• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தினம் ஒரு திருப்பாவை

Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
தினம் ஒரு திருப்பாவை

தினம் ஒரு திருப்பாவை..

10858402_629391957165837_7237412609760375693_n.jpg


திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும்.

தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.

இதன் இரண்டாம் பாடல், நெய் உண்ணமாட்டோம், பால் அருந்த மாட்டோம் என எவ்வித உணவு வகைகளையும் உட் கொள்ளாதிருத்தலையும், காலையிலே நீராடுவதையும், கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாதிருத்தலையும், செய்யத் தகாதனவற்றைச் செய்யாது தவிர்த்தலையும், தீக்குறளை (தீயதான கோள் சொல்லாதிருக்கையும்) , பிச்சை முதலியன இட்டு நற்செயல்களில் ஈடுபடுவதையும், இறைவனைப் பாடித் துதித்தலையும் பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியனவாகக் கூறி அந் நோன்பு நோக்கும் விதத்தை விளக்குகிறது.

மூன்றாம் பாடல் அதனால் உண்டாகும் பயன்களையும் எடுத்துக் கூறுகிறது. நாடு முழுதும் மாதம் மும்மாரி பெய்யும், வயல்களில் நெற் பயிர் ஓங்கி வளரும். அவற்றிடையே கயல் மீன்கள் துள்ளும், பசுக்கள் நிறையப் பால் கொடுக்கும், எங்கும் நீங்காத செல்வம் நிறையும் என்பது அப் பயன்களாகும். பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெருமைகளைக் கூறிக் கன்னியரைத் துயில் எழுப்பும் பாங்கில் எழுதப்பட்டுள்ளன.
தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது.[SUP][1][/SUP]. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடப்படுகிறது.

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

[h=2]திருப்பாவைச் சிறப்பு[தொகு][/h]​
வைணவ சமய வழிபாட்டில் ஒன்றறக் கலந்து விட்ட ஒன்று திருப்பாவையாகும். மாதவனாகிய எம்பெருமானுக்கு உகந்த மார்கழி மாதக் காலைகளில் அனைத்து வைணவக் கோயில்களிலும் இசைக்கப்படுவதே இதன் பெரும் சிறப்பு. தமிழில் புனையப்பெற்ற பாடல்களே ஆயினும், தமிழறியா அடியார்கள் கொண்ட வைணவத் தலங்களிலும், மார்கழி மாதக் காலைகளில் திருப்பாவை இசைக்கப்படுவதும், இந்தியாவில் எங்கெல்லாம் பெருமானின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப் பெறாத தனிச் சிறப்பாகும். மொழி வேறுபாடின்றி, வைகுந்த நாதனின் வழிபாட்டில் இந்தியக் கண்டம் முழுவதும் விரவிக் காணப்படுவது திருப்பாவைத் தொழுகை.

திருப்பாவையின் சிறப்பு முதன்மையாக அதன் பக்திப் பெருக்கு மட்டுமல்ல. பாற்கோவை முழுதும் விரவிக் கிடக்கும் கோதை மாதவன் பாற்கொண்ட தூய காதலமுதம் மற்றும் அதன் விளைவாய் அடியவருக்கும் அனைவருக்கும் அரும்பெரும் வரமாகக் கிடைத்த தமிழ் மணம்.

Source: https://ta.wikipedia.org/wiki/திருப்பாவை
 
Last edited by a moderator:
ஆண்டாள் பாசுரம்

#பாசுரம்-2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


பொருள்:

திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.


15590281_1186635958116188_1426586339274085091_n.jpg


Source: https://www.facebook.com/photo.php?fbid=1186635958116188&set=gm.1854636818127557&type=3&theater
 
Last edited by a moderator:
பாசுரம் - 3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!


ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை எத்தனை அழகாக திருப்பாவையின் பாசுரங்களில் செதுக்கி இருக்கிறாள் என்பது இந்த பாசுரங்களின் அமைப்பை பார்த்தால் விளங்கும்.

இந்த சிந்தாந்தம், கர்ம ஞான பக்தி யோகங்களை மோக்ஷ சாதனமாக சொல்லவில்லை. ப்ரபத்தி அதாவது சரணாகதியையே மோக்ஷ சாதனமாக சொல்கிறது. அதையும் அர்ச்சிராதி மார்க்கங்கள் வழியாகவே சரணாகதி செய்து ப்ரஹ்மத்தை அடைய வேண்டும் என்று சொல்கிறது. இதையே முதல் பாசுரத்தில், நாராயாணன் என்று பரமபத நாதனை சொன்னாள். இரண்டாவது பாசுரத்தில், பாற்கடலில் பையதுயின்ற பரமன் என்று வியூஹ மூர்த்தியை சொன்னாள். இந்த பாடலில், ஓங்கி உலகளந்த உத்தமன் என்று விபவ அவதார மூர்த்தியை சொல்கிறாள்!

மேலும் த்ருவிக்ரமாவதாரத்தை சொன்னதற்கு ஒரு உயர்ந்த அர்த்தம் இருக்கிறது. இந்த அவதாரம் கருணையின் வடிவம். இந்த அவதாரத்தில் மஹாபலி சக்ரவர்த்தி – அசுரனான போதும், அவன் தேவர்களை வருத்திய போதும் அவனை கொல்லாமல் வாழ்வளித்த அவதாரம். இந்த அவதாரத்தில்தான், நல்லவன், தீயவன், ஆஸ்திகன் – நாஸ்திகன் என்று எந்த வித பாரபட்சமுமில்லாமல் எல்லோர் தலையிலும் தன் பாத ஸ்பர்சம் வைத்த அவதாரம். அதனால் சர்வ வ்யாபகத்வம், சர்வக்ஞத்வம் தோன்ற ஓங்கி உலகளந்த உத்தமன் – புருஷோத்தமன் என்று அழைக்கிறாள் ஆண்டாள்.

பகவான் கட்டிப்பொன்போலே – அவன் நாமம் ஆபரணம் போலே என்று அவன் நாமத்துக்கு ஏற்றம் சொல்வர்கள் பூர்வாசார்யர்கள்; உத்தமன் பெயர் என்று திருமந்திரமான ஓம் நமோ நாராயணாய என்ற திருவஷ்டாக்ஷரத்தை ஆண்டாள் குறிப்பிடுகிறாள். இது முதல் பாசுரத்தில் சொன்ன நாராயண நாமத்திலிருந்து தேறும். அந்த நாமத்தை இடைவிடாது அனுசந்தித்து வந்தால் என்னென்ன நன்மைகளெல்லாம் ஏற்படும் சொல்லப் புகுகிறாள் ஆண்டாள். அந்த வகையில் இந்த பாடல் ஒரு மங்களாசாசனம். இந்த பாடலுக்கு வியாக்யானம் எழுதிய பூர்வாசார்யர்கள், ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நீராடினால் என்றும் கொண்டு விளக்கம் சொன்னதுண்டு.
மழை என்பது நிறைய பெய்தாலும் தீங்கு – பெய்யாமல் விட்டாலும் தீங்கு – துர்பிக்ஷம், பஞ்சம் போன்ற தீங்குகள் நீங்க மழை தேவை. இந்த புருஷோத்தமனின் நாமத்தை சொல்லி நீராடி பாவை நோன்பிருந்தால் தீங்குகள் நீங்க தீங்கில்லாமல் மாதம் மும்மாரி பொழியும் என்று வாழ்த்துகிறாள். அந்த திருவிக்கிரமனின் பாதத்தை நோக்கி ஓங்கி வளர்ந்தது போல் நெற்பயிர்கள் வயல் வெளியெங்கும் நிறையும். அந்த வயல் வெளிகளில் ஊடே ஓடும் ஓடைகளில் மீன்கள் துள்ளி விளையாடும். பூங்குவளை போது – போது என்றால் தளிர் – அந்த குவளை மலர்களின் துளிரில் வண்டுகள் தூங்கும்.

இங்கே சொல்லப்படும் உருவகங்கள் சுட்டுவது, அந்த பரமனின் கருணையால் ப்ரபன்னர்கள் மத்தியில் ஞானம் ஓங்கி வளர்ந்த பயிரைப்போல் செழித்து இருக்கிறது.

அதில் ஆசார்யர்களை அண்டிய சிஷ்யர்கள், துள்ளும் கயல்களைப்போலே அந்த ஞானம் தந்த இன்பத்தினால் களிப்பர். ஆசார்யர்கள் மிகுந்து ஞானம் தழைத்திருப்பதால் குவளைப்போதில் துயின்ற வண்டைப்போல், பாகவதர்களின் ஹ்ருதய கமலத்தில் அந்த பரமன் உறங்குகிறான்.

அத்தகைய செழிப்பில், பெரிய பசுக்கள் வள்ளலைப்போல் குடம் குடமாக பாலை நிறைக்கின்றன. அவைகளின் மடி பெருத்து இருப்பதால் ஒரு கையால் பாலைக்கறக்க இயலாது.. முலை ‘பற்றி’ என்று இருகைகளாலும் பசுக்களின் மடியை பற்றித்தான் பாலை கறக்க முடியும்… இதற்கும் தேங்காதே என்று தயங்காமல் புகுந்து பாலை கறக்க சித்தமாக ஆய்பாடி இடையர்கள் இருப்பார்களாம்.

இங்கே பசுக்கள் ஒரு உருவகம். அந்த பகவானின் உருவகம். வள்ளன்மை அவன் குணம். அவன் எவ்வளவு கொடுத்தாலும் குறைவில்லாத வள்ளல். அத்துடன் பாலை கன்று குட்டிகளும், இடையர்களும் கொள்ளாவிடில் பசு எப்படி தவியாய் தவிக்குமோ அதுபோல் பரமனும் ஜீவாத்மாக்கள் அவனை கொள்ளாவிடில் தவித்து போகிறான். ஜீவாத்மாக்கள் முக்தி பெற்று அவனை எவ்வளவு அனுபவிக்கிறார்களோ அதே போல் அவனும் அவர்களை கொண்டு சுகிக்கிறான் என்பது தேறும்.

ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீராடி நோன்பிருந்து இத்தகைய செல்வங்களை எந்த நாளும் விட்டு நீங்காமல் பெற்று நிறைவோம் என்று ஆண்டாள் மங்களாசாசனம் செய்கிறாள்.

நன்றி : https://bhakthi.wordpress.com/2007/12/18/திருப்பாவை-3-ஓங்கி-உலகளந்/
 



தினம் ஒரு திருப்பாவை -
பாசுரம் - 4

மழை வளம் தருவாய் மணிவண்ணா..! #MargazhiSpecial

kannan5_11409.jpg



திருப்பாவை மூன்றாவது பாசுரத்தில், 'தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து' என்று ஆண்டாள் பாடி இருக்கிறாள். பயிர்களுக்கும் உயிர்களுக்கும் எந்த ஒரு துன்பமும் விளைவிக்காமல், மழை பெய்யவேண்டும் என்றும் வேண்டுகிறாள். அந்த மழை வளத்தைத் தந்தருளுமாறு கிருஷ்ணரை வேண்டுகிறாள். மார்கழி நீராட நீர்நிலைகளில் நீர் இருந்தால்தான் முடியும். அந்த நீர் வளத்தைத் தருவது மழைவளம். அந்த மழைவளத்தைத் தருபவன் வருணதேவன். அந்த வருணன் மழைவளம் தரவேண்டும் என்று கிருஷ்ணரிடம் ஆண்டாள் பிரார்த்திக்கிறாள்.

"கிருஷ்ணா, எங்களை வஞ்சித்துவிடாமல் மழைவளம் தந்தருள்வாய்" என்று வேண்டும் ஆண்டாள், அந்த மழை எப்படி பொழியவேண்டும் என்பதையும் அழகாக விவரிக்கிறாள். காணும் இடம் எங்கும் அவளுக்குக் கண்ணனே என்பதால், அவள் விவரிப்பதும் கண்ணனும் கண்ணனைச் சார்ந்த பொருட்களாகவுமே இருக்கின்றன.

ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கருத்து,
பாழியந் தோளுடையப் பற்பநாபன் கையில்,
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினிற் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


மழைக்கு அதிபதியாக நாம் வருணதேவனைக் குறிப்பிட்டுச் சொன்னாலும், அந்த வருணனும் கண்ணனின் ஆணைக்குக் கட்டுப்பட்டவன்தான். எனவே, ஆண்டாள் கண்ணனையே மழை வளம் தரக்கூடியவனாக அழைக்கிறாள்.


andalpair_11205.jpg





'வட்டம் வட்டமாகச் சுற்றிச் சுழன்று பெய்கின்ற மழைக்கு இறைவனே, நாங்கள் மார்கழி நீராடி நோன்பு இருக்க விரும்புகிறோம். அதுவும் உன்னை அடைவதற்காகவே நாங்கள் நோன்பு இருக்கிறோம். எனவே, கடலில் புகுந்து கடல்நீரினை உறிஞ்சி எடுத்துக்கொண்டு வானத்துக்கு ஏறி, ஊழிக்காலத்து முதல்வனாக இருந்து சிருஷ்டிகளைப் படைக்கும் உன்னுடைய திருமேனியின் நிறம் போன்ற கருத்த மேகங்கள், நாபிக் கமலத்தில் தாமரை மலரைக் கொண்ட பத்மநாபனின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரத்தின் பிரகாசம் போன்ற மின்னலையும், பகவானின் கையில் இருக்கும் பாஞ்சஜன்ய சங்கின் ஒலி போல் கர்ஜிக்கும் இடியையும், ஏற்படுத்தியபடி, பகவானே, உன்னுடைய கோதண்டமாகிய வில்லில் இருந்து சரமாரியாகப் புறப்பட்டு பாய்ந்து செல்லும் அம்புகளைப் போல், மழையைப் பொழியச் செய்வாய். அப்போதுதான் நாங்கள் மார்கழி நீராடவும், உலகத்தில் இன்புற்று வாழவும் முடியும். எனவே வஞ்சனை இல்லாமல் மழையப் பொழியச் செய்வாய்' என்று வேண்டுகிறாள்.

'ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்' என்று ஆண்டாள் பாடியதற்கு வேறு ஒரு விதத்திலும் பொருள் சொல்லலாம்.

ஆண்டாள், பகவான் கிருஷ்ணரை அடையவேண்டும் என்பதற்காகத்தான் மார்கழி நோன்பு கடைப்பிடிக்கப் போகிறாள். தான் மட்டும் அந்தப் பேரின்பத்தை அடையவேண்டும் என்று சுயநலமாக நினைக்காமல், தன்னுடைய தோழிகளும் அந்தப் பேரின்பத்தை அடையவேண்டும் என்று விரும்புகிறாள். பகவானை அடைவது மட்டுமல்ல, அவனை விட்டுப் பிரிந்திருக்கும் நிலையிலும் அவனுடைய நினைப்பாகவே இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறாள். அந்த வரத்தைத் தட்டாமல் அளிக்கவேண்டும் என்று கிருஷ்ணனை வேண்டுகிறாள்.

'கிருஷ்ணா, நீ எப்போதும் அழிவற்ற பரம்பொருள். ஊழிக்காலத்துக்குப் பின் இந்த உலகத்தை மறுபடியும் சிருஷ்டி செய்யும் முதல் பரம்பொருளும் நீயே. ஜீவாத்மாக்களாகிய நாங்கள் அடிக்கடி பிறந்தாலும், அவரவர் விதிக்கு ஏற்றபடி சரீரங்கள் அழிந்தாலும், அழியாத ஆத்மாக்களாக இருக்கிறோம். எங்களுடைய கர்மவினைப்படி பலன்களை அனுபவிக்கச் செய்கிறாய். ஆனால், ஏதோ ஒரு பிறவியில் செய்த புண்ணியப் பயனாய் இப்போது நாங்கள் உன்னிடத்தே நீங்காத பக்தி கொண்டவர்களாக இருக்கிறோம். இப்படியே இந்த நிலையிலேயே நாங்கள் நிலைத்திருக்கும்படி நீ அருள்புரியவேண்டும்' என்று பிரார்த்திக்கிறாள்.

அவனிடம் நீங்காத பக்தி நமக்கு ஏற்படுவதற்கும் அவனுடைய அருள் வேண்டும் என்பதால்தான் ஆண்டாள் பகவான் கிருஷ்ணரை பிரார்த்திக்கிறாள்.

-க.புவனேஸ்வரி

நன்றி: http://www.vikatan.com/news/spirituality/75280-andal-thiruppavai-fourth-devotional-hymn.art
 
Last edited by a moderator:

தினம் ஒரு திருப்பாவை -
பாசுரம் - 5
பாவங்கள் நீங்க ஆண்டாள் காட்டும் வழி #Margazhi Special



311058gif_18015.jpg



மனிதர்களாகிய நாம் செய்யும் வினைப்பயன்களால்தான் நமக்குப் பிறவி ஏற்படுகிறது. அப்படி நாம் எடுத்த இந்தப் பிறவியிலும் நாம் தெரிந்தும் தெரியாமலும் பாவங்கள் பல செய்கிறோம். அப்படி நாம் செய்யும் பாவங்கள் மட்டுமல்லாமல், இனி நாம் அறியாமல் செய்யப்போகும் பாவங்களும் நீங்குவதற்கு ஆண்டாள் மிக அருமையான, கடைப்பிடிப்பதற்கு எளிதான ஒரு வழியை நமக்குக் காட்டி இருக்கிறாள். தூய மனதினை உடையவர்களாக நாம், பகவான் கிருஷ்ணனுடைய புகழை வாய் மணக்க மணக்கப் பாடி, அவனை மனதால் தியானித்தாலே போதும் நாம் செய்த பாவங்களும்,இனி அறியாமல் செய்யப்போகும் பாவங்களும் தீயில் பட்ட பொருட்களைப் போல் பஸ்பமாகிவிடுமாம். எத்தனை எளிமையான வழியை நமக்கு அழகாகக் காட்டிவிட்டாள் ஆண்டாள்?!

பகவான் கிருஷ்ணன் தான் வடமதுரையில் அவதரித்தபோது, அங்கே புனித நதியாக புண்ணியம் சேர்த்துக்கொண்டு இருந்த யமுனை நதிக்கு மேலும் புனிதம் சேர்த்துவிட்டாராம். திருப்பாவையின் 5-வது பாடலில் ஆண்டாள், மார்கழி நோன்பின்போது தாங்கள் வழிபடப்போகும் பகவான் கிருஷ்ணரின் மகிமைகளை தன்னுடைய தோழியர்களுக்குக் கூறி, அவர்களை எழுப்புவது போல் அமைந்திருக்கிறது.

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் மணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது,
வாயினாற் பாடி மனத்தினாற் சிந்திக்க,
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.


மாயங்கள் செய்வதில் வல்லவனும், அழியா புகழுடைய நகரமான வடமதுரையில் அவதரித்தவனும், தான் அங்கே அவதரித்தபோது ஏற்கெனவே அங்கே பாய்ந்துகொண்டிருந்த யமுனையுடன் வைகுந்தத்தில் இருக்கும் விரஜா நதியை கலக்கச் செய்து, அந்த நதியை மேலும் புனிதப் படுத்தியவனும் பகவான் கிருஷ்ணனே.


311036gif_18150.jpg



தேவகியின் மணி வயிற்றில் அவதரித்து, அவளை பிரகாசிக்கச் செய்தவன் கண்ணன். அவனே ஆயர்குலத்துக்கு ஓர் ஒப்பற்ற அணியாகத் திகழ்பவன்.தேவகியின் வயிற்றில் அவதரித்து அவளுக்கு புகழ் சேர்த்த கண்ணன், தன்னை வளர்க்கும் பெரும் பேற்றினை அடைந்த யசோதையிடமும் கட்டுண்டு, அவளையும் புகழ் சேர்த்தான். அதற்காகவே அவன் புரிந்த லீலைகள் எண்ணற்றவை. எப்போது பார்த்தாலும் கோபிகை எவர் வீட்டுக்காவது சென்று வெண்ணெயைத் திருடித் தின்பதும், கோபிகைகள் தண்ணீர்ப் பானை சுமந்து செல்லும்போது கல்லெறிந்து உடைப்பதும் என்று அவன் புரிந்த குறும்புகள் கோபிகைகளை பாடாய்ப்படுத்தின. ஒரு கட்டத்தில் கண்ணனின் தொல்லைகள் தாங்கமாட்டாமல், கண்ணனின் தாய் யசோதையிடம் புகார்களை அடுக்கினர். கண்ணனின் குறும்புகளால் அடுக்கடுக்கான புகார்கள் வரவே, யசோதை அவனை வீட்டில் கட்டிப்போட்டு விடுவது என்று முடிவு செய்து, ஒரு கயிற்றை எடுத்து வந்தாள்.

அவள் கொண்டு வந்த கயிற்றில் கண்ணன் கட்டுப்படவில்லை; அவள் மேலும் மேலும் கயிறுகளைப் பிணைத்து கண்ணனைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தாள். ஒரு கட்டத்தில் சோர்ந்துபோய், 'ஹே, பகவானே! இந்த பிள்ளையால்தான் எனக்கு எத்தனை தொந்தரவு? இவனைக் கட்டப் பார்த்தாலும் முடியமாட்டேன் என்கிறதே' என்று சலித்துக்கொண்டாள். இனியும் அவளை சிரமப்படுத்த விரும்பாத கண்ணன் கடைசியில் ஒரு வழியாக யசோதையின் கயிற்றில் கட்டுண்டான். ஒரு வழியாக யசோதை அவனை ஓர் உரலில் கட்டியே விட்டாள். யசோதையின் அன்புக்குக் கட்டுப்பட்டவனாக யசோதைக்கும் பெருமை சேர்த்துவிட்டான்.

பகவானே என்று யசோதை அலுத்துக்கொண்டதுமே, அவளுக்குக் கட்டுப்பட்டுவிட்ட கண்ணனை, அவனுடைய புகழை தூய மனம் கொண்டவர்களாக நாம் பாடித் தொழுதால், அவன் நம்முடைய பாவங்கள் எல்லாவற்றையும், தீயிடைப் பட்ட பொருள் பஸ்பமாகி விடுவதுபோல் பஸ்பமாக்கி விடுவான். எனவே, தோழியர்களே! வாருங்கள். புனிதமான இந்த மார்கழி மாதத்தின் அதிகாலைப் பொழுதில் நீராடி அவனைப் போற்றி பணிந்து வணங்குவோம் என்று ஆண்டாள் அழைக்கிறாள்.

நாம் செய்த பாவங்கள் கண்ணனின் புகழ் பாடி அவனை நினைத்ததுமே அகன்றுவிடுகிறது. கண்ணனின் புகழ் பாடி நாம் அவன் நினைவில் லயித்திருக்கும்போது, நம்மால் எப்படி பாவங்கள் செய்யமுடியும்? ஆனாலும், நம்மை அறியாமல் செய்யும் பிழைகளையே 'புகுதருவான் நின்றனவும்' என்று ஆண்டாள் குறிப்பிடுகிறாள்.



andalsmall_18285.jpg







இப்படி சொல்லியும் ஆண்டாளின் தோழியர் எழுந்திருக்கவில்லை. பொழுது புலர ஆரம்பித்துவிட்டது. விடியலின் நிகழ்வுகளைஅடுத்த பாடலில் விவரித்து தோழியரை துயில் எழுப்புகிறாள் ஆண்டாள். எப்படி..?

க.புவனேஸ்வரி
நன்றி : சக்தி விகடன் / Face Book / http://www.vikatan.com/news/spirituality/75385-andal-thiruppavai-fifth-devotional-hymn.art
 
Last edited by a moderator:
தினம் ஒரு திருப்பாவை
பாசுரம் - 6
ஆண்டாள் பாடும்... கிருஷ்ணரின் பால லீலைகள்! #MargazhiSpecial


kannan1_19314.jpg


பரமாத்மாவை அடையவேண்டும் என்னும் துடிப்பே ஜீவாத்மாவான ஆண்டாளுக்கு ஏற்படுகிறது. அந்த பக்தி மேலீட்டின் வெளிப்பாடாகத்தான் அவள் புனித மார்கழியில் நீராடி, நோன்பு இருக்க விரும்புகிறாள். 'தான் பெறப்போகும் இன்பம் தன் தோழிகளும் பெறவேண்டும் என்றும் அவள் விரும்புகிறாள். அதனால், அவள் திருப்பாவைப் பாடல்களைப் பாடி, தன் தோழியரையும் எழுப்புகிறாள். இந்தப் பாடலில் அவள் பகவான் கிருஷ்ணரின் பால லீலைகள் இரண்டைக் குறிப்பிடுகிறாள். அதுமட்டுமல்ல அதிகாலைப் பொழுதை அவள் பக்திபூர்வமாக விவரிக்கும் பாங்கே நமக்கு ஆனந்த அனுபவத்தை ஊட்டுவதாக அமைந்திருக்கிறது.

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்,
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்,
மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்,
உள்ளம் புகுந்து குளிந்தேலோ ரெம்பாவாய்.

இந்தப் பாடலில் ஆண்டாள் துயில் எழுப்பும் தோழி பகவானிடத்தில் மிகவும் அன்பு கொண்டவள். எனவே அவளுடைய மனநிலைக்கு ஏற்ப அவளுடைய பாடல் அமைந்திருக்கிறது.

''தோழி, பொழுது விடிந்துவிட்டது. அதோ பறவைகளின் இனிய குரலோசை உனக்குக் கேட்கவில்லையா? கருடனாகிய பறவையை வாகனமாகக் கொண்ட பகவானின் கோயில் கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன. அதை அறிவிப்பதுபோல், தூய வெண்மை நிறத்துடன் பளிச்சிடும் சங்கு பெருத்த சப்தத்துடன் ஒலிக்கிறதே, அதுகூடவா உனக்குக் கேட்கவில்லை?'' என்று கேட்கும் ஆண்டாள், பகவான் கிருஷ்ணரின் பால்ய லீலைகளில் இரண்டைக் குறிப்பிடுகிறாள்.

தன்னைக் கொல்வதற்காகப் பிறந்த கண்ணன் கோகுலத்தில் யசோதையின் வீட்டில் வளர்கிறான் என்பதைத் தெரிந்துகொண்ட கம்சன், கண்ணனை எப்படியும் அழித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொள்கிறான். அதற்காக அவன் முதலில் கோகுலத்துக்கு அனுப்ப நினைத்தது பூதனை என்ற அரக்கியை.

