• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் மகிமை

praveen

Life is a dream
Staff member
சென்னை நடுவண் தொடர்வண்டி(சென்ட்ரல் ரயில் நிலையம்) நிலையத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது திருவள்ளூர். இங்கே, அழகுறக் கோயில் கொண்டு, அற்புதமாக சேவை சாதிக்கிறார் ஸ்ரீவீரராகவ பெருமாள்.

சுமார் 1,500 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆலயம். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட திருத்தலம். 108 திவ்விய தேசங்களில் ஒன்று எனப் பெருமை கொண்டதும் கூட! தொண்டை நாட்டு திவ்விய தேசத்தில் 22&-ஆவது தலம் என வீரராகவப் பெருமாள் கோயிலின் பெருமைகள் சொல்லிக் கொண்டே போகலாம்!

திருமழிசை ஆழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் இந்தத் தலத்துக்கு வந்து, மங்களா சாசனம் செய்து உள்ளனர். ஸ்ரீவேதாந்த தேசிகர் சம்ஸ்கிருதப் பாடல்களை மெய்யுருகப்பாடியுள்ளார்.

ஒரு தை அமாவாசை நன்னாளில், சாலிஹோத்ர முனிவர் இந்தத் தலத்துக்கு வந்தார். இங்கே உள்ள ‘ஹ்ருத்தாப நாசினி’ எனும் தீர்த்தத்தில் நீராடினால், நம் இதயத்தில் உள்ள துர்சிந்தனைகள், கெட்ட விஷயங்கள் அனைத்தும் நீங்கும் என்று அவரின் உள்ளுணர்வு சொல்லிற்று. குளக்கரையில் அமர்ந்த சாலிஹோத்ர முனிவர், அங்கே முப்பத்து முக்கோடி தேவர்களும் ரிஷிகளும் நீராடுவது கண்டு வியந்து போனார். குளத்தின் சிறப்பு குறித்து அவர்களிடம் விவரம் கேட்டார்.

அப்போது, பிருத்யும்னன் எனும் மகாராஜா இங்கே வந்து தவமிருந்து, இந்தக் குளத்தில் நீராடியதாகவும், அவனுக்குப் பெருமாளே நேரில் தரிசனம் தந்து வரம் அருளினார் என்றும், கங்கைக்கு நிகரான இந்தத் குளத்தில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கும் என்றும் தேவர்கள் தெரிவித்தார்கள்.

தான் நினைத்தது சரிதான் என உணர்ந்து சிலிர்த்த முனிவர், அங்கே குளத்தில் நீராடி, கடும் தவத்தில் மூழ்கினார். அதில் மகிழ்ந்த பெருமாள், அவரின் வேண்டுகோளை ஏற்று, அங்கேயே தங்கி, கோயில் கொண்டு, இன்றளவும் அருள்பாலித்து வருகிறார் என்கிறது தல புராணம்!

எனவே, இங்கு நீராடிப் பெருமாளைத் தரிசித்தால், புண்ணியங்கள் பெருகும்! முக்கியமாக, தை அமாவாசை நாளில் நீராடி, பெருமாளை ஸேவித்தால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்! தன் வலது கரத்தால் முனிவர் சிரசில் பெருமாள் சத்தியம் செய்யும் சிற்பமும், நாபிக்கமலத்தில் இருக்கிற ஸ்ரீபிரம்மாவுக்கு வேதோபதேசம் செய்தபடி சயனத் திருக்கோலத்திலும் அற்புதமாகக் காட்சி தருகிறார் வீரராகவ பெருமாள். அரக்கர்களை வதம் செய்ததால் ஸ்ரீவீரராகவப் பெருமாள் என்றும் இராமலிங்க அடிகளாரின் வயிற்று வலியைப் போக்கியதால், ஸ்ரீவைத்திய வீரராகவர் என்றும் திருநாமங்கள் அமைந்ததாகச் சொல்வர்!

இங்கு அருளும் ஸ்ரீநவநீத கிருஷ்ணர் வரப்பிரசாதி. இங்கு வரும் பக்தர்களுக்குத் தேன் கலந்த தினைமாவுப் பிரசாதம் வழங்கப்படுகிறது. இதை உட்கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் பெறலாம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!

இங்கு, மூன்று அமாவாசை தினத்தில், வெல்லம் மற்றும் பால் கொண்டு தீர்த்தக் குளத்தில் கரைத்துப் பிரார்த்திக்கின்றனர். அதேபோல், உப்பு மற்றும் மிளகு சமர்ப்பிக்கும் வழிபாடும் உண்டு. அப்படிப் பிரார்த்தித்தால், நம் துயரங்கள் யாவும் விலகும் என்கின்றனர். உறுப்புக் காணிக்கை பிரார்த்தனையும் உண்டு.

தாயாரின் திருநாமம்- ஸ்ரீகனகவல்லித் தாயார். தை மாத பிரம்மோத்ஸவம் இங்கு பிரசித்தம். அந்த நாளில், கனகவல்லித் தாயாரின் தந்தையிடம் சென்று, வேஷ்டி- புடவை வாங்கி வரும் வைபவம் சிறப்புற நடைபெறும். எனவே, ஸ்ரீகல்யாண வீரராகவர் என்றும் இந்தத் தலத்துப் பெருமாளுக்கு பெயர் உண்டு! ஆகவே இந்தத் தலத்துக்கு வந்து, பெருமாளை மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டால், ஞானம் பெறலாம். தீராத நோயும் தீரும். கல்யாண யோகம் கைகூடி வரும் என்பது ஐதீகம்!

மார்கழியில் தினமும் பெருமாளின் திவ்விய தரிசனம், வைகுண்ட ஏகாதசி, சொர்க்க வாசல் திறப்பு என விழாக்கள் நிறைந்த வீரராகவ பெருமாள் கோயிலுக்கு வந்து தரிசியுங்கள். குடும்பம் செழிக்க, சந்ததி சிறக்க இனிதே வாழலாம்!

நடை திறந்திருக்கும் நேரம் : காலை 7 முதல் மதியம் 12.30 மணி வரை. மாலை 4 முதல் இரவு 8.30 மணி வரை.
 

Latest ads

Back
Top