• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பூலோக வைகுண்ட ஸ்ரீரங்க வைபவம்

praveen

Life is a dream
Staff member
பூலோக வைகுண்ட ஸ்ரீரங்க வைபவம்

முதலில் பிரம்மா சத்தியலோகத்தில், ஸ்ரீரங்கநாதப்பெருமாளை வைத்து வழிபட்டு வந்தார். அவருக்கோ அந்த ஸ்ரீயப்பதியான நாராயணனே அந்த விக்ரஹ மூர்த்தியை வழிபாடு செய்ய அளித்தருளினான்.

இப்படியிருக்க த்ரேதா யுகத்தில், பூலோகத்தை ஆண்ட சூரியகுல மன்னனான இக்ஷ்வாகு ஒரு பெரிய சக்தியை பெற்றிருந்தான். அதாவது மற்ற லோகங்களுக்கும் சஞ்சரிக்கும் அரிய வரமே அது. அவன் அவ்வப்போது சத்யலோகம் வரை சென்று, பிரம்மாவை நேரில் சந்தித்து வழிபடுவது வழக்கம். அப்படியிருக்க ஒருமுறை சத்ய லோகம் சென்ற போது அங்கு பிரம்மாவின் மூலம் அங்கிருந்த அந்த நாராயண ஜெகன்னாத விக்ரஹ மூர்த்தியை வழிபாடு செய்ய நேர்ந்தது.அந்த மூர்த்தியின் ஸ்பரிசத்தில் மயங்கி "இவர் நம் பூலோகத்தில் இருந்தால் நம்முடைய மானுட வர்க்கமே நற்கதி அடையுமே" என்றெண்ணி, பிரம்மாவிடம் "தனக்கு அந்த பெருமானை தயை கூர்ந்து அளித்தருள வேண்டும்" என காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்தான்.


பிரம்மாவும் பள்ளி கொண்ட நிலையில் இருந்த அந்த பெருமாளை "பங்குனி பிரம்மோத்ஸவம் இவருக்கு இன்றியமையாதது அதை விடாமல்_செய்க" என்று கூறி ப்ரணவாகார விமானத்தோடு(ப்ராண வாக்ருதியோடு) அவனிடம் கொடுத்தருளினார். இப்படி பூலோகத்திற்கு எழுந்தருளப்பண்னி கொண்டு வந்து பெருமாளை வழிபாடு செய்து வந்தான்.


இப்படியாக இருந்து வருகையில், இக்ஷ்வாகுவின் வம்சாவழியில் வந்தவரே ஸ்ரீராமபிரான். அவரது காலத்தில், விபீஷணன் ராமபிரானின் பட்டாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சூரியவம்சத்து குலதெய்வமான ரங்கநாதப்பெருமாளை தாம் செய்த பேருதவிக்கு பரிசாகப் பெற்றான். "பங்குனி பிரம்மோத்ஸவம் இவருக்கு இன்றியமையாதது அதை விடாமல் செய்க" என்று கூறி ஸ்ரீராமரும் விபீஷணனை அனுப்பி வைத்தார்.


ப்ரணவாகார விமானத்தில் பெருமாளைத் தாங்கிக் கொண்டு வீபிஷணன் ஆகாயமார்க்கமாக பறந்து வந்தபோது, பங்குனி பிரம்மோத்ஸவத்திற்கு உரிய வேலையும் வந்து விடவே, கீழே பார்த்தால் காவிரி நாதிக்கரையின் எழில் கொஞ்சும் இடம். அவரும் அவ்விடத்திலேயே பூஜை செய்ய தீர்மானித்து, அரங்கம் என்னும் அம்மேட்டுப்பகுதியில் பெருமாளை வைத்துவிட்டு நீராடிய வீபிஷணன், பூஜையை ஒருவழியாக முடித்து விட்டு, மீண்டும் அவ்விக்ரஹத்தை அவ்விடத்தில் இருந்து எடுக்க முயன்றான் முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான் முடியவே இல்லை.கலங்கினான்.


அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் அவருக்கு ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார்.(அரங்கனின் நீண்ட நாள் கனவும் இதுதானே..) விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.


காலப்போக்கில் தர்மவர்ம சோழன் கட்டிய கோவில், காவிரியில் வந்த வெள்ளப்பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. மறைந்த இடத்தைச் சுற்றிக் காடுகள் வளர, கோவில் யாரும் கண்டுபிடிக்க முடியாமல் மறைந்துபோனது.


தர்மவர்ம சோழனின் மரபில் வந்த கிளிச் சோழன் என்னும் அரசன் காட்டில் வேட்டையாடச் சென்று ஒரு மரத்தின்கீழ் இளைப்பாறிக்கொண்டிருந்த சமயம், அந்த மரத்தின்மேல் இருந்த ஒரு கிளி, “வைகுந்தத்தில் உள்ள விஷ்ணுவின் கோவில் இருந்த இடம் இதுதான்; அக்கோவிலை இப்போதும் இங்கு காணலாம்” என்ற பொருளில் ஒரு செய்யுளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தது.
அதைக் கேட்ட கிளிச் சோழனுக்கு அதே சமயம் தான் கண்ட கனவின் மூலமாக விமானம் இருக்கும் இடம் தெரிந்து கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோவில் எழுப்பினான். அதுவே இன்றைய நாம் பார்க்கும் ஸ்ரீரங்கம்!


அதன் பிறகு அழ்வார்களும், ஆச்சார்யர்களும் அவதரித்து இந்த அரங்கத்தின் அருமைகளையும், பெருமைகளையும் இவ்வுலகிற்கு விளக்கினார்கள். மானுடம் தழைக்க அரும்பணி ஆற்றினார்கள்.


இவ்வாறு சத்யலோகத்தில் இருந்த பிரம்மாவால் ஆராதிக்கப்பட்ட லக்ஷ்மிநாராயணன், நம்மை எல்லாம் உய்விக்க ஆசையோடு ஸ்ரீரங்கம் சேர்ந்த பிறகுதான் "ஸ்ரீரங்கனாதன்" என அழைக்கப்படலானார்.
 

Latest ads

Back
Top