பூதனையை அழைத்த கண்ணன் அவளிடம், ''நீ கோகுலத்துக்குச் செல். அங்கே யசோதையின் வீட்டில் வளர்ந்து வரும் கண்ணனை எந்தத் தந்திரமாவது செய்து கொன்றுவிடு'' என்று கட்டளை இடுகிறான். கண்ணனின் கட்டளையை ஏற்று கோகுலத்துக்குச் செல்கிறாள். ஆனால், அரக்கி வடிவத்தில் போனால் மற்றவர்கள் தன்னைத் தெரிந்துகொண்டால் போகும் காரியம் முடியாது என்பதால், அழகான பெண்ணாக மாறி கோகுலத்துக்குச் செல்கிறாள். யசோதையின் வீட்டில் படுத்திருந்த குழந்தை கண்ணனை எடுத்து தன் மார்பில் அணைத்துக்கொண்டு, மார்பகங்களில் இருந்து நச்சு கலந்த பாலை ஊட்டத் தருகிறாள். அனைத்தும் அறிந்த மாயக் கண்ணன் அவளுடைய மார்பகங்களில் இருந்து நச்சுப் பாலை அருந்துவதுபோல் அவளுடைய உயிரையே உறிஞ்சிவிடுகிறான். இதைத்தான் ஆண்டாள், 'பேய்முலை நஞ்சுண்டு' என்று குறிப்பிடுகிறாள்.



kannan4_19184.jpg



பூதனை இறந்த செய்தி கேட்டதும் கம்சன் கலங்கித்தான் போனான். ஆனாலும் கண்ணனைக் கொன்றுவிடவேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் அவன் விடவில்லை. சகடாசூரன் என்பவனை அழைத்து கோகுலத்துக்குச் சென்று கண்ணனை கொன்றுவிட்டு வருமாறு கட்டளை இடுகிறான். அவனும் சக்கரமாக மாறி கண்ணனைக் கொல்லச் செல்கிறான். தன்னைக் கொல்ல நினைத்து வருபவன் சகடாசுரன் என்பது கண்ணன் அறியாததா என்ன? சக்கரத்தின் வடிவத்தில் வந்த அசுரனைத் தன் காலால் உதைத்து அழிக்கிறான். இந்த லீலையைத்தான் ஆண்டாள், 'கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி' என்கிறாள். கள்ளச் சகடம் என்றால் தீய வழியில் செல்லும் சக்கரம் என்று பொருள். அந்தச் சக்கரத்தை நாம் பின்பற்றிச் சென்றால் நமக்குத் தீங்குதான் ஏற்படும். இங்கே தீய வழியில் செல்லும் சக்கரம் என்பது நம்முடைய புலன்களைத்தான் குறிக்கும். அந்தப் புலன்களை அடக்கி நல்ல வழியில் செலுத்தக்கூடிய வல்லமை பகவான் கண்ணனின் திருவடிகளுக்கே உண்டு. எனவே நம்முடைய மனதில் எப்போதும் பகவான் கண்ணன் மீதான பக்தி நிலைத்திருக்கவேண்டும்.

இப்படி பகவான் கண்ணனின் லீலைகளைக் குறிப்பிட்டு தன் தோழியை எழுப்பும் ஆண்டாள், அந்தப் பொழுதில் பாற்கடலில் ஆதிசேஷ பாம்பணையில் அறிதுயில் கொண்டிருக்கும் பகவானை, முனிவர்களும் யோகியரும் உள்ளத்தில் நினைத்து ''அரி, அரி' என்று துதிக்கும் பேரொலியானது உனக்குக் கேட்கவில்லையா? விரைவில் எழுந்து வா மார்கழி நீராடி நாமும் அந்தப் பரமனைப் பணிவோம் என்று அழைக்கிறாள்.

-க.புவனேஸ்வரி

நன்றி : சக்தி விகடன் / Face Book / http://www.vikatan.com/news/spirituality/75490-andal-thiruppavai-sixth-devotional-hymn.art
 
Last edited by a moderator:
தினம் ஒரு திருப்பாவை!
பாசுரம் -7
கிருஷ்ணருக்கு கேசவன் என்ற பெயர் வந்தது ஏன்...#Margazhi Special


p20a_19567.jpg


தி
ருப்பாவை ஆறாவது பாடலில் தன்னுடைய தோழி பகவானிடன் பக்தி கொண்டிருப்பவள் என்ற எண்ணத்தில் ஆண்டாள் பகவானின் லீலைகளைக் குறிப்பிட்டு, மார்கழி நீராடி அவனை அடைய எழுப்புகிறாள். ஆனால், அந்தத் தோழியோ எழுந்திருக்கவில்லை. எனவே ஆண்டாள் அவளை பேய்ப்பெண்ணே என்று அழைத்து, பொழுது விடிந்துவிட்டதற்கு அறிகுறியாக நடைபெறும் நிகழ்ச்சிகளை எல்லாம் அடுக்குகிறாள்.
இதோ அந்தப் பாடல்...

கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே,
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து,
வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி,
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ,
தேச முடையாய் திறவேலோ ரெம்பாவாய்.


ஆனைச்சாத்தன் என்று ஒரு பறவை இனம் உண்டு. பகலெல்லாம் இரை தேடச் செல்லப்போவதால், தங்கள் இணைப் பறவைகளிடம் கொஞ்சநேரம் கொஞ்சிப் பேசிக் கொண்டிருக்குமாம். இந்த ஆனைச்சாத்தனுக்கு வலியன் என்றும், பரத்வாஜ பறவை என்று பெயர்கள் உண்டு. பரத்வாஜ ரிஷி இந்தப் பறவையின் வடிவில் பரந்தாமனை வழிபட்டதாகவும் சொல்லுவதுண்டு. அதைக் குறிப்பிட்டு ஆண்டாள் தன்னுடைய தோழியை, 'ஆனைச்சாத்தன் பறவைகள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் பெருத்த சப்தமானது உன் காதுகளில் விழவில்லையா? அப்படி என்ன தூக்கம்? பகவானை தரிசிக்க செல்லமுடியாமலும், நல்லவர்களுடன் பழகமுடியாதபடியும் பேய்கள் உன்னை உறக்கத்தில் இருந்து எழுந்திருக்கமுடியாதபடி செய்கிறதா? இப்படி ஆண்டாள் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே, காற்றில் மலர்களின் நறுமணம் கமழ்ந்து வருவதை உணர்கிறாள் ஆண்டாள். அந்த நறுமணம் எங்கிருந்து வருகிறதென்றும் புரிந்துகொண்டாள். தான் புரிந்துகொண்டதையே அடுத்த வரிகளில் சொல்லி தோழியை எழுப்புகிறாள். ''இதோ பார், பொழுது விடிந்ததுமே கோபிகைப்பெண்கள், தங்கள் கூந்தலில் சூடியுள்ள நறுமண மலர்கள் அசைந்து காற்றில் மணம் பரப்ப, அவர்கள் மத்தினால் தயிர் கடையும் சப்தம் உனக்குக் கேட்கவில்லையா; தயிர் கடையும்போது அவர்களின் கைகள் மற்றும் உடலின் அசைவுகளால், அவர்கள் அணிந்திருக்கும் பலதரப்பட்ட வளையல்களும் ஆபரணங்களும் ஒன்றோடு ஒன்று உரசி எழுப்பும் சப்தம்கூடவா உனக்குக் கேட்கவில்லை? அப்படி என்ன தூக்கமோ உன் தூக்கம்? என்று கேட்கிறாள்.

p104a_20001.jpg



அப்படியும் அவள் எழுந்திருக்கவில்லை. அப்போதுதான் ஆண்டாளுக்கு மற்றொரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. அந்தத் தோழி ஆண்டாளின் எஜமானியாம். இங்கே எஜமானி என்பது, பகவத் பக்தியில் மேலானவள் என்று பொருள். அப்படி பகவத் பக்தியில் மேலானவளாக இருக்கும் நீயே இப்படி தூங்கினால், நாங்கள் என்ன செய்வது? நீ பெரிய அந்தஸ்தில்
இருப்பவள். ஆனால், உன்னை அண்டியவர்களிடத்தில் நீ இப்படி பாராமுகமாக இருப்பது சரியா? நான் எத்தனையோ சொல்லியும் இன்னும் எழுந்திருக்காமல் இருக்கிறாயே? இது உனக்கே நியாயமாக படுகிறதா?'' என்று கேட்கிறாள்.


எங்களைப் போன்ற பெண்களுக்கு எல்லாம் தலைவியாக இருப்பவளே! விரைந்து எழுந்து வா. புனிதமான இந்த மார்கழி அதிகாலையில் நீராடி, பகவானின் அவதாரமாக வடமதுரையில் பிறந்து, கோகுலத்தில் வளர்ந்து வரும் ஶ்ரீகிருஷ்ணனை வழிபடலாம். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? துஷ்ட நிக்கிரஹம் செய்து சிஷ்டபரிபாலனத்துக்காக அவதரித்தவன். அவனுக்கு வழங்கும் எத்தனையோ திருப்பெயர்களில் கேசவன் என்பது ஒன்றாகும். அந்த கேசவனைப் நாங்கள் பாடுவதைக் கேட்டபிறகும் நீ தூங்கிக் கொண்டிருக்கிறாயே? என்கிறாள்.

p15a_20277.jpg



கேசி என்ற அசுரனைக் கொன்றதால்தான் கண்ணனுக்கு கேசவன் என்ற பெயர் ஏற்பட்டது. இந்தக் கேசி என்பவன் கம்சனின் நண்பன். தான் நினைத்த மாத்திரத்தில் நினைத்த வடிவத்தை எடுப்பவன். கம்சன் அவனை அழைத்து கோகுலத்துக்குச் சென்று கண்ணனை கொன்றுவிட்டு வருமாறு கட்டளை இடுகிறான். கேசியும் மிகப் பெரிய குதிரை வடிவத்தை எடுத்துக்கொண்டு, கோகுலத்துக்குச் சென்றான்.

பிடரிமுடி காற்றில் பறக்க, பயங்கரமாக கனைத்தபடி ஆகாயத்தில் தன் நீண்ட வாலை கருத்த மேகம் போல் சுழற்றியதைக் கண்ட கண்ணன், அவன் தன்னை போருக்கு அழைக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டார். அவன் தன் கால்களை நீட்டி கண்ணனைக் கொல்லப் பார்த்தான். ஆனால், கண்ணன் அந்தக் கால்களைப் பற்றி வேகமாகச் சுழற்றி தூர எறிந்தார். அப்படியும் அவன் அழியவில்லை. வாயைப் பிளந்தபடி கண்ணனை விழுங்குவதுபோல் ஆவேசமாக வந்தான். கண்ணன் கேசியின் திறந்த வாய்க்குள் தன் கையை செலுத்தி, செலுத்திய கையை பெரிய மரம் போல் பெரியதாக்கி, கேசியின் வாயைப் பிளந்து அவனைக் கொன்றார். இதனால்தான் பகவான் கண்ணனுக்கு கேசவன் என்று பெயர் வந்தது.

உடையவளே! எழுந்திருந்து வா என்று அழைக்கிறாள் ஆண்டாள். தன்னை ஒளி பொருந்திய முகத்தினை உடையவள் என்று புகழ்ந்து பாடியதால் மகிழ்ச்சி அடைந்த அந்தப் பெண், இனியும் ஆண்டாளை காக்க வைக்கக்கூடாது என்று நினைத்து தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கிறாள். அவளுடன் சேர்ந்து அடுத்த வீட்டில் இருக்கும் பெண்ணை எழுப்பச் செல்கிறார்கள்.

-க.புவனேஸ்வரி

நன்றி : சக்தி விகடன் / Face Book http://www.vikatan.com/news/spirituality/75588-andal-thiruppavai-seventh-devotional-hymn.art
 
Last edited by a moderator:
[h=1]தினம் ஒரு திருப்பாவை
பாசுரம் - 8
தேவாதி தேவனைப் போற்றுவோம்! #MargazhiSpecia[/h]
311077gif_20143.jpg



மார்கழி நீராடி, பாவை நோன்பு கடைப்பிடித்து கோகுலத்து கிருஷ்ணரின் அருளைப் பெற விரும்பிய ஆண்டாள், மார்கழி அதிகாலைப் பொழுதில் எழுந்திருந்து தன்னுடைய தோழியர் வீடுகளுக்குச் சென்று ஒவ்வொருத்தியாக அழைக்கிறாள். வெறுமனே பெயர் சொல்லி அழைக்காமல், பாட்டு பாடி அழைக்கிறாள். ஒவ்வொரு பாடலிலும் கிருஷ்ணரின் லீலைகளை விவரித்து, அப்படிப்பட்ட கிருஷ்ணரின் அருளை நாம் பெறவேண்டாமா என்று கேட்டு தோழியை எழுப்புகிறாள். சென்ற பாடலில் தாங்கள் தலைவியாக ஏற்றுக்கொண்டவளை 'நாயக பெண்பிள்ளாய்' என்று அழைத்து எழுப்பியவள், இன்று தன்னுடைய ஒப்பற்ற அழகினால் எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படும் ஒரு பெண்ணை ஆண்டாள் எழுப்பும் பாடல் இது.

கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு,
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம், கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு,
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்,
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்

''ஒப்பற்ற அழகைக் கொண்டதால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண்ணே! கீழ்வானம் வெளுத்துவிட்டது. எழுந்து வா, மார்கழி நீராடி பகவான் கிருஷ்ணரின் அருளை நாம் பெறலாம்'' என்று அழைக்கிறாள். ஆனால், அந்தத் தோழி எழுந்திருக்கவில்லை.

''பெண்ணே, பொழுது விடிந்துவிட்டது உனக்குத் தெரியவில்லையா என்ன? வீடுகளில் இருந்து மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிடப்பட்ட பசுக்களும், எருமைகளும் மேய்வதற்காக பரவலாகப் போவதைப் பார். இப்போதாவது பொழுது விடிந்துவிட்டது என்பதை தெரிந்துகொள். சீக்கிரம் எழுந்து வா. மார்கழி நீராடி பகவான் கிருஷ்ணரை வழிபடுவோம்'' என்று எழுப்புகிறாள்.


ஹும், அவள் எழுந்திருக்கவே இல்லை. ஆண்டாளுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது. சற்று கோபத்துடனே, ''தோழி, மார்கழி நீராடி பகவானின் அருளைப் பெற புறப்பட்டுவிட்ட தோழியர்களைக்கூட போகவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டேன். அவர்களும் போனால் போகட்டும் என்று உனக்காக இங்கே வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். சீக்கிரம் எழுந்து வா'' என்று அழைக்கிறாள். மற்ற தோழிகள் தனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும், அவள் எழுந்திருக்கவில்லை. இனி அவளை ஆசை காட்டித்தான் எழுப்பவேண்டும் என்று ஆண்டாள் முடிவு செய்துவிட்டாள்.

அதை இப்படிச் சொல்கிறாள்:

''பெண்ணே, நாம் மார்கழி நீராடி நாங்கள் பாடிப் பணியும் பகவான் கிருஷ்ணர் எப்படிப்பட்டவர் தெரியுமா? அவர் மாவாயைப் பிளந்தவர்; மல்லரை வாட்டியவர்'' என்கிறாள்.

