• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சாளக்கிராமம் வழிபாடும் , மகத்துவமும் !

praveen

Life is a dream
Staff member
சாளக்கிராமம் வழிபாடும் , மகத்துவமும் !

பகவான் மகாவிஷ்ணு ஏன் மலையாக மாற வேண்டும்? ஏன் சாளக்கிராமமாக உரு மாற்றம் அடைய வேண்டும்?


துளசியின் முற்பிறவி, ஜலந்திரன் வதம்


துளசித்தாய் தன் முற்பிறவியில் பூமியில் ‘பிருந்தை’ என்ற பெயரில் பிறந்து, ஜலந்தரன் என்ற அரக்கனை திருமணம் செய்து இருந்தாள். ஜலந்தரன் கடும் தவம் செய்து அதனால் பெற்ற வரத்தால் தேவர்களை கொடுமைப்படுத்தினான். இதனால் தங்களை காப்பாற்றும்படி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.


இதைத்தொடர்ந்து, ஜலந்தரன் சிவனிடம் போரிட வேண்டி கயிலைக்கு புறப்பட்டு கொண்டு இருந்தான். அவன் முன் ஒரு கிழவர் வேடத்தில் தோன்றிய சிவன் அவனிடம் பேசினார். அப்போது ஜலந்தரன் தன்னால் எதையும் செய்யமுடியும். என்னால் முடியாதது எதுவும் இல்லை என்று இறுமாப்புடன் கூறினான்.


உடனே கிழவர் வடிவில் இருந்த சிவபெருமான் தன் கால் பெருவிரலால் மண்ணில் ஒரு வட்டமிட்டு, அந்த வட்டத்தை பெயர்த்து எடுத்து தலை மீது வைக்க வேண்டும் என்று கூறினார். ஜலந்தரன் அந்த வட்டத்தை பெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டான். இருகரங்களாலும் அதனைப் பெயர்த்து தலைக்கு மேல் தூக்கி தாங்கினான். உடனே அந்த வட்ட சக்கரம் அவன் உடலை இரு கூறுகளாக பிளந்து, மீண்டும் அனல்கக்கும் தீப் பிழம்பாக மாறி சிவனின் திருக்கரத்தை சென்றடைந்தது.


மகா விஷ்ணுவின் மாயை

இதற்கிடையில் கயிலைக்குச் சென்ற கணவன் திரும்பி வராததை கண்ட பிருந்தை கவலை அடைந்தாள். அவளது கற்பு என்று அழிகிறதோ அன்று தான் ஜலந்திரன் அழிவான் என்ற நிலை இருந்தது. இதைத் தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் தெரிவித்தனர். உடனே அவர் பிருந்தையின் கற்பைச் சோதிக்க ஒரு தவ முனிவர் வடிவில் பிருந்தை முன் சென்றார். அப்போது அவர் ஜலந்தரன் இருகூறாகி இறந்து விட்டதை கூறி அவள் முன் அந்த இருகூறுகளும் மாயையினால் வரும்படி செய்தார்.


பிருந்தையின் ஏமாற்றம்


பிருந்தை தன் கணவன் மீண்டும் உயிர் பெற்று வர வேண்டும் என மன்றாடி கேட்டுக்கொண்டாள். உடனே திருமால் ஜலந்தரனின் உடற்கூறுகளை ஒன்றாகச் சேர்த்து, தான் அந்த உடலில் புகுந்து ஜலந்தரனே மீண்டும் வந்து விட்டதாக நம்பும்படி செய்தார்.


பின்னர் திருமால் சிலகாலம் பிருந்தையுடன் குடும்பம் நடத்தினார். காலப்போக்கில் தன்னுடன் வாழ்பவர் தன் கணவன் இல்லை. மாயையில் வந்தவர் என்பதை அறிந்து கொண்ட பிருந்தை ஏமாற்றம் தாளாமல் தீயில் புகுந்து உயிர் துறந்தாள்.


பிருந்தை துளசி அவதாரம் எடுத்தல்


எந்த தவறும் செய்யாத பிருந்தை இறப்பால் மிகவும் மனம் வருந்திய திருமால் பிருந்தை தீக்குளித்த இடத்திலேயே செய்வதறியாது அமர்ந்து இருந்தார். உலக நலனுக்காக பிருந்தை பலியான சோகம் அவரை வாட்டியது.இதை பார்த்த பார்வதி தேவி பிருந்தையின் சாம்பலிலிருந்து தனது இடது கை சிறு விரலில் இருந்து ஒரு விதை உண்டாக்கி சிவபெருமானிடம் கொடுக்க, அவர் அதற்கு உயிரூட்ட, அதை பிரம்மா பெற்று பிருந்தை இறந்த இடத்தில் ஊன்றி தண்ணீர் வார்த்தார். அங்கே துளசி செடி உண்டாயிற்று. திருமால் அந்தத் துளசியை எடுத்து தன் மேல் அணிந்து, பிருந்தையை ஏமாற்றிய பாவம் நீங்கி மீண்டும் சகஜ நிலையை அடைந்தார். துளசி பகவான் மகாவிஷ்ணுவின் சங்கடத்தை தீர்த்ததால் ,
மரண தருவாயில் துளசி தீர்த்தம் அருந்தும் பக்தர்கள் யாராயினும், எத்தகைய பாவங்கள் செய்திருப்பிணும் அவர்கள் பாவங்களை தான் ஏற்று மோட்சம் அளிக்கிறார்.


