• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆதி சங்கரர் ஜெயந்தி

Status
Not open for further replies.

praveen

Life is a dream
Staff member
ஆதி சங்கரர் ஜெயந்தி

"சங்கரர் ஜெயந்தி' ---காஞ்சி மகா பெரியவர்


காஞ்சி மகா பெரியவர் ஒருமுறை பூஜையெல்லாம் முடித்தும், பக்தர்களுக்கு தரிசனம் அளித்தும் சற்று ஓய்வில் இருந்த நேரம். மடத்தில் அவருக்கு நெருங்கிய அன்பர்கள் சிலர் மட்டுமே மகா பெரியவருடன் அப்போது இருந்தனர். ஒருவர் காஞ்சி தவ முனிவரிடம் கேட்டார்...


"தங்களுக்கு சிறிய வயதில் பிடித்த பண்டிகை எது? தீபாவளியா, தைப்பொங்கல் விசேஷமா, கார்த்திகை தீபமா, கோகுலாஷ்டமியா, ஆருத்ரா தரிசனமா எது என்று சொல்லுங்கள்'' என்றார்.


மகா பெரியவர் இது எதையும் குறிப்பிடாமல் "எனக்குப் பிடித்த பண்டிகை "சங்கர ஜெயந்தி'' என்றார். சூழ்ந்த பக்தர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. "சங்கர ஜெயந்தியில் அப்படி என்ன விசேஷமான பண்டங்கள்! விருந்து?'' என வியந்தனர்.


மகா பெரியவரே புதிரை அவிழ்த்தால்தான் புரியும். அவர் சொன்னார், ""ஆதி சங்கரர் மட்டும் அவதாரம் செய்யாவிட்டால் நாம் கொண்டாடும் இந்து மதப் பண்டிகைகள்தான் ஏது? ஆகவே, நம் சநாதன தர்மத்திற்கு புத்துயிர் அளித்த "சங்கரர் ஜெயந்தி' எனக்குப் பிடித்த பண்டிகை'' என்றார்


ஆதிசங்கரர் சாதாரண மனிதனுக்கு நான்கு விஷயங்களைச் சொன்னார் ..


1. முதலில் சொன்னது: பகவானுடைய நாமத்தை ஜபி.
பகவத் கீதையைப் படி,

2. பகவானுடைய விஷயத்தையே மனதில் சிந்தனை செய், வேறு எந்த விஷயத்தையும் சிந்திக்காதே.


3. மூன்றாவது விஷயம்: நீ சகவாசம் செய்வதாயிருந்தால் நல்ல மனிதர்கள் சகவாசத்தில் இரு


யார் நல்ல மனிதர்கள், பார்த்தால் எல்லோரும் நல்ல மனிதர்களாகத்தான் தோன்றுகிறது. பின்பு அவரகளுடன் கொஞ்ச நாட்கள். சகவாசம் பண்ணியதற்குப் பின்பு தான் அவர்களுடைய நிறம் குணம் தெரிந்து விடுகிறது. முதலில் தெரியவே இல்லை என்று சொல்லலாம். நல்லவர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் என்று கேட்டால்
.
அதாவது முக்யமாக இன்னொருவனுக்கு உபகாரம் செய்யவேண்டும் என்கிற பாவம் உள்ளவர்கள். நல்லவர்கள்.. ராமாயணத்தில் பகவான் ஸ்ரீராமசந்திரருடைய மனைவி சீதா தேவியை ராவணன் என்கிற ராஷஸன் அபகரித்துக் கொண்டு போனான். அந்த சமயத்தில் ஸ்ரீராமசந்த்ரருக்கு உபகாரம் செய்தது ஹனுமார். சீதை எங்கு இருக்கிறாள் என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்த சமயத்தில் அவ்வளவு பெரிய ஸமுத்ரத்தைத் தாண்டி சீதை எங்கு இருக்கிறாள் என்று கண்டு பிடித்து அவளோடு, பேசி ராவணனுக்கு புத்திமதி சொல்லி கீதையிடமிருந்து ஒரு அடையாளத்தையும் கொண்டுவந்து
ராமருக்கு கொடுத்து மஹோபகாரம் செய்தவர் ஹனுமார்.


அந்த ஹனுமாருக்கு ராமர் ஒரு வார்த்தை சொன்னார்.
(மய்யேவ ஜீர்ணதாம் யாதுர் யத் வையோபக்ருதம்வரே
நப்ரத்யுப காரார்த்தி: விபத்தி நபிகாங்க்ஷதி)
என்று ராமர் சொன்னார்.