மாவாயைப் பிளந்தவன் என்று ஆண்டாள் குறிப்பிடுவது, நாம் முன் பாடலில் பார்த்த கேசி அரக்கனை வதம் செய்த லீலையைத்தான்.
'மல்லரை வாட்டியவன் என்று ஆண்டாள் குறிப்பிடுவது, கிருஷ்ணர் கம்சன் அழைப்பின்பேரில் மதுராவுக்குச் சென்றபோது நடைபெற்ற ஒரு சம்பவத்தை தான் கிருஷ்ணனை அழிப்பதற்காக அனுப்பிய பூதனை, சகடாசுரன், கேசி என்று அத்தனை அரக்கர்களையும் கிருஷ்ணர் வதம் செய்துவிடவே, மிகுந்த அச்சம் கொண்ட கம்சன், கிருஷ்ணரையும் பலராமரையும் மதுராவுக்கு வரச் செய்து எந்த வகையிலாவது அவர்கள் இருவரையும் அழித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டான்.

அக்ரூரரை அழைத்து, தான் தனுர் யாகம் நடத்த இருப்பதாகவும், அதற்கு கிருஷ்ண பலராமர்களை அழைக்க விரும்புவதாகவும் கூறி, அவர்களை அழைத்து வரும் பொறுப்பை ஒப்படைத்தான். கம்சனின் எண்ணம் அக்ரூரருக்குத் தெரியாது. அவரும் கோகுலத்துக்குச் சென்று கம்சனின் அழைப்பை கிருஷ்ண பலராமர்களிடம் தெரிவிக்கிறார்.


கிருஷ்ண பலராமர்களும் மதுராவுக்கு வருகின்றனர். தான் அன்புடன் வரவேற்கவேண்டிய கிருஷ்ண பலராமர்களைக் கொல்வதற்காக முஷ்டிகன், சாணூரன் என்னும் இரண்டு மல்யுத்த வீரர்களை அனுப்புகிறான். மல்யுத்தத்தில் மிகவும் வல்லமை கொண்ட அவர்கள் கிருஷ்ண பலராமர்களைக் கொன்றுவிடுவார்கள் என்பதில் கம்சனுக்கு அவ்வளவு நம்பிக்கை. ஆனால், நடந்ததென்னவோ, கிருஷ்ணர் அந்த மல்யுத்த வீரர்களை வதம் செய்துவிட்டார். இதைத்தான் ஆண்டாள் மல்லரை மாட்டிய தேவாதி தேவன் என்று குறிப்பிடுகிறாள்.

அப்படி கிருஷ்ணரின் லீலைகளைக் கூறி, நாம் மார்கழி நீராடி சென்று அந்த தேவர்களுக்கெல்லாம் தலைவனான தேவாதிதேவனை வழிபட்டால், அவன் நம்முடைய தேவைகள் எதுவென்று ஆராய்ந்து அறிந்து நமக்கு அருள்புரிவான் என்கிறாள். இப்படி ஆண்டாள் ஆசை வார்த்தைகள் கூறியதுமே அந்தத் தோழி எழுந்து வருகிறாள்.
அவளையும் தங்களுடன் சேர்த்துக்கொண்டு அடுத்த தோழியை எழுப்பச் செல்கிறாள் ஆண்டாள்.

க.புவனேஸ்வரி


நன்றி : சக்தி விகடன் / Face Book:http://www.vikatan.com/news/spirituality/75683-andal-thiruppavai-eighth-devotional-hymn.art
 

தினம் ஒரு திருப்பாவை
பாசுரம்- 9
உறங்காமல் உறங்குவது இதுதானோ? #MargazhiSpeci






p15a_17505.jpg


ஆண்டாள் அடுத்ததாக ஒரு தோழியின் வீட்டுக்குச் செல்கிறாள். அவள் சகல செல்வங்களையும் பெற்று சுகமாக வாழ்பவள். அவளுடைய சுகபோக வாழ்க்கையைச் சுட்டிக்காட்டுவதுபோல், பாடலின் முதல் வரியிலேயே, அவள் படுத்திருக்கும் அறையின் ஆடம்பரத்தையும், அவள் படுத்துக்கொண்டு இருக்கும் கட்டிலின் சிறப்பையும் கூறுகிறாள்.

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
,
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள்தான்
ஊமையோ, அன்றிச் செவிடோ, அனந்தலோ,
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ,
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று,
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.


ஆண்டாளின் தோழி படுத்துக்கொண்டு இருந்த அறையானது விலையுயர்ந்த மரவேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த அறையைச் சுற்றி எட்டு திசையிலும் உறக்கத்துக்கு இடையூறு இல்லாதபடி, மிக மெல்லிய ஒளியைப் பரப்பிய விளக்குகள் எரிந்துகொண்டு இருந்தன. அந்த விளக்குகள் புகை தெரியாதபடி மிக மென்மையான நறுமணத்தை காற்றில் பரவச் செய்தது. ரத்தினமயமான அந்த அறையில், தந்தத்தால் செய்யப்பட்டு தங்கமும் நவரத்தினங்களும் இழைக்கப்பெற்ற கட்டிலில், மென்மையான இலவம்பஞ்சை அடைத்துத் தைத்த வெல்வெட் மெத்தையும், தலைக்கு திண்டுகளும் போடப்பட்டு இருந்தன. தூக்கமே வராதவர்கள்கூட படுத்த உடனே தூங்கிவிடும் அளவுக்கு அந்த அறையின் சூழ்நிலை காணப்பட்டது.


அந்த அறைக்குள் தோழிகளுடன் சென்ற ஆண்டாள், தோழியை 'துயிலணைமேல் கண் வளரும் மாமன் மகளே' என்று அழைக்கிறாள். தோழி படுத்துக்கொண்டு இருப்பது ஆண்டாளுக்கு உறங்குவதுபோல் தெரியவில்லையாம். அதனால்தான், 'கண்வளரும் மாமான் மகளே' என்று அழைக்கிறாள். அவள் தூங்குவதுபோலவே தெரியவில்லையாம். கண்களை மூடியபடி எதையோ மனக் கண்ணால் பார்த்துக்கொண்டு இருப்பது போல் இருக்கிறது ஆண்டாளுக்கு. பொதுவாக தூங்குபவர்களைக் கூட எழுப்பிவிடலாம். ஆனால், தூங்குவதுபோல் பாசாங்கு செய்பவர்களை எழுப்புவது அவ்வளவு சுலபமல்ல. உறங்காமல் உறங்குவது என்பது இதுதான் போலும் என்று ஆண்டாள் நினைத்துக்கொள்கிறாள். தான் கூப்பிட்டும் அவள் எழுந்திருக்கவில்லையே அவளை எழுப்ப என்ன செய்யலாம் என்று ஆண்டாள் யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது அந்தத் தோழியின் தாய் பேசும் குரல் உள்ளே இருந்து கேட்டது. உடனே ஆண்டாள் , ''மாமீ, உன் பெண்ணை எழுப்பக்கூடாதா? நாங்கள் எத்தனைநேரம்தான் அவளை எழுப்புவது? சீக்கிரம் உங்கள் பெண்ணை எழுந்திருக்கச் சொல்லுங்கள்'' என்கிறாள்.


அப்படியும் தோழி எழுந்திருக்கவில்லை. உடனே மாமியைப் பார்த்து, ''எத்தனை சொல்லியும் உன் பெண் எழுந்திருக்காமல் இருக்கிறாளே, அவள் என்ன ஊமையா அல்லது செவிடா? அல்லது அவளுடைய சோம்பல்தான் அவளை எழுந்திருக்கவிடாமல் செய்கிறதா? இல்லை அவள் எழுந்திருக்கமுடியாதபடி ஏதேனும் மந்திரம் அவளைக் கட்டிப் போட்டுவிட்டதா?'' என்று கேட்கிறாள்.

கடைசியில் ஆண்டாள் ஒரு முடிவுக்கு வந்தவளாக யாருடைய பெயரைச் சொன்னால், தோழி எழுந்திருப்பாளோ அந்த பகவான் கிருஷ்ணரின் பெயரைச் சொல்லி எழுப்புகிறாள்.

''தோழி, நாங்கள் மாயங்கள் செய்வதில் வல்லவனும், மாதவனும், வைகுந்தத்தில் இருப்பவனும் இப்போது கோகுலத்துக்கு வந்து நம்மை எல்லாம் மகிழ்விப்பவனுமாகிய அந்த கிருஷ்ணனின் புகழைப் பாடப்போகிறோம்; அவனுடைய அருளைப் பெறப்போகிறோம். வேண்டுமானால் நீயும் எழுந்து எங்களுடன் வா, மார்கழி நீராடி அந்த மாமாயக் கண்ணனைப் பணிந்து வணங்குவோம்'' என்று ஆசை வார்த்தைகள் கூறுகிறாள். அந்த மாயவன் பெயரைக் கேட்டவுடனே தோழி எழுந்துகொள்கிறாள்.
அவளையும் அழைத்துக்கொண்டு ஆண்டாள் தன்னுடைய மற்றொரு தோழியை எழுப்ப அவளுடைய வீட்டுக்குச் செல்கிறாள்.

க.புவனேஸ்வரி

நன்றி : சக்தி விகடன் / Face Book / http://www.vikatan.com/news/spirituality/75817-andal-thiruppavai-devotional-hymn.art
 
Last edited by a moderator:
தினம் ஒரு திருப்பாவை

பாசுரம்--10

உறக்கத்தை வரமாகத் தந்தது யாரோ? #MargazhiSpecial


னிதர்களாகப் பிறந்தவர்கள், பகவான் கிருஷ்ணரின் திருவடிகளையே பற்றாகக் கொண்டு, வாழ்க்கையின் நிறைவில் அவருடன் ஐக்கியமாவதுதான். அதுதான் உயர்ந்த லட்சியம். மற்றபடி விரதங்களைக் கடைப்பிடித்து தேவர்களை வழிபட்டு அடையும் சுவர்க்கலோக பதவியானது நிலையானது இல்லை. அதனால்தான் பகவான் கிருஷ்ணர், 'நீங்கள் தேவர்களை வழிபடுவதால் உலக இன்பங்களையும், இந்திரலோக வாசத்தையும்கூட அனுபவிக்கலாம். ஆனால், அவை எல்லாம் என்னை வழிபட்டு அடையக்கூடிய பேரின்பத்துக்கு ஈடாகாது. தேவர்களை வழிபட்டாலும்கூட, அவர்களும் என்னுடைய அருளால்தான் நீங்கள் வேண்டியதைத் தரும் சக்தி பெறுகிறார்கள். எனவே, நீங்கள் என்னையே சரணாகதியாகக் கொண்டு வழிபட்டால், நானே உங்களுக்கு இந்த உலக வாழ்க்கைக்குத் தேவையானவைகளை அருள் புரிவேன்; பின்னர் என்னுடனே உங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வேன்'' என்று சொல்லி இருக்கிறார். அத்தகைய பேரின்பத்தை அடைவதற்காகத்தான் ஆண்டாள் தன்னுடைய தோழிகளை மார்கழி நீராடி மாதவனை வழிபட அழைக்கிறாள். அடுத்தபடியாக ஆண்டாள் அழைக்கச் செல்லும் தோழியை ஆண்டாள் இப்படித்தான் எழுப்புகிறாள்.

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாராயணன், நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால், பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்,
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.


அந்தத் தோழி ஆண்டாளின் குரல் கேட்டும் கதவைத் திறக்கவில்லை. எனவே, ஆண்டாள், ''விரதம் இருந்து சொர்க்கபோகங்களை அனுபவிக்க விரும்புபவளே! நாங்கள் கூப்பிடும் குரல் கேட்டும் இன்னும் கதவைத் திறக்கவில்லையே. சரி, கதவைத் திறக்காமல் போனாலும் பரவாயில்லை. வாய் திறந்து ஒரு வார்த்தையாவது பேசக்கூடாதா'' என்கிறாள். மேலும், ''வைகுந்தத்தில் கிடைக்கக்கூடிய பேரின்பத்துக்கு கோடியில் ஒரு பங்குகூட சொர்க்கலோக இன்பத்துக்கு இல்லை. அப்படிப்பட்ட சொர்க்க இன்பத்தை கற்பனை செய்துகொண்டு, அதையே பெரிதாக நினைத்துக்கொண்டு எங்களை லட்சியம் செய்யாமல் இருக்கிறாயே, எதற்காக வந்தீர்கள் என்று ஒரு பேச்சுக்காவது எங்களைக் கேட்கக்கூடாதா? என்று கேட்கிறாள்.
இத்தனை சொல்லியும் அவள் எழுந்திருக்கவில்லை. அப்போது ஆண்டாளின் மனதில் ஒரு சந்தேகம் எழுகிறது. அதை வெளிப்படையாகக் கேட்கவும் செய்கிறாள்.

''ராமபிரானால் போரில் தோற்கடிக்கப்பட்ட கும்பகர்ணன் இறக்கும்போது உனக்கு அவனுடைய தூக்கத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டானோ?'' என்று கேட்கிறாள்.