மகாவிஷ்ணு பெற்ற சாபமும் சாப விமோசனமும்


மகாவிஷ்ணு மாறு வேடத்தில் சென்று தன்னை ஏமாற்றியதை அறிந்த பிருந்தை , ஜலந்திரன் போல் தன் முன் நிற்கும் பகவானிடம், " என்னை ஏமாற்றிய நீ யாராக இருந்ததாலும் கல்லாக மலையாக போவாயாக " என்று சாபமிட்டாள். அந்த மலைதான் சாளக்கிராம மலை .கல் தான் சாளக்கிராம கல், உடனே மஹாவிஷ்ணு அவருக்கு காட்சி கொடுத்தார்.


பதறிப்போனாள் துளசி . புன்னகை புரிந்தார் மஹாவிஷ்ணு ." அஞ்சாதே துளசி எல்லாம் என் சித்தப்படியே நடக்கிறது க்ருஷ்ணஅவதாரத்தீன் போது கோபிகையாகக் இருந்ததவள் நீ .என்னை மணம் புரிய வேன்டும் என்று தவம் புரிந்தவளும் நீயே. பூலோகத்தில் வாழும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவே இத்தகைய லீலைகளும் நடத்தபடுகின்றன.
என்னை கல்லாக மலையாக மாறுவதாக நீ சபித்ததும் என் விருப்பபடிதான்,என்னை தரிசனம் செய்தால் உனது இந்த பிறவிக்கு முக்தி கிடைக்கிறது . இப்போது நீ கண்டகி நதியாகவும், துளசி செடியாகவும் மாறிவிடுவாய் .கோபிகையாய் என்னுடன் எப்போதும் சேர்ந்திருக்க வேண்டும் என விருப்பம் கொண்டு இருந்ததால் , நான் சாளக்கிராம மலையாக மாறும் போது நீ கண்டகி என்ற பெயரில் நதியாய் மாறி என்னுடனே எப்போதும் இருப்பாய் . என்னை கல்லாக மாறுமாறு சபித்து விட்டதால் நான் சாளக்கிராமக் கற்களாக மாறபோகிறேன்"


" நீ என்னை மணக்க விரும்பியவள் அல்லவா? அதனால் நீ கண்டகி நதியாக ஓட நான் உன்னில் கிடப்பேன், ஆம் சாளக்கிராமக் கற்களாக கிடப்பேன். அந்த கற்களில் சங்கு, சக்கர சின்னங்களும் உண்டாக்கும். சாளக்கிராமமாக நானே இருப்பதால் பக்தர்கள் அந்தக் கற்களை வணங்குவார்கள் . நாடெங்கும் எடுத்து சென்று தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள் . கற்கள் கிடக்கும் நதியான நீயும், புனித நதியாக கங்கையை விட சிறந்த நதியாக போன்றபடுவாய் . உன்னில் நீராடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டதை எல்லாம் நான் தருவேன், இங்கே வரமுடியாதவர்கள் துளசியால் எனக்கு அர்ச்சித்தால் போதும் துளசி தீர்த்தத்தை பருகினாலும் நான் மிகுந்த ஆனந்தம் அடைந்து அருள் பாலிப்பேன்.சாளக்கிராமம் வைத்து வழிபடும் ஒவ்வொருவரின் பாவங்களை நானே ஏற்றுக் கொண்டு வேண்டும் வரங்கள் அளிப்பேன் " என்றார்.


" யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறரர்களோ அந்த வீட்டில் வைக்கப்பட்டுஇருக்கும் சிறு இடத்தையே தன் கோயிலாகக் கொண்டு அங்கே எழுந்தருள்கிறேன் .அந்த சாளகிராமத்தில் நான் எப்போதும் வசிக்கிறேன் . அது இருக்கும் வீட்டில் தோஷமே கிடையாது சாளக்கிராமம் இருக்கும் விடுகளில் உள்ளவர்களின் பாவங்களை ஏற்றுக் கொண்டு சந்தோசம் , சௌபாக்கியம் முக்தி ஆகிய எல்லாவற்றையும் நான் தருவேன் "என்று மஹாவிஷ்ணு கூறினார். எனவே எல்லாருக்கும் சாளக்கிராமம் கிடைத்து விடாது. பகவானின் அருள் இருந்தால் மட்டுமே சாளக்கிராமம் நமது கைகளுக்கு கிடைக்கும்.
 

Latest ads

Back
Top