அதிசயப் பறவைத் தமிழன்!!!

Status
Not open for further replies.
அதிசயப் பறவைத் தமிழன்!!!

1.1278236518.a-flock-of-birds.webp
தமிழ் இலக்கியத்தில் உள்ள ஒரு அதிசயப் பறவை மனிதன் பற்றிப் பலருக்கும் தெரியாது. இது 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம். பரணர் என்ற ஒரு பெரிய கவிஞர் மட்டும் இந்த விஷயத்தை விடாமல் நாலைந்து பாடல்களில் பாடிவிட்டார். பரணர் வாயால் ஒருவர் பாராட்டப்பட வேண்டும் என்றால் அவருக்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாராட்டப் போன போது “பரணன் படினன் கொல்” என்று வியப்படைகிறார் அவ்வையார். நீ பரணனால் பாராட்டப் பட்டவன் ஆயிற்றே (புறம் 99) என்று.

கபிலர்-பரணர் என்று இரண்டு புலவர்களை இணத்தே பேசுவார்கள். சேர மன்னன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனோவெனில் தனது மகனையே பரணரிடம் ஒப்படைத்து நீயே கல்வி கற்பி என்று குருகுல வாசத்துக்கு அனுப்பிவிட்டான். இவ்வளவு பெருமை உடைய ஒருவர் வாயால் பாராட்டப்பட்ட அதிசயப் பறவை மனிதன் யார் தெரியுமா? அவன் பெயர் ஆய் எயினன். அவன் மிஞிலி என்பவனுடன் போரிட்டு உயிர் துறந்தான். அவன் உடல் மீது சூரிய ஒளி பட்டால் உடல் வாடுமே என்று அவன் மீது பறவைகள் ஒன்றுகூடி ப் பறந்து நிழல் செய்தன. இது சங்க காலத்தில் பெரும் அதிசயமாகக் கருதப் பட்டிருக்க வேண்டும். இல்லாவிடில் பரணர் போன்ற ஒரு பெரும் புலவர் இப்படி பல பாடல்கள் பாடமாட்டார்.

ஆய் எயினன் கதை ஒரு சுவையான, ஆனால் சோகமான கதை. அவன் நன்னன் என்பவனின் ஆருயிர் நண்பன். நன்னனை வேறு ஒருவன் எதிர்த்தபோது அவனுடைய ஊரை பாதுகாக்க எயினன் சென்றான். அப்போதுதான் மிஞிலியுடன் போரிட்டு உயிரிழக்க நேரிட்டது. நண்பனுக்கு உதவப் போய் இந்த கதி. தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் நண்பனுக்கு உதவியதால்தான் பறவைகளும் அனுதாபம் தெரிவித்தன போலும். எயினனின் மனைவியர் துயறுற்று அழுதபோது அகுதை என்பவன் மட்டும் வந்து மிஞிலியை தோற்கடித்து அவர்களுக்கு உதவினான்.


அகநானூற்றின் பாடல்களில் மேல் விவரங்களைக் காணலாம்:அகம். 148,181, 208, 396 புறம் 351

கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்

நெடுந்தேர் ஞிமிலியொடு பொருது, களம்பட்டென
காணிய செல்லாக் கூகை நாணிக்
கடும் பகல் வழங்கா தாஅங்கு....... (அகம்.148,பரணர்)

பொருள்: எயினனுக்கு நிழல் குடை பிடிக்க எல்லா பறவைகளும் போயின. ஆனால் கூகைக்குப் பகலில் கண் தெரியாது என்பதால் அந்தப் பறவை மட்டும் போக முடியவில்லை. அதற்காக அது வெட்கப்பட்டது.

ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
ஒண்கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு
விசும்பிடை தூர ஆடி, மொசிந்தூடன் (அகம்.181,பரணர்)

பொருள்: ஆய் எயினன் முருகப் பெருமானைப் போன்ற ஆற்றலுடன் நின்று மிஞிலியுடன் போரிட்டான்.இறுதியில் விழுப்புண்பட்டு வீழ்ந்தனன். கதிரவனின் ஒளிய கதிர்கள் அந்த ஆயின் மேல் படாதவாறு மறையும்படிப் புதிய பறவைகள் வானத்தில் ஒன்றாகக் கூடின. வானத்தில் வட்டமிட்டன.

