• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

விநாயகரால்_அமைந்த ஸ்ரீரங்கம்

விநாயகரால்_அமைந்த ஸ்ரீரங்கம்

ஸ்ரீ ராமர் தனது பட்டாபிஷேகத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் எண்ணற்ற பரிசுகளை அன்போடு வழங்கி வழியனுப்பி வைத்தார். இராமரின் முன்னோரும், கோசல நாட்டை நிர்மாணித்தவருமான ' மனு' என்பவருக்கு ஶ்ரீரங்கநாதர் விக்ரகத்தை அளித்தார் பிரம்மா. அயோத்தியை தேவலோக அமராவதி நகருக்கு இணையாக நிர்மாணித்த மனு சக்ரவர்த்தி, ஶ்ரீரங்கநாதர் விக்ரத்தை தனது அரண்மனையில் வைத்து வழிபட்டு வந்தார். அவருக்குப் பின்னர் வந்த 'இஷ்வாகு' ஶ்ரீரங்கநாதரைத் தனது குலதெய்வமாக வழிபடலானார்.


விபீஷணனுக்கு ஶ்ரீராமர் தனது குலதெய்வமான ஶ்ரீரங்கநாதர் விக்ரகத்தை அன்போடு பரிசளித்து வழியனுப்பி வைத்தார். நீ இலங்கைக்குச் செல்லும் முன்னர் இதை எங்கேயும் கீழே வைத்துவிடாதே என்றார் ஶ்ரீராமர். இலங்கைக்குச் செல்லும் வழியில் காவரிக்கரையோரமாக விபீஷணன் வருகையில் , ஶ்ரீரங்கநாதருக்கு அங்கேயே பள்ளிக் கொள்ள விருப்பம் வந்தது. சீதையைச் சிறை வைத்திருந்த இலங்கைக்குச் செல்ல ஶ்ரீரங்கநாதர் விரும்பவில்லை. எனவே முழு முதற் கடவுளான விநாயகரின் உதவியை நாடினார் திருமால்( ஶ்ரீரங்கநாதர்).


விபீஷணனுக்குக் காவிரியில் நீராட விருப்பம் வந்தது. விக்ரகத்தைக் கீழே வைக்கக்கூடாது என்பதால் அதை யாரிடம் கொடுப்பது எனத் தேடினான் விபீஷணன். அங்கே மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து நின்ற கணபதியிடம் விக்ரகத்தைக் கொடுத்தான் விபீஷணன். நான் நீராடி வரும்வரையில் விக்ரகத்தைக் கையில் வைத்திரு; கீழே வைத்துவிடாதே! என்றான் விபீஷணன். நான் மூன்று முறைகள் கூப்பிடுவேன்; அதற்குள்ளாக வராவிடில் கீழே வைத்துவிடுவேன் ! என்றார் விக்னேஷ்வரர்.


வீபீஷணனும் சரியென்று நீராட காவிரியில் இறங்கினான். அவன் நீராடி வருவதற்குள் மூன்று முறைகள் கூப்பிட்டு விட்டு ஶ்ரீரங்கநாதர் விக்ரகத்தைக் கீழே வைத்தார் கணபதி. உடனே காவிரிக்கும், கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட அப்பகுதியில் ஶ்ரீரங்கநாதர் ஆனந்தமாகப் பள்ளிக்கொண்டார். நில்! நில்! எனக் கத்திக்கொண்டே ஓடிவந்த விபீஷணன் சினம் கொண்டான்; ஶ்ரீரங்கநாதரை அசைத்துத் தூக்க முயன்றான்.ஆனால் ஶ்ரீரங்கநாதரோ நீண்டு வளர்ந்தவராகப் பள்ளிக் கொண்டுவிட்டார். எனவே கோபத்தோடு மாடு மேய்த்தப் பிள்ளையைத் துரத்தினான் விபீஷணன். விநாயகரோ ஓடோடிச் சென்று அங்கிருந்த மலையின் மீது ஏறி அமர்ந்துக் கொண்டார்.


விநாயகரைத் துரத்தி வந்த விபீஷணன் அவரது தலையில் ஓங்கிக் குட்டினான். உடனே அப்பிள்ளையும் விநாயகராகக் காட்சியளித்தார். பதறிப்போன விபீஷணன், யார் இந்த துடுக்குத்தனமான பிள்ளை ? எனக் கோபத்தில் தவறிழைத்துவிட்டேன்! என்னை மன்னியுங்கள் பிள்ளையாரப்பா! எனத் தன் தலையில் தானே குட்டிக்கொண்டு , காதுகளைப் பிடித்தவாறு தோப்புக்கரணமும் போட்டான் . இன்றிலிருந்து என்னை வணங்குபவர்களும் இவ்வாறே தோப்புக்கரணம் போட்டு வழிபடுவர் ! என விநாயகரும், அவனுக்கு அருள் செய்தாராம். அன்றிலிருந்து தான் பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போடும் வழக்கம் வந்ததென்பர்.


ஶ்ரீரங்கநாதரை மீண்டும் வந்து தரிசித்தான் விபீஷணன். வருந்தாதே!விபீஷணா! நான் தென்னிலங்கையைப் பார்த்தவாறே சயனித்திருப்பேன்! உனக்கு என்றும் எனது ஆசிகள் உண்டு! என ஆசி கூறி அனுப்பினார் ஶ்ரீரங்கநாதர். ஶ்ரீரங்கம் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகும். இதன் இராஜ கோபுரம் 72 மீ. உயரமுடையது. இது 11 நிலைகளை உடையது. இது ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரமாகும்.



இவ்வாறு திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாரின் அருளால் உருவான தலமே ஶ்ரீரங்கமாகும். இது பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுகிறது. மலைக்கோட்டைப் பிள்ளையார் சந்நதிக்குப் போகும் வழியில் இடையே அமைந்துள்ளது செட்டிப் பெண் இரத்னாவதிக்குத் தாயாகவே மாறி வந்து பிரசவமும் பார்த்து அருளிய தாயுமானவர் சந்நதி. நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த மகளைப் பார்க்கவர இயலாமல் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தோட , தனது பக்தைக்காகச் சிவபெருமானே தாயின் உருவில் வந்து பிரசவமும் பார்த்தாராம்.


மூன்று நாட்கள் கழித்து காவிரியில் வெள்ளம் குறைந்ததும் நிஜத்தாயார் வந்தபோதே அனைத்தும் சிவபெருமானின் கருணை! என இரத்னாவதிக்குப் புரிந்ததாம். தாயும் ஆகி வந்த தந்தையே ! தயாபரனே! எனச் சிவபெருமானைப் போற்றி இன்றும் அதைத் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர் திருச்சி மலைக்கோட்டைப் பிள்ளையார் கோயிலில்.


திருமாலின் திருத்தலமான ஶ்ரீரங்கத்தை நமக்கெல்லாம் அளித்து அருள் செய்தவர் விநாயகர்.
 

Latest ads

Back
Top