ராமபிரானால் அழிக்கப்பட்ட கும்பகர்ணன், தூக்கத்தை வரமாகப் பெற்று வந்தவன் என்று சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் அவன் தூக்கத்தை வரமாகப் பெறுவதற்காக தவம் செய்யவில்லை. தான் என்றும் அழியாமல் நித்தியத்துவத்துடன் இருக்கவேண்டும் என்ற வரத்தைப் பெறுவதற்காகத்தான் தவம் இருந்தான். அவனுடைய தவத்துக்கு மகிழ்ச்சி அடைந்த பிரம்ம தேவர், கும்பகர்ணன் முன் தோன்றி அவன் கேட்கும் வரத்தைக் கொடுக்க விரும்பினார். ஆனால், தேவர்கள், பிரம்ம தேவரிடம், ''இப்போதே கும்பகர்ணனின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. நீங்கள் அவனுக்கு நித்தியத்துவத்தை வரமாகக் கொடுத்துவிட்டால், அவனுடைய அட்டகாசம் எல்லை மீறிப் போய்விடுமே'' என்கிறார்கள். அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருப்பதைத் தெரிந்துகொண்ட பிரம்ம தேவர், சரஸ்வதி தேவியிடம், கும்பகர்ணன் நாவில் இருந்துகொண்டு அவன் கேட்கப்போகும் வரத்தை மாற்றிக் கேட்கும்படி செய்யச்சொல்கிறார். அப்படியே சரஸ்வதி தேவியும் கும்பகர்ணன் நாவில் அமர்ந்துகொண்டு, கும்பகர்ணன் நித்தியத்துவம் வேண்டும் என்று கேட்க நினைத்த வரத்தை நித்திரத்துவம் வேண்டும் என்று கேட்கும்படியாகச் செய்துவிட்டாள். இதுதான் கும்பகர்ணன் தூக்கத்தை வரமாகப் பெற்ற கதை.
''அப்படிப்பட்ட கும்பகர்ணன் உனக்கு தூக்கத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டானோ?'' என்று ஆண்டாள் கேட்டவுடனே, அந்தத் தோழிக்கு அவமானம் தாங்கவில்லை. தன்னைப் போய் அரக்கனான கும்பகர்ணனுடன் ஒப்பிட்டுச் சொல்லிவிட்டார்களே என்று ரோஷம் வந்தவளாக எழுந்துகொண்டாள். கும்பகர்ணன் பெயரைச் சொல்லி ஒருவழியாக அந்தத் தோழியை எழுப்பிவிட்ட ஆண்டாள், அவளையும் சேர்த்துக்கொண்டு அடுத்த தோழியை எழுப்பச் செல்கிறாள்.

க.புவனேஸ்வரி


நன்றி : சக்தி விகடன் / Face Book /http://www.vikatan.com/news/spirituality/75815-andal-thiruppavai-tenth-devotional-hymn.art
 
தினம் ஒரு திருப்பாவை-

பாசுரம்--11

கிருஷ்ணரின் அருளைப் பெறுவது எப்படி? #MargazhiSpecial


p29_23124.jpg

ண்டாள் இப்போது எழுப்பப்போகும் தோழி மிகவும் பேரழகு கொண்டவள். அவளைப் பெண்ணாகப் பெற்றதால், அவளைப் பெற்றவர்கள் மட்டுமல்ல, கோகுலத்தில் உள்ள அனைவரும் பாக்கியம் செய்தவர்களாம். அப்படி கோகுலத்துக்கே பெருமை சேர்த்த அந்தப் பெண்ணை அவளுடைய தந்தையின் சிறப்புகளை எடுத்துச் சொல்லி, அப்படிப்பட்ட சிறப்புகளைப் பெற்றவரின் பெண்ணே, எழுந்திரு என்கிறாள்.

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்,
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே,
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்து, நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி, நீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.

''இளம் கன்றுகளோடு கூடிய பசுக்களின் மடியில் கை வைத்து கறக்கத் தொடங்கும்போதே, வஞ்சனை இல்லாமல் பாலைப் பொழிகிற பசுக்களைப் பெற்றவரும், பொறாமையின் காரணமாக தன்னை அழிக்க நினைக்கும் பகைவர்களை, அவர்களுடைய இடத்துக்கே சென்று போர் செய்து அழிக்கும் வல்லமை பெற்றவரை தந்தையாகப் பெற்ற பொற்கொடியே, நீ பிறந்ததால் உன் பெற்றோர் மட்டுமல்ல, அந்த கோகுலத்தில் உள்ள அனைவருமே பாக்கியம் செய்தவர்கள் ஆனார்கள். பொற்கொடியைப் போன்று ஒளி வீசும் அழகிய பெண்ணே! சிறந்த கற்புத் திறம் உடையவளே! காட்டில் தன்னிச்சையாகத் திரிகிற அழகிய மயில் போன்றவளே! உன்னுடைய தோழிகளாகிய நாங்கள் எல்லோரும் உன் வீட்டு முற்றத்தில் வந்து காத்துக் கொண்டிருக்கிறோம் எழுந்து வா'' என்று தாங்கள் வந்திருக்கும் விஷயத்தைச் சொல்கிறாள் ஆண்டாள்.


ஆண்டாள் இப்படி அழைத்தும் தோழியிடம் எந்த ஓர் அசைவும் இல்லை. எனவே, ''பெண்ணே! நாங்கள் வந்து இப்படி காத்துக்கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தும் நீ இன்னும் எழுந்திருக்காமல் இருக்கிறாயே. உன் தந்தை எந்த கிருஷ்ணரிடம் மிகுந்த பக்தி கொண்டிருக்கிறாரோ, அந்தக் கிருஷ்ணனின் அருளைப் பெற நாங்கள் விரும்புகிறோம். அதற்காகவே நாங்கள் மார்கழி நீராடி அந்த கிருஷ்ணனின் புகழைப் பாட புறப்பட்டு இருக்கிறோம். நாங்கள் பெற விரும்பும் அந்த பேரின்பத்தை நீயும் பெறவேண்டும் என்று விரும்பித்தான் உன்னை எங்களுடன் அழைத்துச் செல்ல வந்திருக்கிறோம். 'நீ உயர்ந்த குடும்பத்தில் பிறந்துவிட்டதால், உனக்கு கிருஷ்ணரின் அருள் எளிதில் கிடைத்துவிடும் என்று நினைத்துக்கொள்ளாதே' என்று ஆண்டாள் கூறுவதாக நினைத்து, அஹோபில மடம் 44-வது பட்டம் ஜீயர் சுவாமிகள் தம்முடைய திருப்பாவை விளக்கவுரையில் அற்புதமான ஒரு விளக்கத்தைத் தந்திருக்கிறார்.

'மோட்சம் தரும் ஏழு க்ஷேத்திரங்கள் இருந்தாலும், அந்த க்ஷேத்திரங்களில் பிறந்துவிட்டதால் மட்டுமே ஒருவருக்கு மோட்சம் கிடைத்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. மோட்சம் அடையவேண்டும் என்ற நினைப்பு இருப்பவர்கள்தான் அதற்கான முயற்சி செய்து மோட்சத்தை அடைவார்கள். இல்லாவிட்டால், அந்த க்ஷேத்திரங்களில் பிறந்த எல்லா ஜீவன்களுமே மோட்சம் அடைந்துவிடுமே. கிருஷ்ணரிடம் பக்தி கொண்ட பெற்றோர்க்கு பெண்ணாகப் பிறந்துவிட்டதாலோ, உயர்ந்த குலத்தில் பிறந்துவிட்டதாலோ ஒருவருக்கு பகவான் கிருஷ்ணரின் அருளும் மோட்சமும் கிடைத்துவிடாது. பகவானை அடையவேண்டும் என்ற இலட்சியம் இருக்கவேண்டும்' என்று அருளி இருக்கிறார்.

அப்படித்தான் ஆண்டாள் தன் தோழியிடம், ''மார்கழி நீராடி, அந்த முகில்வண்ணனின் புகழைப் பாடி, அவனுடைய அருளைப் பெறுவதற்காக நாங்கள் எல்லோரும் வந்து உன் வீட்டு முற்றத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். விரைந்து எழுந்திருந்து எங்களுடன் வா'' என்று அழைக்கிறாள்.


எப்படியோ ஒருவழியாக ஆண்டாள் அந்தத் தோழியை எழுப்பிவிடுகிறாள். அவளையும் அழைத்துக்கொண்டு அடுத்த தோழியை அழைப்பதற்குச் செல்கிறாள்.


.புவனேஸ்வரி

நன்றி : சக்தி விகடன் / Face Book /http://www.vikatan.com/news/spirituality/75816-andal-thiruppavai-devotional-hymn--series-11.art
 
[h=1]தினம் ஒரு திருப்பாவை -
பாசுரம்-12
நற்செல்வனாக ஆண்டாள் அழைப்பது யாரை?#MargazhiSpecial[/h]

ஆண்டாள் இப்பொழுது எழுப்புவதற்காக வந்திருக்கும் தோழி, மிகுந்த செல்வத்தைப் பெற்றிருக்கும் ஒருவனின் தங்கை ஆவாள். செல்வ சுகத்தில் திளைத்திருக்கும் பெண் என்பதால், அவளை எழுப்புவதற்கு ஆண்டாளுக்குக் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. அந்தத் தோழி தன் அண்ணனிடம் மிகுந்த அன்பு கொண்டவள் என்பதால், அவளுடைய அண்ணனைப் புகழ்ந்து அதன்மூலம் அவளைத் தூக்கத்தில் இருந்து எழுப்பிவிடலாம் என்று ஆண்டாள் நினைக்கிறாள். அப்படியே பாடவும் செய்கிறாள்.

கணைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி,
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர,
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்,
பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றி,
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற,
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்,
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்,
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.


'சின்னஞ்சிறிய கன்றுகளை உடைய எருமைகள், தன் மடி பிடித்து பால் கறக்க யாரும் இல்லாததால், கன்றுகளுக்கு ஊட்டுவதாக நினைத்து பாலைப் பொழிய, பெருகும் அந்தப் பால் வீடு முழுக்கப் பரவி, பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட இல்லதை நனைத்து சேறாக்கும் அளவுக்கு அளவற்ற கறவைச் செல்வங்களைப் பெற்றிருக்கும் கோபாலனின் சகோதரியே' என்று ஆண்டாள் தன்னுடைய தோழியின் அண்ணனுடைய செல்வச் செழுமையைப் பாடி எழுப்புகிறாள். அவளுடைய அண்ணனுக்கு அந்த அளவுக்கு அளவற்ற கறவைச் செல்வம் எப்படி ஏற்பட்டது என்பதற்கும் ஆண்டாள் விளக்கம் கூறுகிறாள். தோழியின் அண்ணன் நற்செல்வன் என்கிறாள். ஆண்டாளைப் பொறுத்தவரை யாருக்கெல்லாம் கிருஷ்ணரின் சம்பந்தம் இருக்கிறதோ அவர்களெல்லாரும் நற்செல்வர்கள்தான். அந்த வகையில் தன்னுடைய தோழியின் அண்ணன் கிருஷ்ணருடைய அன்பையும் ஆதரவையும் பெற்ற நற்செல்வன் என்பதால்தான் அவனுக்கு அத்தனை செல்வம் கிடைத்ததாம்.


அண்ணனின் செல்வச் செழுமையைப் புகழ்ந்து பாடியும், கிருஷ்ணரிடம் அவனுக்கு உள்ள அன்பையும் பக்தியையும் புகழ்ந்தும்கூட, அவள் எழுந்திருக்கவில்லை என்பதால், தங்களுடைய நிலைமையை ஆண்டாள் விவரிக்கிறாள்.

''தோழி, எங்களுடைய தலையில் பனி பெய்து அதனால் உடல் நடுங்கியபடி உன்னுடைய வாசல் தூண்களைப் பற்றிக்கொண்டு நிற்கிறோமே. எங்கள்மீது பரிதாபம் ஏற்படவில்லையா? இன்னும் நீ தூங்கலாமா?'' என்று கெஞ்சுகிறாள்.

பின்னும் ஆண்டாள் தன் தோழியை எழுப்புவதற்காக ஓர் உபாயத்தைக் கையாள்கிறாள். பகவான் கிருஷ்ணரின் முந்தைய அவதாரமாகிய ராமபிரானின் புகழைப் பாடுகிறாள். அதை ஆண்டாள் இப்படி விவரிக்கிறாள்.



''தோழி, நீ ராமகாதை கேட்டிருக்கிறாய் அல்லவா? தசரதகுமாரனாக அவதரித்த ராமபிரான், தென் இலங்கைப் பகுதியை ஆண்டு வந்த அரக்கனான ராவணனையும் அவனுடைய படைகளையும் அழித்தது உனக்கும் தெரியும்தானே. அப்படிப்பட்ட ராமனின் புகழைப் பாடிக்கொண்டுதான் நாங்கள் உன் வீட்டு வாசல் முன்பாக நின்றுகொண்டிருக்கிறோம். சக்கரவர்த்தி குமாரனாம் ராமபிரானின் புகழை நாங்கள் பாடுவதைக் கேட்டும் நீ தூங்கிக் கொண்டு இருப்பதுடன் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசாமலும் இருக்கிறாய். நீ இப்படி இருந்தால் இந்த ஊரும் உலகமும் உன்னை என்ன சொல்லி தூற்றும் தெரியுமா? 'என்ன இது, ஆண்டாளும் அவளுடைய தோழியரும் இப்படி பாடியும் அந்தப் பெண் எழுந்திருக்கவில்லையே, அவ்வளவு சோம்பலா?' என்று உன்னைத் தூற்றமாட்டார்களா?'' என்று ஆண்டாள் கேட்கிறாள்.

இப்படி ஆண்டாள் கேட்டதுதான் தாமதம், அந்தத் தோழி ஊராரின் கேலிப் பேச்சுக்கு பயந்துகொண்டு உடனே விழித்துக்கொள்கிறாளாம். அவளையும் அழைத்துக்கொண்டு ஆண்டாள் அடுத்த வீட்டுக்குச் செல்கிறாள். தான் பெறப்போகும் பேரின்பம் தன்னுடைய தோழியர் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதில் ஆண்டாளுக்கு அவ்வளவு ஆர்வம்.

