• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆழி மழைக் கண்ணா!

ஆழி மழைக் கண்ணா!

ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழிய்அம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்


முந்தய பாசுரங்களில் ஆயர் சிறுமியர், மார்கழி நோன்பு நோற்க எல்லோரையும் நீராட்டத்துக்கு அழைத்தனர். மேலும், அவ்வாறு மார்கழி நீராடினால் நாட்டுக்கு விளையும் நன்மைகளையும் பாடிக் கொண்டாடினர். இதைக்கேட்ட பர்ஜந்யனும், (பர்ஜன்யன் - மழைக்கு உரியவன் - வருணன்) எம்பெருமான் அடிபணியும் இவர்கட்கு நம்மாலானதைச் செய்யவேண்டும் என்று தீர்மானித்து, "பெண்களே, நான் உங்களுக்குத் செய்ய வேண்டிய அடிமைத்திறத்தை சொல்லிஅருளுங்கள்" என்று சொல்ல, அதற்கு அவர்கள், “இந்த பெண்கள் நோன்பிருக்க, எவ்வளவு மழை பொழிகிறது என்று உலகத்தோர் கொண்டாடும்படி மழை வர்ஷிக்க வேண்டும்" என்று விண்ணப்பம் செய்கின்றனர்.


"பர்ஜந்யனே, உனது கொடைத்திறத்தை நீ எள்ளளவும் ஒளிக்கலாகாது. கடலுக்குள் புகுந்து, அங்குள்ள நீரை முற்றும் முகந்துகொண்டு, பெருமுழக்கஞ்செய்து, வானத்தின் மீதேறி, எம்பெருமானது திருமேனிபோலக் கருமைபூண்டு, அவனது வலக்கை ஆழி போல் மின்னி, இடக்கைச் சங்கம்போல் அதிர்ந்து, அவனது வில்லான ஸ்ரீ சார்ங்கத்தில் இருந்து பொழியும் சர மழை போல நாடெங்கும் பெய்து, எங்களின் மார்கழி நீராட்டத்தை மகிழ்ச்சியுடனே கொண்டாட நீ உதவ வேண்டும்" என்பது இவர்கள் அவனுக்குக் கட்டளையிடும் பரிசு.


“ஆழி மழைக் கண்ணா!”


திருக்கோயில் சந்நிதிகளில் கைங்கர்யபரர்களை (கைங்கர்யம் செய்பவர்களை) “குடை தூக்குவான், சாமரை வீசுவான், திருச்சின்ன மூதுவான் என்றெல்லாம் அவரவர்கள் மேற்கொண்ட காரியத்தையிட்டு அழைப்பது சம்ப்ரதாயம். அதை போலவே, இவர்களும் அந்நடையை அடியொற்றி “ஆழிமழைக் கண்ணா" என்று பர்ஜன்யன் மேற்கொள்ளும் காரியத்தை முன்னிட்டு அவனை அழைக்கிறார்கள். படைப்பு, துடைப்புத் தொழில்களை அயன், அரர் மேற்கொள்ள, காத்தற் தொழிலை எம்பெருமான் கைக்கொண்டாற் போல, ‘பிடி, அடி’ என்னுங் காரியத்தை யமன் முதலியோர் தலையிலிட்டு, உனது நீர்மைக்குப் பொருந்த எல்லோரையும் குளிர நோக்கும் காரியத்தில் நியமிக்கப்பட்டவன் அல்லவா, நீ ? எனப் போற்றுகின்றனர்.


"ஒன்று நீ கை கரவேல்"


"நீ ஒன்றும் கை கரவேல்" என்று இதைக் கொள்ளவேண்டும். அதாவது, உன் கொடைத் தன்மையில் இருந்து ஒரு சிறிதும் நீ ஒளித்துவைத்துக் கொள்ளக்கூடாது. புண்ணியம் செய்தவர்கள் இருக்கும் இடத்தில் நிறைய மழை பொழிதல், பாவம் பண்ணியவர்கள் இருக்குமிடத்தில் மழை பொழியாதிருத்தல் என்ற நியதி எதுவுமில்லாமல், உலகெங்கும் வர்ஷிக்க வேண்டும்.


"ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி"


மேகத்தின் முழக்கம் மகிழ்ச்சியின் அங்கம். எனவே, "ஆர்த்து" என்று அம்முழக்கத்தை வேண்டுகின்றனர். சீதையைத் தேடி கடல் கடந்து இலங்கைக்குச் சென்றுவிட்டான் அனுமன். இலங்கையில் இருந்து எந்த செய்தியும் வராத நிலையில், குரங்கினங்கள் கடற்கரையில் வருந்தி, ஏங்கி அமர்ந்திருக்கின்றன. அப்போது, அனுமன் பிராட்டியைக் கண்ட களிப்பின் மிகுதியால் ஆரவாரித்துக்கொண்டு வந்து அவ்வானரங்களை மகிழ்வித்தது போல நீயும் ஆரவாரத்தினால் எம்மை மகிழ்விக்க வேண்டும் என்கிறார்கள்.

"ஏறி"


ஏ, பர்ஜன்யனே, தனது முகத்தைக் காட்டாமல் காரியமாற்றும் எம்பெருமானைப் போலன்றி, ஆகாயமெங்கும் எல்லோரும் காணும்படி ஏறி உன் வடிவைப் பரப்பிக்காட்டி நீ காரியமாற்ற வேண்டும்.


"ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்"

ஊழி என்று காலத்துக்குப்பெயர். “உருவம்போல் மெய்கறுத்து” என்று இங்கே நயமாகச் சொல்லுகிறார்கள். "பர்ஜன்யா, எம்பெருமானின் திருமேனியின் நிறத்தை மாத்திரமே நீ கொண்டுவிட முடியும். அதுவன்றி, அவனது குளிர்மை பொருந்திய வேறெந்த லட்சணங்களையும் உன்னால் கொண்டுவிட முடியாது.


“நாச்சியார் விழி விழிக்கவொண்ணாது" என்று சொல்வதுண்டு. திருவரங்கம் பெரிய கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்புக்கு முந்தய நாள் ஸ்ரீரங்கநாதன், நாச்சியார் திருக்கோலம் பூண்டு, சேவை சாதிக்கிறான். சேவித்துக்கொண்ட பட்டர், பெருமானை நோக்கி ‘ நாச்சியாரைப் போல் நீ வேடமிட்டுக்கொண்டாய். மிக நன்றாய் இருக்கிறது. ஆனால், உன்னால், அவளைப் போல விழிக்க இயலவில்லை" என்றாராம்.


"பாழி அம் தோள்" வலிமையும் அழகும் பொருந்திய தோள்


"பற்பநாபன் கையில் ஆழி போல் மின்னி"


"பற்பநாபன் போல் மின்னி" என்று சொல்லாமல், அவன் கையில் ஆழி போல் மின்னி என்று ஏன் சொல்லவேண்டும் ? ஒரு அரசனை நோக்கி, "உனக்கு மகன் பிறந்தான்" என்று சொல்லுகையில், அவன் பேசாதிருந்தாலும், அவன் பக்கத்தில் உள்ளவர்களிடம் களிப்பும், சந்தோஷக் குரல்களும் தென்படுவது போல, வெற்றி பெற்ற எம்பெருமான் அமைதியாய் இருந்தாலும், திருவாழி ஆழ்வான் மின்னித் தோற்றமளிப்பான் என்பதனால் "ஆழி போல் மின்னி".


"வலம்புரி போல் நின்று அதிர்ந்து" - இடப்பக்கத்தில் உள்ள பாஞ்ச ஜன்ய ஆழ்வானைப் போல் முழங்கி.


“சார்ங்கமுதைத்த சரமழைபோல்”


எம்பெருமானின் திருச் சார்ங்கம் எனும் வில்லில் இருந்து பெய்யும் சர மழை போல் இவ்வுலகத்தில் பொழிவாய்.
 

Latest ads

Back
Top