இங்கு பாரப்பா, நீ எனக்கு செய்த உபகாரத்தை நீ மறந்துவிடு. இப்படிக் கேட்டால் எல்லோருக்கும் ஆச்சர்யமாகும். என்ன ஓய்! இவ்வளவு பெரிய உபகார்தை என்னிடம் வாங்கிக் கொண்டு அதை நான் மறந்துவிடவேண்டும் என்று சொல்கிறாரே. ஆனால் ராமர் ஒரு காரணத்தைச் சொன்னார். “நீதிரும்ப ஒரு உபகாரம் என்னிடமிருந்து எதிர் பார்க்காதே.” “ஏன் திரும்ப உன்னிடமிருந்து ஒரு உபகாரம் எதிர் பார்க்கக் கூடாதா? இது என்ன அந்யாயம்? என்ன ஸ்வார்த்தம்,” என்று கேட்கலாம். காரணம் சொல்கிறார் அவர். ஒரு மனுஷ்யனுக்கு இன்னொரு மனுஷியனுடைய உபகாரம் எப்பொழுது தேவைப்படும்? நாம் ஏதாவது ஒரு கஷ்டத்தில் இருந்தால் தான் இன்னொருவனுடைய உதவி தேவைப்படும். கஷ்டத்தில் இல்லை என்று சொன்னால் இன்னொருத்தனுடைய உதவி தேவை இல்லை. நான் இன்று கஷ்டத்தில் இருக்கிறேன் எனக்கு நீ உதவி பண்ணினாய் சரியாகி விட்டது. திரும்ப நாளை என்னிடம் இருந்து ஒரு உதவியை எதிர்பார்க்கிறாய் என்று சொன்னால் உனக்கும் ஒரு கஷ்டம் வந்தால் தானே நான் உனக்கு உதவி செய்ய வேண்டும். உனக்கு ஒரு கஷ்டம் வரட்டும் என்பதையும் எதிர்பார்க்கிறாய் என்று அரத்தம். இதை எதற்காகப்பா எதிர் பார்க்கிறாய்? நீ சௌக்யமாக சரியாக நன்றாக இருக்க வேண்டியவன் எனக்கு ஒரு கஷ்டம் வரட்டும். அப்போது எனக்கு அவர் உதவி செய்யட்டும் என்று எதற்கு விரும்புகிறாய்?”
(நர ப்ரத்யுபகாரார்த்தி விபதி நபிகாங்க்ஷதி)


அதனால் நீ ப்ரத்யுபகாரத்தை எதிர்பார்க்காதே என்று ராமர் ஹனுமாரிடம் சொன்னாராம். ரொம்பவும் தத்வார்த்தம் இருக்கிற ஸ்லோகம். ஸத்புருஷன் யார் என்கிற கேள்வியைக் கேட்டுக் கொண்டோம் எவன் இன்னொருவருடைய கஷ்டத்தைப் பார்த்து அவருக்கு உபகாரம் செய்வானோ மற்றும் அவனிடமிருந்து திரும்ப உபகாரத்தை அபேக்ஷிக்க மாட்டானோ அவன் ஸத்புருஷன்.அதேபோல் எவன் பகவான் விஷயத்தில் அவ்யாஜமான (காரணமில்லாத) பக்தியை வைத்துக் கொண்டு இருக்கிறானோ அவன் ஸத்புருஷன்.
“அவ்யாஜமான” என்று ஒரு ஸம்ஸ்க்கு தபத்தைப் போட்டோம். அது அநேகம் பேருக்கு புரியாமல் இருக்கலாம். அதாவது பகவானை பூஜை செய்வது, பகவானைப் பற்றி சிந்திக்கிறது என்பது இன்னொருவன் பாரக்கவேண்டும் என்பதற்காக எவ்ன செய்கிறானோ அது பக்தி இல்லை. இது என் கடமையை நிக்வகிக்கிறேன் என்கிற த்ருப்தி, இதற்காகத் நான் ஈஸ்வரனை உபாஸிக்கிறேனே தவிர இன்னொருவனுக்காக அல்ல.