அதிசயப் பறவைப் பெண்

உலகப் புகழ்பெற்ற சம்ஸ்கிருத கவிஞன் காளிதாசனின் மிக உன்னத படைப்பு சாகுந்தலம் என்னும் நாடகமாகும். அதில் உள்ள கதா நாயகி சகுந்தலா அதிசயப் பறவைப் பெண்ணாவாள். விசுவாமித்திரரும் மேனகையும் பிறந்த குழந்தையைக் காட்டில் விட்டு விட்டுப் போய்விட்டார்கள். கண்வர் என்ற மகரிஷி அந்தப் பக்கம் வந்த போது பறவைகளே உணவு ஊட்டி வளர்த்த பச்சிளம் குழந்தையைக் கண்டு வளர்ப்பு மகளாக வளர்த்தார். அந்தப் பெண் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டுவது என்று யோசித்தபோது அவருக்கு பறவைப் பெண்=சகுந்தலா என்ற பெயரே பொருத்தமாகப் பட்டது. உன்னைப் பறவைகளே ஊட்டி வளர்த்ததால் உனக்கு இப்படி பெயர் வைக்கிறேன் என்று அவரே சொல்லுகிறார்.( ஆலமரப் பறவைகளின் ஒலியை ஸ்ரீ ராமர் அடக்கியது உள்பட ஏனைய பறவைச் செய்திகளை அனிமல் ஐன்ஸ்டைன் Animal Einsteins Part 1 and Part 2 என்ற ஆங்கிலக் கட்டுரையின் இரண்டு பகுதிகளில் காண்க).

சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த பறவை அதிசயம்

திருவண்ணாமலை சாது சந்யாசிகளுக்குப் பெயர் பெற்ற திருத்தலம். அருணகிரிநாதர், ரமண மகரிஷி முதலிய எத்தனையோ ஆன்மீகப் பெரியார்களின் பாத துளிகள் பட்ட புனித ஊர். அங்கு சேஷாத்ரி சுவாமிகள் (1870-1929) என்ற மகான் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை. அதில் ஒன்று பறவை அதிசயம். வெங்கடாசல முதலியாரும் அவருடைய மனைவி சுப்புலெட்சுமி அம்மாளும் சுவாமிகளின் பரம பக்தர்கள். ஒரு அமாவாசை நாளன்று மாலை சுமார் 4 மணிக்கு முதலியார் வீட்டுக்கு சுவாமிகள் வந்தார். “சுப்புலட்சுமி இங்கு வா, ஒரு வேடிக்கை காண்பிக்கிறேன்” என்று சுவாமிகள் சொன்னவுடன் அவர் என்ன வேடிக்கை என்று கேtடுகொண்டே வந்தார். அவர்கள் வீட்டில் 3 மரங்கள் இருந்தன. சுவாமிகள் “பார் உனக்குப் பறவைகளைக் காட்டுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே வானத்தைப் பார்த்து வா என்று சைகை செய்தார். ஒரு காகம் வந்தது. தொடர்ந்து அவர் கூப்பிடk கூப்பிட பறவைகளின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் பெருகிவிட்டன. காக்கை, குருவி,கிளி, புறா, மஞ்சள் குருவி, நாகணவாய் என்று வித விதமான பறவைகள் வந்துவிட்டன. பக்கத்து வீடுகளில் எல்லாம் பறவைகள் உட்கார்ந்து குரல் எழுப்பின. சுப்புலட்சுமி அம்மாள்,, அடடா, மாலை வேளையில் இப்படிப் பறவைகளைக் கூப்பிடுகிறீர்களே. அவைகள் எல்லாம் குஞ்சுகளைப் பார்க்க கூட்டுக்குப் போக வேண்டாமா என்று கேட்கவே, அப்படியா இதே போகச் சொல்கிறேன் என்று சுவாமிகள் சொன்னார். துண்டின் ஒரு நூலை எடுத்து வாயால் ஊதிப் போ என்றவுடன் அவ்வளவு பறவைகளும் பறந்தோடிப் போய்விட்டன. விக்ரமாத்திதன் கதையில் படிப்பது போல சுவாமிகளுக்கும் பறவைகளின் மொழி தெரியும் போலும்!!

ஆல்ப்ரெட் ஹிட்ச்காக்கின் பறவைகள் (Alfred Hitchcock’s film The Bird ) என்ற படத்தைப் பார்த்தவர்களுக்கு ஏராளமான பறவைகள் என்றால் என்ன என்பது எளிதில் விளங்கும்.

*****************
 
Status
Not open for further replies.
Back
Top