• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஐப்பசி சதயம்

praveen

Life is a dream
Staff member
முதலாழ்வார்களில் மூன்றாம் ஆழ்வாராக அவதரித்த ஶ்ரீ பேயாழ்வார் வருஷதிருநக்ஷத்ரம் இன்று. ஐப்பசி சதயம்.


திருமயிலை ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலின் திருக்கிணற்றில் , செங்கழுநீர் செவ்வல்லிப்புஷ்பத்தில் , பெருமாளின் நாந்தகம் என்ற வாளின் அம்சமாக அவதரித்தார்.


பகவத் பக்தியிலேயே ஆழங்காற்பட்டவர். ஆதலால் பேயாழ்வார் என்னும் திருநாமம். ஆழ்வாரின் மற்ற திருநாமங்களில் சில : மஹதாஹ்வயர். ஸத்குணஸாகரர். முனிவரர் சீரான். தமிழ்த்தலைவன்.


ஶ்ரீ பேயாழ்வார் மங்களாசாசனம் செய்தருளிய திவ்யதேசங்கள்.


திருவல்லிக்கேணி. திருவெஃகா. திருஅத்தியூர். திருவேளுக்கை. திருப்பாடகம். திருக்கடிகை. திருஅட்டபுயகரம். திருவரங்கம். திருக்குடந்தை. திருவிண்ணகர். திருமாலிருஞ்சோலைமலை. திருக்கோட்டியூர். திருவேங்கடம். திருப்பாற்கடல். திருப்பரமபதம்.


ஶ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்தது மூன்றாம் திருவந்தாதி. 100 பாசுரங்கள். அதிலிருந்து சிலவற்றை சேவிப்போம்.


முதல் இரண்டு ஆழ்வார்கள் ஏற்றிய அற்புதமான விளக்கொளியில் பெருமாள் சேவையருள, பெற்ற திவ்யதரிசனத்தையே ஆச்சர்யமான முதல் பாசுரமாக அமைத்து, மூன்றாம் திருவந்தாதியை அருளிச்செய்கிறார்.


திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழிவண்ணன் பால் இன்று. 1.


அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணிமருதம் சாய்த்தான் அவனே
கலங்காப் பெருநகரம் காட்டுவான் கண்டீர்
இலங்காபுரம் எரித்தான் எய்து. 51.


பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டங்கு உறைவார்க்குக் கோயில் போல் வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர். 61.


அதுநன்று இதுதீது என்று ஐயப்படாதே
மதுநின்ற தண்துழாய் மார்வன் பொதுநின்ற
பொன்னன் கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து. 88.


சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்துழாய்த்
தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும் காரார்ந்த
வானமரும் மின்னிமைக்கும் வண்தாமரை நெடுங்கண்
தேனமரும் பூமேல் திரு. 100.


ஶ்ரீ பேயாழ்வார் வாழித்திருநாமம்.


திருக்கண்டேன் எனநூறும் செப்பினான்
வாழியே.
சிறந்த ஐப்பசியில் சதயம்சனித்த வள்ளல்
வாழியே.
மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன்
வாழியே.
மலர்க்கரிய நெய்தல்தனில் வந்துதித்தோன்
வாழியே.
நெருக்கிடவே இடைகழியில் நின்ற செல்வன்
வாழியே.
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில்வைப்போன்
வாழியே.
பெருக்கமுடன் திருமழிசைப்பிரான் தொழுவோன்
வாழியே.
பேயாழ்வார் தாளிணை இப்பெருநிலத்தில் வாழியே.
 

Latest ads

Back
Top