க.புவனேஸ்வரி

நன்றி : சக்தி விகடன் / Face Book / http://www.vikatan.com/news/spirituality/76004-andal-thiruppaavai-twelfth-devotional-hymn.art
 
Last edited by a moderator:
தினம் ஒரு திருப்பாவை
பாசுரம்-- 13
தேவகுரு உறங்கிவிட அசுரகுரு விழித்துக்கொண்டார்... #MargazhiSpecial


ஆண்டாள் அடுத்ததாக எழுப்பச் சென்ற தோழி மிகுந்த அழகு உடையவள். அவளுடைய கண்களின் அழகானது கிருஷ்ணனையே கிறங்கிப் போகச் செய்யுமாம். ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் அவளுடைய வீட்டுக்கு முன்பாக நின்று தோழியை எழுப்புகிறார்கள். ஆனால், அவள் எழுந்திருக்கவே இல்லை. அப்போதுதான் ஆண்டாள் ஒரு யுக்தியைக் கையாளுகிறாள். 'வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று' என்ற வரியின் மூலம் அந்தத் தோழிக்கு எடுத்துச் சொல்லி அழைக்கிறாள்.


புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம்புக்கார்,
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று,
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே,
பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.

கம்சன், கிருஷ்ணன் கோகுலத்தில் இருப்பதாகத் தெரிந்துகொண்டு கிருஷ்ணனை அழிப்பதற்காக பூதனை, சகடாசூரன் போன்றோரை அனுப்பியதுபோலவே பகாசுரன் என்பவனையும் அனுப்புகிறான். அந்த பகாசுரன் ஒரு பறவையின் வடிவம் எடுத்துக்கொண்டு கிருஷ்ணனை அழிப்பதற்காக கோகுலத்துக்குச் செல்கிறான். கிருஷ்ணன் அந்தப் பகாசுர பறவையின் வாயைப் பிளந்து கொன்றுவிடுகிறான் என்பதையே ஆண்டாள் புள்ளின் வாய் கீண்டானை என்று குறிப்பிடுகிறாள். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனை ராமபிரான் அழித்ததை பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை என்று குறிப்பிடுகிறாள். (சிலர் கிருஷ்ணன் கம்சனின் கழுத்தைத் திருகி அவனுடைய தலையைக் கிள்ளியதாகவும் குறிப்பிடுவர். ஆண்டாள் கிருஷ்ணனை அடைவதற்காகப் பாடியதுதான் பாவைப் பாடல்கள் என்பதால், கம்சனின் தலையைக் கிள்ளியதாகக் குறிப்பிடுவதும் பொருத்தமாகவே இருக்கும். அந்தச் சிறுமிகள் திருமாலின் மற்ற அவதாரங்களை விடவும் கிருஷ்ண அவதாரத்தை மிகவும் நேசித்தனர். அதனால் அவர்கள் கிருஷ்ணனின் புகழைப் பாடிச் சென்றனர் என்பதும் பொருத்தம்தான்). ஆனால், நீயோ இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாயே என்று ஆண்டாள் கேட்கிறாள். அப்படியும் தோழி எழுந்திருக்கவில்லை.


அப்போதுதான் ஆண்டாளுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அது ஒரு வெள்ளிக்கிழமை என்பதால், அதைக் குறிப்பிட்டு வியாழம் உறங்கிற்று என்றும் வெள்ளி எழுந்தது என்றும் கூறுகிறாள். அதாவது பகவான் கிருஷ்ணனாக அவதரித்துவிட்டபடியால் இனி எல்லோரும் நல்லவர்களாகவும் சுபிட்சம் உடையவர்களாகவும் இருப்பார்கள் என்று நினைத்து தேவ குருவான வியாழன் உறங்கப்போய்விட்டாராம். அதனால் அசுர குருவான சுக்கிரன் (வெள்ளி) எழுந்துகொண்டாராம். எனவே இனியும் நீ எழுந்து எங்களுடன் வந்து குளிரக் குளிர மார்கழி நீராடி கிருஷ்ணனை பூஜிக்காவிட்டால், அவனை அடைய முடியாது. அதற்கு பதிலாக அசுர குருவாகிய சுக்கிரன் உன்னை தன்னுடைய அசுர சீடர்களில் ஒருவராக ஆக்கிக் கொள்வார் என்று பயமுறுத்துகிறாள். அப்படியும் அவள் எழுந்திருக்கவில்லை.

ஆண்டாளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை தனிமையில் அவள் கிருஷ்ணனை நினைத்து தன்னை மறந்த ஆனந்த நிலையில் இருக்கிறாளோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. அதனால்தான் ஆண்டாள் கள்ளம் தவிர்த்து என்ற வார்த்தைகளால் குறிப்பிடுகிறாள். அதாவது நீ மட்டும் கள்ளத்தனமாக தனிமையில் இருந்துகொண்டு கிருஷ்ணனின் நினைப்பில், அவனுடைய ஸ்பரிச சுகத்தில் லயித்திருக்காதே. நீ இப்படியே இருந்தால், நாங்கள் எப்போது சென்று மார்கழி நீராடி கிருஷ்ணனை வழிபட்டு அவனை அடைவது? உன்னுடைய உறக்கத்தால் எங்களுடைய கிருஷ்ணபூஜை தடைப்பட்டு விடலாமா? என்று ஆண்டாள் கேட்கிறாள். வெள்ளியாகிய அசுரகுரு எழுந்துவிட்டார்; அவர் உன்னை தன்னுடைய அசுரசீடர்களுடன் சேர்த்துவிடுவார் என்று சொன்னபோதுகூட எழுந்திருக்காத அந்தத் தோழி, அவள் தனிமையில் கிருஷ்ணனுடைய நினைப்பில் லயித்திருக்கிறாள் என்று சொன்னதுமே, அவளுக்கு வெட்கம் வந்துவிடுகிறது. இனியும் எழுந்திருக்காவிட்டால் ஆண்டாள் தன்னை கிருஷ்ணனுடன் இணைத்து இன்னும் என்னவெல்லாம் கேலி பேசுவாளோ என்று வெட்கப்பட்டு எழுந்துகொள்கிறாளாம். ஒருவழியாக அவளை எழுப்பிவிட்ட நிம்மதியில் அவளையும் மற்ற தோழிகளுடன் சேர்த்துக்கொண்டு அடுத்த தோழியை எழுப்பச் செல்கிறாள் ஆண்டாள்.

க.புவனேஸ்வரி

நன்றி : சக்தி விகடன் / Face Book / http://www.vikatan.com/news/spirituality/76101-andal-thiruppavai-thirteenth-devotional-hymn.art
 
தினம் ஒரு திருப்பாவை -
பாசுரம்--14
சொன்னபடி செய்யவில்லை; வெட்கமும் உனக்கு இல்லை...#MargazhiSpecial

p30a_23353.jpg


அடுத்ததாக ஆண்டாள் எழுப்பச் செல்லும் தோழி சரியான வாய்ச்சொல் வீராங்கனையாக இருப்பாள் போலும். 'நீங்கள் எல்லோரும் நன்றாக உறங்குங்கள். அதிகாலையில் நானே வந்து உங்களை எழுப்புகிறேன் என்று சொன்னவள், சொல்லியபடி செய்யவில்லை. மற்றவர்களை எழுப்பவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆண்டாள் அழைத்த உடனே எழுந்திருக்கலாம் அல்லவா? அதைக் கூடச் செய்யாமல் உறங்கிக் கொண்டிருக்கும் தோழியை ஆண்டாள் இப்படி எழுப்புகிறாள்.

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்,
செங்கழுநீர் வாய்நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்,
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்,
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்,
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.

அந்தத்
தோழியின் வீட்டுத் தோட்டத்தில் சிறிய குளம் இருக்கிறதுபோலும். எனவே ஆண்டாள், 'தோழி, பொழுது விடிந்துவிட்டதற்கு அடையாளமாக உன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள குளத்தில் செங்கழுநீர்ப் பூக்கள் மலர்ந்துவிட்டது. கருநெய்தல் பூக்கள் கூம்பி விட்டன. ஆனால், நீ இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாயே? இரவெல்லாம் கிருஷ்ணனின் நினைவில் லயித்துவிட்டு, இப்போதுதான் உறங்கச் சென்றாயோ? இப்படிச் செய்வது உனக்கே நியாயமாகத் தெரிகிறதா?' என்று கேட்கிறாள். அது அந்தத் தோழியின் காதுகளில் விழுந்ததோ இல்லையோ அவள் எழுந்திருக்கவே இல்லை.


p97b_23090.jpg


ஆனாலும் ஆண்டாள் சளைக்காமல், அவளை எப்படியும் அழைத்துச் செல்வது என்ற தீர்மானமான முடிவுடன் மேலும் சொல்கிறாள். 'தோழி, காவிச் சாயம் பூசிய ஆடைகளை உடுத்தியர்களும், வெண்மையான பற்களை உடையவர்களுமான துறவிகள், தங்கள் திருக்கோயில்களுக்கு சங்குகளை ஊதிக் கொண்டு செல்கின்றனர். அதுகூட உன் காதுகளில் விழவில்லையா?' என்று கேட்கிறாள்.

ஆனால், தோழி எழுந்திருக்கவில்லை. எனவே ஆண்டாள், ''தோழி, நாங்கள் உன்னை இப்போது எதற்காக எழுப்ப வந்திருக்கிறோம் என்று தெரியுமா? மார்கழி நீராடி, சங்கும் சக்கரமும் கைகளில் ஏந்தியவரும், அப்போதுதான் பூத்த தாமரை மலர்களைப் போன்ற கண்களை உடையவருமாகிய நாராயணமூர்த்தியின் புகழைப் பாடத்தான் உன்னை எழுப்புகிறோம். அந்த நாராயணன்தான் நம்மையெல்லாம் கடைத்தேற்றுவதற்காக இந்த கோகுலத்தில் கிருஷ்ணனாக வந்திருக்கிறான். எனவே, கொஞ்சமும் தாமதிக்காமல் உடனே எழுந்து வா. யமுனைக்குச் சென்று நீராடி, கிருஷ்ணனின் புகழைப் பாடிப் பணிவோம்' என்கிறாள்.
p106c1_23429.jpg




ஹூம் அப்படியும் தோழி எழுந்திருக்கவில்லை. அப்போதுதான் ஆண்டாளுக்கு, முன்தினம் இரவு ஆடிப்பாடிவிட்டு உறங்கச் செல்லும்போது, அந்தத் தோழி சொல்லிவிட்டுச் சென்றது நினைவுக்கு வந்தது.

முன் தினம் இரவு ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் ஆடிப்பாடி மகிழ்ந்துவிட்டு உறங்கச் செல்கின்றனர். செல்லும்போது மறுநாள் அதிகாலையில் எழுந்து, மார்கழி நீராடிவிட்டு, கிருஷ்ணனை வழிபடவேண்டும் என்று ஆண்டாள் தோழிகளிடம் சொல்கிறாள். அப்போது ஆண்டாளிடமும் மற்ற தோழிகளிடமும், ''நீங்கள் கவலையே படவேண்டாம். நானேஅதிகாலையில் எழுந்து வந்து உங்களை எல்லாம் எழுப்பிவிடுகிறேன்'' என்று சொல்லி அனுப்பினாள். அது நினைவுக்கு வந்ததுமே ஆண்டாள் அந்தத் தோழியிடம், தோழி, முன் தினம் இரவு உறங்கப்போவதற்கு முன்பாக எங்களை எல்லாம் வந்து எழுப்பிவிடுவதாகச் சொன்ன நீ, வெறும் பேச்சில்தான் வல்லவள் போலும். சொன்னபடி செய்யாமல் இருக்கிறாயே? உனக்குக் கொஞ்சம்கூட வெட்கமாக இல்லையா?' என்கிறாள்.

ஆண்டாள் இப்படி கேட்டதுதான் தாமதம், அந்தத் தோழிக்கு ரோஷம் வந்துவிட்டதுபோலும். உடனே அவசர அவசரமாக படுக்கையில் இருந்து எழுந்து வந்து ஆண்டாளுடனும் மற்ற தோழிகளுடனும் சேர்ந்துகொள்கிறாள்.
அனைவரும் சேர்ந்து மற்றொரு தோழியை எழுப்புவதற்காக அவளுடைய வீட்டுக்குச் செல்கின்றனர்.

.புவனேஸ்வரி

நன்றி : சக்தி விகடன் / Face Book / http://www.vikatan.com/news/spirituality/76206-andal-devotional-hymn-margazhispecial.art[FONT=&quot][/FONT]
 
தினம் ஒரு திருப்பாவை
பாசுரம்-15
எண்ணிப் பார்த்துக்கொள்; எல்லோரும் வந்துவிட்டோம்!#MargazhiSpecial





310515gif_22349.jpg


தோழிகள் ஒவ்வொருவராக எழுப்பிக் கொண்டு வரும் ஆண்டாள், அடுத்ததாக எழுப்பச் செல்லும் தோழி, ஆண்டாளுடன் உரையாடுகிறாளே தவிர எழுந்து வருவதாகத் தெரியவில்லை. ஆண்டாள் ஒன்று சொல்ல, அந்தத் தோழி பதிலுக்கு ஒன்று சொல்வதாக அமைந்திருக்கிறது இந்தப் பாடல். முடிவில் ஆண்டாள் தாங்கள் எதற்காக அவளை எழுப்புகிறோம் என்று சொன்னதுமே தோழி எழுந்துகொள்கிறாள்.



எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ.
சில்லென் றழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்,
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்,
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக,
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை,
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொல்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.


