• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆன்மீகச் செய்திக் கவிதைகள்

Status
Not open for further replies.

saidevo

Active member
ஆன்மீகச் செய்திக் கவிதைகள்

03. கடவுள் வாழ்த்து
ஆன்மீகச் செய்திக் கவிதைகள்


0002. திருவையாற்று ஐங்கரன்
(நேரிசை வெண்பா)
(பிள்ளையார்: திருவையாறு பிரசன்ன கணபதி)


சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
திருவையாறு பிரசன்ன மஹாகணபதி பூஜை.

ஐயாற்றுப் பிள்ளையார் ஆலயப் பூசையில்
மெய்யடியார் ஏரம்பன் மெய்வழியே - பொய்விலகக்
காணவரும் ஆண்டுமுதற் காட்சி உளம்நிறைத்தே
ஊணற்றுப் போகும் உறவு.

[ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு]

15/04/2017

*****

0003. விழுப்புரம் ஆஞ்சநேயர்
(கலிவிருத்தம்)
(அனுமன்: விழுப்புரம் ஆஞ்சநேயர்)


சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
விழுப்புரம் ஶ்ரீஆஞ்சநேய லக்ஷதீபம்

விழுப்பம் அருளும் விழுப்புரம் அனுமன்
விழவில் பத்துநாள் வீதி யுலா-பால்
முழுக்கு மாலை முகிழ்நூ றாயிரம்
விளக்கும் தெப்பமும் வினையறக் காண்பமே.

15/04/2017

*****

0004. வேளூர் வைத்தியர்
(கலித்துறை)
(சிவன்: வேளூர் வைத்தியநாதர்)


சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
வேளூர் ஶ்ரீவைத்தியநாத சுவாமிக்கு சீதளகும்பம் ஆரம்பம்

வெய்யில் தாளா வைத்ய நாதர் மெய்விழச்
செய்தார் தண்ணீர் சீராய் வேளூர் திருத்தலம்
தையல் அருகில் தாந்தோன் றியிவர் எவ்வணம்
மெய்யில் தாரை வீழக் கோவில் மேவினரோ? ... 1

வாதுளை மனத்தினர் வாக்குளை வாயினர் மாந்தரெனத்
தாதளை வண்டுகள் தன்வயம் இழந்திடும் தலமதிலே
மாதுளம் கொண்டவன் வளர்மதிச் சென்னியன் மனமுறையச்
சீதள நீர்விழும் தெரிசனத் தால்வினை சிதறிடுமே. ... 2

15/04/2017

*****
 
0005. தோணியப்பர் காப்பு
(கலிவிருத்தம்)
(சிவன்: சீர்காழி தோணியப்பர்)


சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
சீர்காழி ஶ்ரீஉமமஹேஸ்வரருக்கு உச்சிக்காலத்தில் புனுகுகாப்பு

புனுகுக் காப்பால் உச்சிப் பொழுதில்
தனுவின் மெருகை தரிசனம் செய்யப்
பனுவல் போற்றும் பரமன் கடைக்கண்
அனுக்கிர கத்தால் ஆட்கொள் வானே. ... 1

[தனு = உடல்]

தோணி யப்பர் துணையென் றானால்
ஆணிப் பொன்னாய் அகம்பொலி வுறுமே
ஊணின் தாக்கம் உள்ளம் குன்றப்
பேணும் நெறிகளில் பிழையறுந் திடுமே. ... 2

[ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு]
15/04/2017

*****
 
0006. கச்சியப்பர் பஞ்சாங்க படனம்
(கலிவிருத்தம்)
(சிவன்: காஞ்சி ஏகாம்பரர்)


சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
காஞ்சிபுரம் ஶ்ரீஏக்ம்பரநாதர் திருக்கோவில் பஞ்சாங்க படனம்

நோய்-களை யோகம் நோவிலா நலமிக
வாய்ச்செயும் திதியே வாகைகொள் கரணம்
ஆயுளை வளர்க்கும் வாரமே பாவத்தைத்
தீய்க்குமீன் அஞ்சுநூல் தினம்படிப் பதாலே.

[வாகை = வெற்றி; மீன் = நட்சத்திரம்;
அஞ்சுநூல் = பஞ்சாங்கம்]

(தரவு கொச்சகக் கலிப்பா)
கச்சியப்பர் கோவிலவர் காலடியில் வைத்தடியார்
இச்சையுறும் புத்தாண்டில் இனிநேரும் பலன்சொற்கள்
அச்சடித்த பனுவலதாம் பஞ்சாங்க படனத்தில்
பிச்சரவர் தண்ணளியைப் பெற்றிடவே போற்றுவரே.

15/04/2017

*****
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top