்பார்க்காமல் மயக்கத்தால் எக்கர்மம் தொடங்கப்படுகிறதோ அது தாமஸம் எனப்படும்
-
18.26 பற்று நீங்கியவன், அஹங்காரமற்றவன், உறுதியும் ஊக்கமும் உடையவன் வெற்றி தோல்வியில் வேறுபடாதவன் இத்தகைய கர்த்தா, சாத்விகமானது என்று சொல்லப்படுகிறது
-
18.27 ஆசையுள்ளவன், வினைப்பயனை விரும்புபவன், பிறர்பொருளை விரும்புபவன், துன்புறுத்தும் தன்மையுடையவன், சுத்தமில்லாதவன், மகிழ்வும் சோர்வும் கொள்பவன், அத்தகைய கர்த்தா ராஜஸன் என்று சொல்லப்படுகிறான்
-
18.28 யோகத்திற்கு ஒவ்வாத மனமுடையவன், அறிவு வளரப்பெறாதவன், முரடன்,வஞ்சகன், பழிகாரன், சோம்பேரி, துயருறுபவன், காலம் நீட்டிப்பவன், இத்தகைய கர்த்தா தாமஸன் என்று சொல்லப்படுகிறான்
-
18.29 தனஞ்சயா, புத்தியினுடையவும், அங்ஙனமேயுள்ள உறுதியினுடையவும் குணங்களுக்கேற்ற மூன்றுவிதமான பேதத்தை தனித்தனியாய் பாக்கியில்லாமல் சொல்கிறேன் கேள்
-
18.30 பார்த்தா, பிரவிருத்தியையும், நிவிர்த்தியையும், செய்யத்தகுந்த காரியத்தையும் செய்யக்கூடாத காரியத்தையும், பயத்தையும், பயமின்மையையும், பந்தத்தையும், மோக்ஷத்தையும் எது அறிகிறதோ அந்த புத்தி சாத்திவிகமானது
-
18.31 பார்த்தா, தர்மத்தையும், அதர்மத்தையும் செய்யக்கூடிய காரியத்தையும், செய்யக்கூடாத காரியத்தையும் சரியாக அறியாத புத்தி ராஜஸமானது
-
18.32 பார்த்தா, அக்ஞான இருளால் மூடப்பெற்ற எந்த அறிவானது அதர்மத்தை தர்மமாகவும், பொருட்களையெல்லாம் விபரீதமாகவும்(அதர்மமாகவும்) நினைக்கிறதோ அது தாமஸமானது
-
18.33 பார்த்தா, ஒருமை மனத்தைக்கொண்டு பிறழாத எந்த உறுதியால் மனம்,பிராணன்,இந்திரியங்களின் செயல்களை ஒருவன் நெறிப்படுத்துகிறானோ, அந்த ஊறுதியானது சாத்வீகமானது
-
18.34 பார்த்தா, எந்த உறுதியினால், அறம்,இன்பம்,பொருள் ஆகியவைகளை காக்கிறானோ, பெரும் பற்றுதலால் பயனை விரும்புபவனாகிறானோ. அந்த உறுதியானது ராஜஸமானது
-
18.35 பார்த்தா, தூக்கத்தையும், பயத்தையும், துயரத்தையும், மனக்கலக்கத்தையும், செருக்கையும் விடாமல் பிடிக்கும் அறிவிலியின் உறுதியானது தாமஸமானது
-
18.36 பார்த்தா, எந்த பயிற்சியால், இன்பமடைகிறானோ, துக்கத்தின் முடிவை அடைகிறானோ,அந்த மூன்றுவிதமான சுகத்தை சொல்கிறேன் கேள்
-
18.37 எது முதலில் விஷம் போலவும் முடிவில் அமிர்தத்திற்கு ஒப்பானதும் ஆகிறதோ அந்த சுகம் சாத்விகம். ஆத்மநிஷ்டையில் தெளிவடைந்த புத்தியில் அது தோன்றுகிறது
-