அந்தத் தோழி ஆண்டாளுக்கு மிகவும் பிரியமானவள் போலும். அதனால், 'ஏ, சகியே' என்று அழைக்கும் ஆண்டாள் தொடர்ந்து, 'இனிமையாகப் பேசும் இளங்கிளியே' என்று அழைக்கிறாள். அப்படி செல்லமாக அழைத்து, 'நாங்கள் வந்திருப்பதை அறிந்துகொண்ட பின்பும், நீ இன்னுமா தூங்குகிறாய்?' என்று கேட்கிறாள். ஆண்டாளுக்கு பிரியமான அந்தத் தோழி, அந்தப் பிரியத்தை சலுகையாக எடுத்துக்கொண்டு, ''ஏன் இப்படி என்னை சிலுசிலுவென்று அழைக்கிறீர்கள்? இதோ நான் எழுந்து வந்துவிடுகிறேன்'' என்கிறாள். ஆனாலும் அவள் எழுந்து வரவில்லை என்பதால், ஆண்டாள், ''உன் பேச்சு வல்லமையையும், உன்னுடைய உறுதிமொழியையும் நாங்கள் அறிவோம். எனவே பேசிக்கொண்டே இருக்காமல் சீக்கிரம் எழுந்து வா'' என்கிறாள். அதற்கும் அந்தத் தோழி, ''ஆமாம், நீங்கள்தான் பேசியபடி நடப்பவர்கள். நான் பேச்சில் மட்டுமே வல்லவளாக இருந்துவிட்டுப் போகிறேன். இப்போது நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்?'' என்று கேட்கிறாள். பதிலுக்கு ஆண்டாள், ''நீ ஒன்றும் சொல்லவேண்டாம். உடனே எழுந்து வந்து எங்களுடன் சேர்ந்துகொண்டு மார்கழி நீராட வந்தால் போதும். உன்னைத் தவிர மற்ற எல்லோரும் வந்துவிட்டார்கள். வேண்டுமானால் நீ வந்து எண்ணிப் பார்த்துக்கொள்'' என்று சொல்கிறாள்.

''அது சரி, நான் எதற்காக எழுந்து வந்து உங்களுடன் சேர்ந்துகொள்ளவேண்டும்?'' என்று கேட்கிறாள் அந்தத் தோழி.
பதிலுக்கு ஆண்டாள் தாங்கள் எதற்காக அந்தத் தோழியை அழைக்கிறோம் என்பதை மிக அழகாகவும் நயமாகவும், ''வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்கவல்லானை'' என்று பகவான் கிருஷ்ணரின் மகிமையைச் சொல்கிறாள்.
வல்லானை என்பதற்கு தனக்குச் சமமானவன் என்று பொருள். பகவான் கிருஷ்ணருக்குச் சமமாக யாரைச் சொல்லமுடியும்? ஆனால், அப்படி ஒருவன் தன்னை கிருஷ்ணனுக்குச் சமமாக நினைத்து அட்டகாசம் செய்துகொண்டு இருந்தான்.


அவன் பெயர் பௌண்ட்ரக வாசுதேவன். அவன் கிருஷ்ணன் போல் வேஷம் போட்டுக் கொண்டு, சங்கு சக்கரங்களை மரக்கட்டையால் பண்ணி அவற்றைக் கைகளில் கட்டிக்கொண்டு, மரக் கருடனைப் பண்ணி அதற்கு வர்ணம் அடித்து, அதில் யந்திரத்தைப் பொருத்திவிட்டான். பிறகு அந்த கருடன் மேல் அமர்ந்துகொண்டு, ''நான்தான் கிருஷ்ணன். என்னைத்தான் எல்லோரும் பூஜிக்கவேண்டும். ஆனால், துவாரகையில் ஒருவன் என்னைப் போலவே வேஷம் போட்டுக்கொண்டு, தான்தான் தெய்வம் என்றும், அனைவரும் தன்னையே வழிபடவேண்டும் என்று சொல்லித் திரிந்துகொண்டு இருக்கிறானாம். அவனை யாரும் நம்பிவிடாதீர்கள். அவனுடைய கர்வத்தை நான் அடக்கிவிடுகிறேன்'' என்று அடிக்கடி கூச்சல் போட்டு யாரையுமே நல்ல காரியங்களையும் தெய்வ வழிபாடுகளையும் செய்யமுடியாதபடி தொல்லை கொடுப்பான். தேவரிஷியான நாரதர் எப்படியோ தந்திரம் பண்ணி அவனைக் கிருஷ்ணனோடு சண்டை போடுவதற்கு இழுத்துக் கொண்டு வந்துவிட்டார். அவன் மரக் கருடனைக் கிருஷ்ணன் இருக்கும் இடத்திற்குக் கொண்டு வரச் சொல்லி, அதில் ஏறிக்கொண்டு, ஆண்டிகள் ஊதுவதுபோன்ற சங்கை எடுத்து ஊதினான்.

நாரதர் கிருஷ்ணரிடமும் வந்து விஷயத்தை சொன்னார். கிருஷ்ணர் கருடன் மேல் ஏறிக்கொண்டு வந்து பௌண்ட்ரக வாசுதேவனைப் பார்த்து சந்தோஷப்பட்டான். "நாரதரே, இவன் நம்மைப் போல் வேஷம் போடுவதற்கு எவ்வளவு கலர் பூசிக் கொண்டிருக்கிறான்? சங்கு சக்கரங்களுக்கு எவ்வளவு அலங்காரம் பண்ணியிருக்கிறான்!பார்த்தீரா?" என்று கிருஷ்ணர் கேட்டார்.
இதைக் கேட்டதும் பௌண்ட்ரகன் கோபத்துடன், "உன் கருடனுக்கு என் கருடன் தோற்றவனல்ல. உன் சங்கு சக்கரங்களுக்கு என் ஆயுதங்களான சங்கு சக்கரங்கள் தோற்றவையல்ல. உனக்கு நானும் தோற்றவனல்ல. உனக்கு வெட்கமாக இல்லையா? என் எதிரில் என்னைப் பார்த்தபிறகும் சங்கு சக்கரங்களைக் கைகளில் வைத்துக் கொண்டிருக்கிறாயே. கீழே போட்டு விடு" என்று ஆணவத்துடன் பேசினான்.


krishweel_22033.jpg



பதிலுக்கு "சக்கரத்தை கீழே போடக்கூடாது, உன் மேலே போடப் போகிறேன்" என்றார் கிருஷ்ணர்.

"உனது சக்கரத்தை என்மேல் போட்டால் அதைப் பொடிப் பொடியாக ஆக்கிவிடுவேன்" என்று கர்ஜித்தான். உடனே கிருஷ்ணர் தன் சக்கராயுதத்தை அவன்மேல் பிரயோகித்தார். பகவானுடைய சக்கராயுதம் அவனது தலையை அறுத்தது. இப்படி தனக்குச் சமமாக நினைத்துக்கொண்டிருந்த பௌண்ட்ரக வாசுதேவனை அழித்தவர் கிருஷ்ணர். இதைத்தான் ஆண்டாள், 'வல்லானைக் கொன்றானை' என்று கூறுகிறாள்.


அடுத்ததாக ஆண்டாள், 'மாற்றாரை மாற்றழிக்க வல்லானை' என்கிறாள். மாற்றாரை என்பது மாற்றுக் கருத்துக்களை அதாவது கெடுதலான எண்ணங்களை உடையவர்களை அழிக்கமாட்டாராம். மாறாக அவர்களுடைய கெடுதலான எண்ணங்களை அழிப்பதில் வல்லவராம். ஆனால், அவர் அப்படி நம் மனதில் மாயையினால் ஏற்பட்ட கெடுதலான எண்ணங்களை அழிக்கவேண்டும் என்பதற்காகத்தான் இன்று நாங்கள் அவர்புகழைப் பாடி வந்திருக்கிறோம். நீயும் சீக்கிரம் எழுந்து வா என்று ஆண்டாள் தன்னுடைய பிரியத்துக்கு உரிய தோழியை அழைக்கிறாள். தன்னிடம் மிகுந்த பிரியம் கொண்டுள்ள ஆண்டாளை இனியும் வாசலில் காத்திருக்கவைக்கக் கூடாது என்று எண்ணியவளாக அந்தத் தோழி எழுந்து வருகிறாள்.

-க.புவனேஸ்வரி
நன்றி : சக்தி விகடன் / Face Book / http://www.vikatan.com/news/spirituality/76301-andal-devotional-hymn---15.art
 
Last edited by a moderator:
[h=1]தினம் ஒரு திருப்பாவை –[/h][h=1]பாசுரம்-16
கிருஷ்ணன் எப்படிப்பட்டவன் தெரியுமா? #MargazhiSpecial[/h]
திருப்பாவையின் முதல் 15 பாடல்களில் ஆண்டாள் தன்னுடைய தோழிகள் எல்லோரையும் படாத பாடுபட்டு எழுப்பிவிட்டாள். இனி, ஆண்டாள் தான் மார்கழி நீராடி யாரை பூஜிக்கவேண்டும் என்று விரும்பினாளோ அந்த கிருஷ்ணனை எழுப்புவதற்காக நந்தகோபனின் மாளிகை வாசலுக்கு முன்பாக தோழிகளுடன் வந்து நிற்கிறாள். ஆனால், வைகுந்தத்தில் இருக்கும் துவாரபாலகர்களைப் போலவே, நந்தகோபனின் மாளிகை வாசல் கதவுகளுக்கு முன்பாக ஒரு காவலன் இருக்கிறார்கள். கதவுகள் திறந்தால்தானே ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் உள்ளே சென்று கிருஷ்ணனை எழுப்பமுடியும்? எனவே ஆண்டாள் வாயில் காவலனிடம் கதவுகளைத் திறக்குமாறு சொல்கிறாள்.

நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்.
ஆயர் சிறுமிய ரோமுக்கு, அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்,
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.


கோகுலத்து மக்களுக்கு நாயகனாக இருக்கின்ற நந்தகோபனுடைய திருமாளிகையின் வாயில் காப்பவனே, நாங்கள் கிருஷ்ணனைச் சந்திக்க வந்திருக்கிறோம். எனவே, வாயில் கதவுகளைத் திறந்து எங்களை உள்ளே செல்ல அனுமதிப்பாய் என்று ஆண்டாள் கேட்கிறாள்.

'உங்களுக்கு இந்த மாளிகையில்தான் கிருஷ்ணன் இருக்கிறார் என்பது எப்படித் தெரிந்தது?' என்று வாயில் காவலன் கேட்கிறான்.

அதற்கு ஆண்டாள், 'இது என்ன பிரமாதம்? அதுதான் இந்த மாளிகையில் கொடிகள் பறக்கிறதே. நந்தகோபனின் மாளிகையைத் தவிர வேறு யார் மாளிகையிலாவது இப்படி கொடிகள் பறக்குமா என்ன? ஆகையால் இதுதான் நந்தகோபரின் திருமாளிகை. எனவே நீ மேற்கொண்டு எதுவும் எங்களைக் கேட்காமல், மணிக் கதவுகளைத் திறந்து எங்களை உள்ளே போக விடுவாய்'' என்கிறாள்.

ஆனாலும் அந்த காவலன் கதவுகளைத் திறக்கவில்லை. அதற்கு பதிலாக, ''கிருஷ்ணன் உங்களை வரச்சொன்னாரா? வரச்சொன்னார் என்றால் எதற்காக வரச்சொன்னார்?'' என்று கேட்கிறான்.


''எங்களுக்கு ஓசை எழுப்பும்படி அடிப்பதற்காக பறை வாத்தியங்களைத் தருவதாக நேற்றே கிருஷ்ணன் கூறினான். அந்த கிருஷ்ணன் எப்படிப்பட்டவன் தெரியுமா? நீலமணி போன்ற மேனி நிறத்தைப் பெற்றிருக்கும் மணிவண்ணன். எங்களை உள்ளே செல்லவிட மாட்டாயா?'' என்று ஆண்டாள் கெஞ்சுகிறாள்.

ஆனால், அந்தக் காவலன் அதற்கெல்லாம் மசியவில்லை. ''நான் உங்களை எப்படி நம்புவது? நீங்கள் கம்சன் அனுப்பிய பூதனை போன்ற அரக்கியர்களாக இருப்பீர்களோ என்று எங்களுக்கு பயமாக இருக்கிறது. அதுவும் நீங்கள் இப்படி பொழுது விடியாத இருட்டு நேரத்தில் வந்திருக்கிறீர்களே'' என்கிறான் அந்தக் காவலன்.


''ஐயா, நீங்கள் எங்களை அப்படி தவறாக நினைக்காதீர்கள். நாங்கள் ஒரு பாவமும் அறியாத ஆயர்குலச் சிறுமியர்கள். தூய்மையான மனதை உடையவர்களாக நாங்கள் வந்திருக்கிறோம். கிருஷ்ணன் உறக்கத்தை விட்டு எழுந்திருக்க பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாட வந்திருக்கிறோம். எங்களால் கிருஷ்ணனுக்கு ஒரு தீங்கும் வந்துவிடாது. தயவு செய்து ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருக்கும் கதவுகளைத் திறந்து எங்களை உள்ளே செல்ல விடுவாய்'' என்று காவலனிடம் கேட்கும் ஆண்டாள், ''நாங்கள் ஒரு நல்ல விஷயத்துக்காக வந்திருக்கிறோம். முதல் முதலாக உன்னிடம்தான் வந்திருக்கிறோம். தயவு செய்து உங்கள் வாயால் மறுப்பு எதுவும் சொல்லாமல் கதவுகளைத் திறக்கவேண்டும்'' என்கிறாள்.

'இவர்கள் வந்திருக்கும் நல்ல காரியம் நம்மால் தடைப்பட்டது என்ற கெட்ட பெயர் நமக்கு எதற்கு?' என்று நினைத்தவனாக வாயில் காவலன் கதவுகளைத் திறந்துவிடுகிறான். ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் நந்தகோபன் மாளிகைக்குள் செல்கின்றனர்.

.புவனேஸ்வரி

நன்றி : சக்திவிகடன்: Face Book / http://www.vikatan.com/news/spirituality/76413-andal-devotional-hymn.art
 
[h=1]தினம் ஒரு திருப்பாவை[/h][h=1]பாசுரம் - 17[/h][h=1]செல்வங்களில் சிறந்த செல்வம் எது..?#MargazhiSpecial[/h]ந்தகோபனின் மாளிகைக்கு தோழிகளுடன் சென்ற ஆண்டாள், ஒருவழியாக வாயில் காவலனை சமாதானப் படுத்திவிட்டு, மாளிகைக்குள் செல்கிறாள். அந்த மாளிகை பல கட்டுகளைக் கொண்ட விசாலமான மாளிகை. முதல் கட்டில் நந்தகோபன் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரை எழுப்பி அனுமதி கேட்ட பிறகுதான், அடுத்த கட்டுக்குப் போக முடியும். எனவே முதலில் ஆண்டாள் நந்தகோபனை எழுப்பி அனுமதி கேட்கிறாள். தொடர்ந்து ஒவ்வொரு கட்டாகச் சென்று அவள் ஒவ்வொருவரையும் எழுப்பும் அழகைப் பாருங்களேன்...

