• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோயிலில் சிறப்பு உற்சவ நிகழ்ச்சிகள்

praveen

Life is a dream
Staff member
திருவல்லிக்கேணி ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோயிலில் இந்த ஆண்டு அடுத்த ஒரு சில வாரத்திற்கு தொடர்ந்து ,தினமும் நடைபெற உள்ள சிறப்பு உற்சவ நிகழ்ச்சிகள்:-

திரு அத்யயன உற்சவகாலத்தில் , பகல்பத்தின் பத்து நாள்களும் அருளிச்செயல் கோஷ்டி ( முதலாயிரமும், இரண்டாம் ஆயிரமும் ) முடிந்த பின்னர் திருக்கோயிலுக்குள் ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி விதம் விதமான திருக்கோலத்தில் உள் புறப்பாடு கண்டருளுவார்.

வைகுண்ட ஏகாதசி அன்று தொடங்கி பத்து நாள்கள் நடைபெரும் இராப்பத்து உற்சவத்தில் பெரிய மாடவீதி புறப்பாடு , ஸ்ரீ.நம்மாழ்வாருடன் தினசரி கண்டருளுவார். வீதியில் உபதேஸரத்னமாலை அருளிச்செயல் கோஷ்டியாகும். பின்னர் திருக்கோயிலுக்குள் எழுந்தருளி, திருவாய்மொழி மண்டபத்தில் தினசரி ஒரு பத்து வீதம் திருவாய்மொழி ஆகும். பத்தாம் நாள் திருவாய்மொழியின் பத்தாம் பத்து பாசுரம் ஸேவையாகி, ஸ்ரீ.நம்மாழ்வார், ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி திருவடி தொழல் நிகழ்ச்சியில் பத்தர்களுக்கு அற்புத ஸேவை கிடைக்கும்.

21 ஆம் நாள் இயற்பாவின் அனைத்து பாசுரங்களும் ஸேவையாகும்.

இப்படி அற்புதமாக திருஅத்யயன உற்சவம் முடிந்த நிலையில் , இந்த ஆண்டு ஸ்ரீ.கஜேந்திர வரதர் ஹஸ்த நக்ஷத்திரத்தன்று சிறிய திருவீதி புறப்பாடு கண்டருளினார். அடுத்து ஜனவரி மாதம் முதல் நாள் ஸ்ரீ.தெள்ளியஸிங்கரின் திருநக்ஷத்திரமான ஸ்வாதி நக்ஷத்திரம் ஆனதால் அன்று ஸ்ரீ.தெள்ளியஸிங்கர் புறப்பாடு கண்டருளினார். அடுத்து நேற்று ஏகாதசி தினமாதலால் ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி பெரிய மாட வீதி புறப்பாடு கண்டருளினார்.

இப்படியாக இதுவரை சிறப்பாக நடைபெற்ற உற்சவங்களுக்குப் பிறகு நாளை முதல் நடக்க இருக்கும் உற்சவங்கள் :-

நாளை ( 04.01.2019), வெள்ளிக்கிழமை, ஸ்ரீரங்கத்திற்கு அருகில் உள்ள திருமண்டங்குடியில் , மார்கழியில் கேட்டை நக்ஷத்திரத்தில் அவதரித்த ஸ்ரீ.தொண்டரடிப்பொடியாழ்வார் திரு அவதார திருநக்ஷத்திரம். அதனால் மாலை சுமார் 4.45 மணிக்கு ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமியும், ஸ்ரீ.தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டருளுவர்.

அடுத்து 05.01.2019 சனிக்கிழமைஅன்று மார்கழி மாதம் அமாவாசை தினமாதலால் மாலை 4.45 மணிக்கு பெரியமாடவீதி புறப்பாடு கண்டருளுவார். அன்று ஸ்ரீ.மணவாள மாமுனிகள் அவதரித்த மாத திருநக்ஷத்திரமான மூலம் நக்ஷத்திரமானதால், பெருமாள் , திருவீதி புறப்பாடு முடிந்து திருக்கோயிலுக்கு எழுந்தருளிய பின்னர் மஹா மண்டபத்தில், ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமியுடன் ஸ்ரீ.மணவாள மாமுனிகளும் எழுந்தருளுவார், அப்பொழுது உபதேஸரத்னமாலை மற்றும் திருவாய்மொழி நூற்றந்தாதி அருளிச்செயல் கோஷ்டியாகும்.

அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை ( 06.01.2019 ) முதல் ஒன்பது நாள்களுக்கு ஸ்ரீ.ஆண்டாள் நீராட்ட உற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீ.ஆண்டாள் நாச்சியார் காலையில் சுமார் 8.30 மணிக்கு பெரிய மாட வீதியில் குளத்தங்கரை வீதிகள் தவிர்த்து மற்ற வீதிகளில் புறப்பாடு கண்டருளுவார். பின்னர் திருக்குளத்திற்கு எதிரில் , ஸ்ரீ,ஆண்டாள் நீராட்ட மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளி பின்னர் தினசரி சிலநாள்களுக்கு சிறிய வாஹனங்களில் குளத்தங்கரை வீதிகளில் புறப்பாடு கண்டருளி திருக்கோயிலுக்குள் எழுந்தருளுவார்.

இந்த நாள்களில் 08.01.19 அன்று திருவோண நக்ஷத்திரத்தன்று ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி , மாலை 5.15 மணிக்கு சிறிய மாட வீதி புறப்பாடு கண்டருளுவார்.

மேலும் 13.01.19 அன்று ஸ்ரீ.ரங்கநாதரின் திருநக்ஷத்திரமான ரேவதி நக்ஷத்திரத்தை முன்னிட்டு மாலை 4.45 மணிக்கு ஸ்ரீ.மன்னாதன் சிறிய மாட வீதி புறப்பாடு கண்டருளுவார்.

14.01.2019 அன்று போகி தினத்தை முன்னிட்டு மாலை 4.45 மணிக்கு, ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி பெரிய மாட வீதி புறப்பாடு கண்டருளிய பின், திருக்கோயிலுக்குள் ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி , ஸ்ரீ.ஆண்டாள் திருக்கல்யாண வைபவ உற்சவம் நடைபெரும்.

அடுத்த நாள் 15.01.2019 மிகவும் சிறப்பான நாள். சங்கராந்தி என்று அழைக்கப்படும் பொங்கள் திருநாள். அன்று மாலை 4.45 மணிக்கு ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி, ஸ்ரீ.ஆண்டாளுடன் ஊர்கோல உற்சவமாக ,சேர்ந்து ஸேவை ஸாதித்தபடி புறப்பாடு கண்டருளுவார்.

அடுத்த நாள் 16.01.2019 அன்று சங்கராந்தி முடிந்து கனு நன்னாள். அன்று காலை ஸ்ரீ.ஆண்டாள் புறப்பாடு கண்டருள , மாலை ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி, கனு பரிவேட்டையை முன்னிட்டு பெரிய மாட வீதி புறப்பாடு கண்டருளுவார்.

“தையில் மகமின்று தாரணியீர் ஏற்றம்” என்று ஸ்ரீ.மணவாள மாமுனிகள் உரைத்தபடி, இன்பமிகு தையில் மக நக்ஷத்திரத்தில் , திருமழிசையில் அவதரித்த ஸ்ரீ.திருமழிசை ஆழ்வாரின் திருநக்ஷத்திரத்தை முன்னிட்டு, தனிச் சன்னதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார் ஸன்னதியில் 14.01.2019 முதல் 23.01.2019 வரை தினசரி மாலை இயற்பா, திருவாய்மொழி அருளிச் செயல் கோஷ்டியாகும். தையில் மகத்தன்று ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார் , ஸ்ரீ,கஜேந்திர வரதர் பெரியமாட வீதி புறப்பாடு கண்டருளுவர்.

மேற்படி உற்சவங்களுக்குப் பிறகு ரத சப்தமி உள்பட பிற மாத வழக்கபடியான உற்சங்களும் நடைபெற உள்ளன.

ஆக சில வாரங்களுக்கு மேலாக திருவல்லிக்கேணியில் , பத்தர்கள் சிறப்புடன் தரிசிக்க உற்சவங்கள் நடைபெற உள்ளன.

திருவல்லிக்கேணியில் வாழும் பத்தர்கள் மட்டுமின்றி, அருகிலுள்ள பல பகுதிகளில் உள்ள பத்தர்களுக்கும் பல நாள்கள் பல ஸேவைக்கான உற்சவங்கள் நடந்து கொண்டே இருக்கலாம். திருவல்லிக்கேணி ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமியும் மற்றும் நான்கு எம்பெருமான்களும் எழுந்தருளியுள்ள இந்த திவ்யதேஸத்தில் மட்டுமே வருடத்தில் பல நாள் புறப்பாடும். அருளிச் செயல் கோஷ்டியும் நடைபெற்று பத்தர்களை மகிழ்ச்சியடைய வைத்து எம்பெருமான்களின் அருள் க்டாக்ஷத்தைப் பெரும் வாய்ப்பு கிடைக்கப்பெருகின்றது.
 

Latest ads

Back
Top