18.38 இந்திரியங்கள் மூலம் இந்திரியார்த்தங்களை அனுபவிப்பதால் முதலில் அமிர்தம் போலவும் முடிவில் விஷம் போலவும் வரும் சுகம் எதுவோ அது ராஜஸம் என சொல்லப்படுகிறது
-
18.39 எந்த சுகம் துவக்கத்திலும் முடிவிலும் தனக்கு மயக்கத்தை உண்டுபண்ணுகிறதோ, சோம்பல்,தடுமாற்றம் இவற்றிலிருந்து பிறக்கும் அது தாமஸம் என்று சொல்லப்படுகிறது
-
18.40 பிரகிருதியிலிருந்து உதித்த இந்த மூன்று குணங்களிலிருந்து விடுதலையடைந்த, அந்த சுத்த ஸத்துவம் பூவுலகிலோ அல்லது தேவலோகத்தில் தேவர்களுக்கிடையிலோ இல்லை
-
18.41 எதிரிகளை எரிப்பவனே, பிராம்மண, சத்திரிய, வைசிய, சூத்திரர்களுடைய கர்மங்கள் ஸ்வபாவத்திலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டிருக்கிறது
-
18.42 அந்தக்கரணங்களை அடக்குதல், புறக்கரணங்களை அடக்குதல்,தவம்,தூய்மைஈபொறுமைஈநேர்மை,சாஸ்திரஞானம்,விக்ஞானம்,கடவுள் நம்பிக்கை இவையாவும் பிராமணனுக்கு ஸ்வபாவத்தில் உண்டான கர்மங்களாகும்
-
18.43 சூரத்தன்மை, துணிவு, உறுதி, சாதுர்யம், போரில் புறங்காட்டமை,தானம், ஈஸ்வரத்தன்மை இவைகள் சத்திரியங்களுக்கு ஸ்வபாவத்தில் உண்டான கர்மங்களாகும்
-
18.44 உழவும், கால்நடை காத்தலும், வண்கமும் இயல்பாயுண்டாகிய வைசிய கர்மங்கள். முதலாளி சொல்லும் பணியை செய்வது சூத்திரனுக்கு இயல்பாய் உண்டான கர்மம்
-
18.45 அவனவனுக்குரிய கர்மத்தில் இன்புறுகின்ற மனிதன் நிறைநிலையை அடைகிறான். தன் கர்மத்தில் கருத்து வைப்பவன் எப்படி பரிபூரணத் தன்மையை அடைகிறான் அதைக்கேள்
-
18.46 யாரிடத்திலிருந்து உயிர்கள் உற்பத்தியாயினவோ, யாரால் இவ்வையகம் எல்லாம் வியாபிக்கப்பட்டுள்ளதோ அவரை மனிதன் தனக்குரிய கர்மத்தால் அவரை வணங்கி சித்தியடைகிறான்
-
18.47 குறையில்லாத பிறருடைய தர்மத்தைவிட குறையுள்ளதாக இருந்தாலும், தன்னுடைய தர்மம் சிறந்தது. சுவபாவத்தில் அமைந்த கர்மத்தை செய்பவன் கேடு அடைவதில்லை
-
18.48 குந்தியின் மைந்தா, குறை உடையதாக இருந்தாலும். தன்னுடன் பிறந்த கர்மத்தை விடக்கூடாது. ஏனென்றால் தீ புகையால் சூழப்பட்டிருப்பதுபோல் எல்லா கர்மங்களும் குறைகளால் சூழப்பட்டிருக்கிறது
-
18.49 எங்கும் பற்றற்ற புத்தியுடையவனாய், சிந்தையை அடக்கியவனாய், ஆசையற்றவனாய், சந்நியாசத்தால் உயர்ந்த கர்மமற்ற நிலையை அடைகிறான்
-
18.50 குந்தியின் மகனே, செயலற்ற நிலையை அடைந்தவன் எப்படி ஞானத்தின் மேலான வடிவாகிய பிரம்மத்தை அடைகிறானோ, அதை சுருக்கமாக சொல்கிறேன் கேள்
-