அநேகம் பேர் தான் ஒரு சின்ன தர்மம் செய்தாலும் அதற்கு எவ்வளவு விளம்பரம் கிடைக்கும் என்பதை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள். ஒரு கோவில் கட்டுகிறோம் கொஞ்சம் கொடுங்கள் என்று சொன்னால் ஒரு 500 ரூ கொடுத்துஅதற்கு ஒரு பெரிய விளம்பரத்தை எதிர்பார்ப்பார்கள். அது நியாயமில்லை. நாம் செய்வது ஈஸ்வரனுக்குத் தெரியும் அது போதும். என்னை இவர்கள் யாரும் துதிக்க வேண்டியது இல்லை. அதேபோல் நாம் செய்யக்கூடிய ஈஸ்வர பக்தி நாம் செய்யக்கூடிய ஆராதனை என்னுடைய கர்த்தவ்யத்தை செய்கிறேன் என்கிற த்ருஷ்டியிலேதான் இன்னொருவனுடைய ப்ரஸம்ஸைக்காக அல்ல. இன்னொருவன் பார்க்கவேண்டும் என்பதற்காக அல்ல என்று யார் இருப்பார்களோ அவருடைய பக்தி அவ்யாஜமான பக்தி என்று சொல்லப்படும். அப்பேர்ப்பட்ட அவ்யாஜமான பக்தி பகவத் விஷயத்திலே இருக்கிற அவன் ஸத்புருஷன். அதனால் பரோபகாரமும் பகவத் பக்தியும் ஆகிய இரண்டும் எவனிடம் சரியான ரீதியில் இருக்கிறதோ அவன் ஸத்புருஷன் என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.
அப்பேர்ப்பட்டவருடைய சகவாசத்தில் நீ இருக்க வேண்டும். அப்போது உனக்கும் அதே ஸத்குணங்கள் வரும்.


மனிதனுடைய ஸ்திதி தான் யாருடைய சகவாசத்தில் இருப்போமோ அவனுடைய ஸ்வபாவம் தான் வேண்டும் வரும். ஒருவன் தினமும் சாயங்காலமானால் கோவிலுக்குப்போவான். நாம் அவருடைய சகவாசம் செய்தோமானால் நமக்கும் அதே அப்யாஸம் வரும். அதுவே இன்னொருவனுக்கு சாயங்காலம் என்றால் சினிமாவுக்குப் போகும்
அப்யாஸம் (வழக்கம்) அவனுடைய சகவாஸம் நமக்கு வந்தால் தினமும் சினிமாவுக்குப் போவோம். மனுஷ்யனுக்கு தான்யாருடைய சகவாசத்தில் இருப்பார்களோ அவர்களுடைய குணமானாலும், அப்யாஸமானாலும் அவை நமக்கும் வந்து விடும். அதனால் நீ ஸத்புருஷர்களோடு சகவாசம் செய். உன்னுடைய ஜீவிதம் நல்லதாகும். இது மூன்றாவதாகச் சொல்லி இருக்கிறார்.


நான்காவதாக சொன்னார்


, முடிந்த அளவு இன்னொருவனுக்கு தானம் செய். முடிந்த அளவு, நாம் யாரையும் நிர்பந்தம் செய்யவில்லை. நீ இப்படி செய்யவேண்டும், அப்படி செய்யவேண்டும் என்று, நமக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் இன்னொருவருக்கு உதவி செய்ய வேண்டும். உபகாரம் செய்ய வேண்டும். இதை நாம் என்றைக்கும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நான்கு விஷயங்கள் பகவானுடைய நாமத்தை உச்சரிக்க வேண்டும். பகவானைப் பற்றி பூஜிக்க வேண்டும். ஸத்புருஷர்களுடைய சகவாஸத்தை செய்ய வேண்டும். பிறருக்கு உதவி செய்ய வேண்டும், இந்த நாலு விஷயங்களை நம் ஜீவிதத்தில் நாம் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு வந்தால் அது தான் ரொம்ப உத்தமம் ஆகும். வாழ்க்கை ஸார்த்தகமாவதற்கு இதுதான் வழி. பகவத் பாதர் சொன்ன வார்தை யாரோ சிலரை மனதில் வைத்துக் கொண்டு சொன்னார் என்று நினைக்கவே கூடாது எல்லோருக்காக சொன்னது தான்.


நமக்கு எல்லோருக்கும் மஹோபதேசங்களை அனுக்கரஹித்து ஸநாதன தர்மத்தைக் காப்பாற்றி இந்த உலகத்தை காப்பாற்றியவர் மகா புருஷர் ஆதிசங்கர பகவத்பாதர். அப்பேர்ப்பட்ட பகவத் பாதசங்கரருடைய விஷயத்தில் நாம் எல்லோரும் என்றைக்கும் பக்திமான்களாக இருக்க வேண்டும். அவருக்கு சகல மனிதஜாதியும் கடமைப் பட்டு உள்ளது. அவர்களுக்கு நாம் என்றைக்கும் சிஷ்யர்களாக இருக்க வேண்டும். ஆகையால்தான் சங்கர ஜயந்தி உத்ஸவத்தை சமஸ்த பாரதத்திலும் மிக வைபவமாக கொண்டாடுகிறோம்


. அந்த ஆதிசங்கரருடைய கடாக்ஷத்துடன் எல்லோரும் அவர் காட்டிய நல்ல மார்க்கத்தில் சென்று ஸ்ரேயஸை அடையட்டும் என்று ப்ரார்த்திக்கிறேன் !


ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர !
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top