18.51 பரிசுத்தமான புத்தியுடன் கூடியவனாய், உறுதியுடன், உடலையும், உள்ளத்தையும் அடக்கி, சப்தம் முதலிய இந்திரிய விஷயங்களை துறந்து விருப்பு, வெறுப்பை துறந்து
-
18.52 தனித்திருப்பவனாய், குறைவாக உண்பவனாய், வாக்கையும், உடலையும் மனத்தையும் அடக்கியவனாய், எப்பொழுதும் தியான யோகத்தில் விருப்பமுள்ளவனாய், வைராக்கியத்தை அடைந்தவனாய்,
-
18.53 அகங்காரம், வன்மை, செருக்கு, காமம், குரோதம்,தனக்கென்று எதுவும் இல்லாமல், நான் செய்கிறேன் என்ற எண்ணமின்றி, சாந்தமாக இருப்பவன் பிரம்மமாவதற்கு தகுந்தவனாகிறான்
-
18.54 பிரம்மஞானத்தில் உறுதிபெற்று தெளிந்த மனமுடையவன் துயருறுவதில்லை, ஆசைப்படுவதில்லை, எல்லா உயிர்களிடத்தும் ஸமமாக இருப்பவன் என்னிடத்தில் மேலான பக்தியை அடைகிறான்
-
18.55 நான் எத்தன்மையுடையவனாக இருக்கிறேன் என்று பக்தியினால் உள்ளபடி அறிகிறான். அதன்பிறகு என்னை உள்ளபடி அறிந்து, விரைவில் என்னிடம் ஐக்கியமாகிறான்
-
18.56 எப்பொழுதும் எல்லா கர்மங்களையும் செய்தபோதிலும், என்னை சரணடைகிறவன் எனது அருளால் நித்தியமாயிருப்பதும், அவ்யயம் ஆகிய நிலையை அடைகிறான்
-
18.57 விவேகத்தால் கர்மங்களையெல்லாம் என்னிடம் ஒப்படைத்து, என்னை குறிக்கோளாகக்கொண்டு, புத்தியோகத்தை சார்ந்திருந்து எப்பொழுதும் சித்தத்தை என்னிடம் வைத்தவனாக இரு
-
18.58 நீ சித்தத்தை என்னிடம் வை, எனது அருளால் எல்லா இடஞ்சல்களையும் தாண்டி செல்வாய். அகங்காரத்தால் கேட்காமல் இருந்தால் கேடு அடைவாய்
-
18.59 அகங்காரத்தை அடைந்து போர்புரியமாட்டேன் என்று நினைத்தால், உன்னுடைய துணிவு பொய்யாகி போகும். உன் இயல்பு உன்னை போரிபுரிய பிணைத்து இழுக்கும்
-
18.60 குந்தியின் மகனே மோஹத்தால் எதைச் செய்ய மறுக்கிறாயோ, உன் இயல்பில் பிறந்த கர்மத்தால் கட்டுண்டவனாய், உன் வசமில்லாதவனாய் அதையே செய்வாய்
-
18.61 அர்ஜுனா, ஈஸ்வரன் எல்லா உயிர்களையும் மாயை என்னும் எந்திரத்தில் ஏற்றி ஆட்டிவைத்துக்கொண்டு, உயிர்களுடைய ஹிருதயத்தில் இருக்கிறார்
-
18.62 பாரதா, எல்லா வகையிலும், அவனையே சரணடை, அவருடைய கருணையால் மேலான சாந்தியையும் நிலையான வீடுபேற்றையும் அடைவாய்
-
18.63 இங்ஙனம் ரகசியங்களுக்கெல்லாம் ரகசியமான ஞானம் உனக்கு. என்னால் சொல்லப்பட்டது. இதை முழுவதும் ஆராய்ந்து எப்படி விரும்புகிறாயோ அப்படி செய்
-
18.64 என்னுடைய எல்லா ரகசியங்களிலும், மேலான வார்த்தைகளை திரும்பவும் கேள். எனக்கு பிடித்தமானவனாய் இருக்கிறாய். ஆகையால் உனக்கு நலத்தை தருகிறேன்
-
18.65 என்னிடம் மனதை வைத்தவனாய், என்னிடம் பக்தி செலுத்தியவனாய் என்னை வணங்கு, என்னையே அடைவாய். நான் உனக்கு உண்மையாக உறுதியாக கூறுகிறேன். எனக்கு பிரியமானவனாய் இருக்கிறாய்
-
18.66 எல்லா தர்மங்களையும் துறந்துவிட்டு என்னையே சரணடைவாயாக. நான் உன்னை எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிப்பேன். வருந்தாதே
-
18.67 இந்த உபதேசத்தை, பக்தியில்லாதவனுக்கும், சேவை செய்யாதவனுக்கும், என்னை நிந்திக்கிறவனுக்கும் சொல்லாதே
-
18.68 யார் மிக ஆழ்ந்த இந்த தத்துவத்தை என் பக்தர்களிடம் போதிக்கிறானோ, என்னிடம் மேலான பக்தி செய்பவன், சந்தேகமில்லாமல் என்னையே அடைவான்
-
18.69 மனிதர்களுள் யார் எனக்கு பிரியமானதை செய்கிறானோ, அவனைவிட எனக்கு அதிக பிரியமானவன் இந்த புவியில் யாரும் இல்லை
-
18.70 மேலும், யார் நமது இந்த தர்மம் நிறைந்த உரையாடலை கற்றறிகிறானோ, அவனால் நான் ஞானயக்ஞத்தால் ஆராதிக்கப்பெற்றவன் ஆகிறேன். இது எனது கருத்து
-
18.71 சிரத்தையுடையவனாகவும், அவமதிப்பில்லாதவனாகவும் எம்மனிதன் கேட்கிறானோ, அவனும் விடுதலையடைந்தவனாய் புண்ணிய கர்மம் செய்பவர்களுடைய நல்லுலகங்களை அடைவாய்
-
18.72 பார்த்தா, உன்னால் ஒருமை மனத்துடன், இது கேட்கப்பட்டதா? உன்னுடைய அறியாமையிலிருந்து உதித்த குழப்பம் அழிந்ததா?
-
18.73 அர்ஜுனன் சொன்னது
அர்சுதா, மயக்கம் ஒழிந்தது. உமது அருளால் அறிவு வந்துள்ளது. உறுதி வந்துள்ளது. சந்தேகங்கள் போய்விட்டன. உமது சொற்படி செய்வேன்
-
18.74 ஸஞ்சயன் சொன்னது
நான் இங்ஙனம், வாசுதேவருக்கும் மகாத்மாவான பார்த்தனுக்கும் நிகழ்ந்த அற்புதமான உரையாடலை கேட்டேன்
-
18.75 நான் வியாச பகவானுடைய அருளால் இந்த மேலான ரகசியத்தை, தாமே சொல்லுபவராகிய யோகேஷ்வரனாகிய கிருஷ்ணரிடமிருந்து நேரே கேட்டேன்
-
18.76 அரசே கேசவருக்கும், அர்ஜுனனுக்கும் நடந்த புண்ணியமும் அற்புதமும் கலந்த உரையாடலை நினைத்து நினைத்து திரும்பத்திரும்ப மகிழ்வடைகிறேன்
-
18.77 அரசே ஹரியினுடைய அந்த அற்புத வடிவத்தை எண்ணி எண்ணி எனக்கு இன்னும் பெரும் வியப்பு உண்டாகிறது. மேலும் மேலும் மகிழ்வடைகிறேன்
-
18.78 யோகேஷ்வரக் கிருஷ்ணனும் தனுசைத் தாங்கிய பார்த்தனும் எங்கு உள்ளனரோ அங்கு, ஸ்ரீயும்,வெற்றியும்,பெருக்கும், நிறைந்த நியாயமும் இருக்கும் என்பது என்னுடைய கொள்கை
-
அத்தியாயம் பதினெட்டு நிறைவுற்றது
 

Latest ads

Back
Top