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா! எழுந்திராய்,
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி யசோதாய்! அறிவுறாய்,
அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த
உம்பர் கோ மானே! உறங்கா தெழுந்திராய்,
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்,

மனிதர்களுக்குத் தேவையான உணவு, உடை, தண்ணீர் எதற்கும் நந்தகோபனின் கோகுலத்தில் பஞ்சமே இல்லை. அப்படி இருக்கும்போது, ஆண்டாள் எப்படி அவற்றையெல்லாம் தர்மம் செய்பவராக நந்தகோபனை அழைக்கிறாள்? காரணம், கோகுலத்தில் முன் சொன்ன மூன்று மட்டுமல்லாமல் அனைத்து வளங்களும் நிறைந்தே இருக்கின்றன. வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கெல்லாம் உடை, உணவு, தண்ணீர் ஆகியவற்றை நந்தகோபன் கொடுப்பதால்தான், இந்த மூன்றையும் தர்மம் செய்வதாக நந்தகோபனைப் புகழ்கிறாள். அனைத்து செல்வங்களுக்கும் மேலான செல்வமாக, செல்வங்களை எல்லாம் தட்டாமல் தரும் கிருஷ்ணனை அல்லவா பிள்ளைச் செல்வமாகப் பெற்றிருக்கிறார் நந்தகோபன்?! எனவே, நந்தகோபனை எம்பெருமான் என்று போற்றுகிறாள். அதுமட்டுமல்ல, தாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதையும் மறைமுகமாக உணர்த்துகிறாள்.அதாவது, நீங்கள் தானம் கொடுப்பதில் சிறந்தவர். ஆனால், தானம் கொடுப்பவர்க்கும், தானம் பெறுபவர்க்கும் அளவற்ற புண்ணியத்தைத் தரக்கூடிய தானம் ஒன்று உண்டு. அதுதான், எங்களுக்கெல்லாம் அருள்செய்ய நீர் வழங்கவேண்டிய தானம் நாராயணமூர்த்தி தானம்தான். அந்த நாராயணமூர்த்திதான் தங்களிடம் கிருஷ்ணனாகத் தோன்றி இருக்கிறார். அவருடைய அருளையே நாங்கள் வேண்டி விரும்பி வந்திருக்கிறோம். தட்டாமல் அவரை எங்களுடன் வர அனுமதிக்கவேண்டும் என்று ஆண்டாள் வேண்டுகிறாள். ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் கிருஷ்ணனின் அருள் வேண்டி வந்திருப்பதாகச் சொன்னதும் நந்தகோபனுக்கு மறுக்க முடியவில்லை. ஆனால், பாவம் அவரால் என்ன செய்யமுடியும்? கிருஷ்ணன் யசோதையின் செல்லப் பிள்ளை ஆயிற்றே. அவளுடைய அனுமதி அல்லவா வேண்டும்? எனவே நந்தகோபர் அவர்களிடம், யசோதையைப் பார்க்கும்படி சொல்லி அனுப்புகிறார்.

ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் அடுத்த அறைக்குச் செல்கின்றனர். அங்கே யசோதை உறங்கிக் கொண்டு இருக்கிறாள். அவளுடைய மனதைக் குளிர்வித்தால்தான் கிருஷ்ணனை தங்களுடன் அழைத்துச் செல்லமுடியும். எனவே, யசோதையைப் பலவாறாகப் புகழ்கிறாள். வஞ்சிக்கொடி போன்ற பெண்களுக்கெல்லாம் முதன்மையானவளே! பிறந்த குலத்துக்குப் பெருமை சேர்க்கும் குலவிளக்கே! எங்களுக்கெல்லாம் தெய்வம் போன்றவளே! யசோதை பிராட்டியே! நாங்கள் கிருஷ்ணனின் அருள் வேண்டி வந்திருக்கிறோம். அவனை யமுனைக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறோம். நீ எப்படிப்பட்ட பாக்கியசாலி?! பகவான்
வைகுந்தவாசனாம் நாராயணமூர்த்தியின் மனக் குறையைப் போக்கியவள். ஆம், தனக்கொரு தாய் இல்லையே என்ற குறை பகவானுக்கு இருந்தது. அவனைப் பிள்ளையாகப் பெற்றதால், அவனுக்கு ஒரு தாய் இல்லை என்ற குறை இல்லாதபடி செய்துவிட்டாய். உன்னை விடவும் இந்த உலகத்தில் பாக்கியசாலி வேறு யார் இருக்கிறார்கள்? கிருஷ்ணனின் அருள் வேண்டி வந்திருக்கும் நாங்கள் அவனை யமுனைக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறோம். தடை சொல்லாமல் கிருஷ்ணனை எங்களுடன் அனுப்ப சம்மதம் தெரிவிக்கவேண்டும் என்று ஆண்டாள் கேட்டதுமே, யசோதையின் மனம் குளிர்ந்துவிடுகிறது. ஆண்டாளையும் அவளுடைய தோழிகளையும் அடுத்த கட்டத்துக்கு அனுப்புகிறாள்.

அந்தக் கட்டில் அடுத்தடுத்து இரண்டு அறைகள் காணப்படுகின்றன. ஒரு அறையில் கிருஷ்ணனும் அடுத்த அறையில் பலதேவனும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கட்டுக்குச் சென்ற ஆண்டாள்,

முதலில் கிருஷ்ணனை எழுப்புகிறாள். ஆகாயத்தை ஊடுருவும்படி அறுத்து, உன் திருவடியால் ஓங்கி உலகத்தை அளந்த உத்தமனே! தேவர்களுக்கெல்லாம் தலைவனே! உன்னுடைய அருள் வேண்டி நாங்கள் வந்திருக்கிறோம். உடனே எழுந்து எங்களுடன் யமுனைக்கு வரவேண்டும் என்கிறாள். ஆனால், கிருஷ்ணன் அண்ணனைப் பிரியமாட்டான் என்பதால், பலராமனையும் எழுப்புகிறாள். செம்பொன்னால் ஆன வீரக் கழல்களை அணிந்த திருவடிகளை உடையவனே! பலதேவா! உன் தம்பியும், அவனுடைய சொல்படி நடக்கும் நீயும் சீக்கிரம் எழுந்திருக்கவேண்டும் என்கிறாள்.

க.புவனேஸ்வரி


நன்றி : சக்திவிகடன்: Face Book /http://www.vikatan.com/news/spirituality/76501-andal-devotinal-hymn-series---17.art
 
[h=1]தினம் ஒரு திருப்பாவை[/h][h=1]பாசுரம் - 18[/h][h=1]நப்பின்னை என்பவள் யாரோ? #MargazhiSpecial[/h]

310693gif_22262.jpg




ஆண்டாள் கிருஷ்ணனையும் பலராமனையும் எழுப்புகிறாள். ஆனால், கிருஷ்ணன் உறங்கிக் கொண்டிருக்கும் அறையின் கதவு திறக்கப்படவில்லை. அப்போதுதான் ஆண்டாளுக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. கிருஷ்ணனின் மனைவியான நப்பின்னை வந்து கதவைத் திறந்தால்தானே, நாம் கூப்பிட்டு எழுப்புவது கிருஷ்ணனுக்கு தெரியும். எனவே முதலில் நப்பின்னையை எழுப்பிவிடுவோம் என்று ஆண்டாள் நப்பின்னையை எழுப்புகிறாள். நப்பின்னை சாதாரண வீட்டுப் பெண்ணா என்ன? பெரிய வீட்டு மருமௐகள் அல்லவா? அவளுடைய புகுந்த வீட்டுப் பெருமையைக் குறித்தும், அவளுடைய சிறப்புகள் குறித்தும் ஆண்டாள் பாடுகிறாள்.

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,
நந்தகோ பாலன் மருமகளே! நப்பினாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்,
வந்தெங்கும் கோழி யழைத்தனகாண், மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்,
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப,
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


பெருகி வரும் மதநீரை உடைய பெரிய யானையோடுகூட போராடி வெற்றி கொள்ளும் தோள் வலிமை உடைய நந்தகோபனின் மருமௐகளே! நப்பின்னையே! என்று அழைக்கிறாள்.

இந்த நப்பின்னை யார் என்ற கேள்வி பலருக்கும் தோன்றக்கூடும். நப்பின்னை கிருஷ்ணனுக்கு எட்டு பட்டத்து ராணிகள் இருந்தனர். அவர்களில் ஒருத்திதான் நப்பின்னை. இவள் உண்மையில் பகவான் நாராயணனின் மூன்று மனைவியரில் ஒருவளான நீளாதேவியே ஆவாள்.

பகவானின் அவதாரங்களில் கிருஷ்ணனின் அவதாரம் பல வகைகளிலும் சிறப்பு வாய்ந்தது. ராமாவதாரத்தில்கூட, மகாலக்ஷ்மி பிராட்டி மட்டுமே சீதையாக அவதரித்தார். பூமி தேவியோ நீளா தேவியோ அவதாரம் செய்யவில்லை. ஆனால், கிருஷ்ணன் அவதரித்தபோது பகவானின் மூன்று தேவியருமே இந்த உலகத்தில் அவதாரம் செய்தனர். மகாலக்ஷ்மி ருக்மிணியாகவும், பூமிதேவி சத்யபாமாவாகவும், நீளாதேவி நப்பின்னையாகவும் அவதரித்து கிருஷ்ணனை மணந்துகொண்டனர்.

இந்த மூவரில் நப்பின்னையை மட்டும் ஆண்டாள் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், ருக்மிணியும் சத்யபாமாவும் கிருஷ்ணனை மணந்துகொண்ட பிறகுதான் நந்தகோபனுக்கு மருமௐகள்கள் ஆகின்றனர். ஆனால், இந்த நப்பின்னையோ ஆயர்குலத்தில், யசோதையின் சகோதரனுக்கு மகளாகப் பிறந்தவள். எனவே முன் இருவர்களை விடவும் ஆண்டாள் நப்பின்னையை மட்டும் குறிப்பாக சிறப்பித்து அழைக்கிறாள்.

நப்பின்னையின் தந்தை கும்பன் முரட்டுத்தனமான, அடக்குவதற்கு கஷ்டமான ஏழு எருதுகளை வளர்த்து வந்தான். அந்த ஏழு எருதுகளை அடக்கும் வீரன் எவனோ அவனுக்கே தன்னுடைய மகளைக் கல்யாணம் செய்துகொடுப்பேன் என்று அறிவித்திருந்தான். பலரும் அந்த எருதுகளை அடக்கமுயன்று தோற்றுப் போனார்கள். நப்பின்னையை கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்த கண்ணன், தான் அந்த ஏழு எருதுகளை அடக்கி நப்பின்னையை கல்யாணம் செய்துகொள்ளப் போவதாக யசோதையிடம் சொல்கிறான். யசோதைக்கு அதில் விருப்பம் இருந்தாலும், எருதுகளால் தன் செல்ல மகனுக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்வது என்ற கலக்கமும் ஏற்படுகிறது. கிருஷ்ணன் யசோதையை சமாதானம் செய்துவிட்டு, கும்பனின் நிபந்தனைப்படி ஏழு எருதுகளை அடக்கி, நப்பின்னையை மணந்துகொள்கிறான்.


311202gif_22542.jpg



ஆண்டாள் தன்னை ஆயர்குலத்தில் பிறந்தவளாகக் கருதிக்கொண்டு, பாவை நோன்பு இருப்பதால், இயல்பாகவே அவளுக்கு ஆயர்குலத்தில் பிறந்த நப்பின்னையின் மீது தனிப் பிரியம் ஏற்படுவது இயல்புதானே?

நப்பின்னை அந்த அறையில் படுத்திருப்பது ஆண்டாளுக்கு எப்படித் தெரிந்தது? நப்பின்னை தன் கூந்தலில் சூடி இருந்த நறுமணம் மிக்க மலர்களின் வாசனையானது, ஆண்டாளுக்கு நப்பின்னை அந்த அறையில் படுத்திருப்பதைத் தெரிவித்துவிட்டதாம். எனவே, நப்பின்னையே, நீ எங்களை ஏமாற்ற முடியாது. நீ இந்த அறையில்தான் படுத்திருக்கிறாய். உன் அருகில்தான் கிருஷ்ணனும் படுத்திருக்கிறான். கிருஷ்ணனுடன் பந்து விளையாடும் விரல்களை உடையவளே! உன்னுடைய கிருஷ்ணனின் புகழைப் பாடி அவனுடைய அருளைப் பெறவே நாங்கள் வந்திருக்கிறோம். செந்தாமரை மலர்களைப் போன்ற கைகளை உடையவளே! நப்பின்னையே! நீ எழுந்து வந்து உன் கைகளில் அணிந்திருக்கும் வளைகள் ஒலிக்கும்படியாக கதவுகளைத் திறந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தவர்கள் ஆவோம் என்கிறாள் ஆண்டாள்.

அவள் அத்தனை சுலபத்தில் தன் நாயகனைப் பிரிய சம்மதிப்பாளா என்ன?
[h=1]- க.புவனேஸ்வரி[/h]நன்றி : சக்திவிகடன்: Face Book /http://www.vikatan.com/news/spirituality/76502-andal-thiruppavai-eighteenth-devotional-hymn.art
 
தினம் ஒரு திருப்பாவை

பாசுரம் -19

ஆண்டாள் நப்பின்னையிடம் சொல்வது என்ன? #MargazhiSpecial

ண்டாள் கிருஷ்ணன் படுத்திருக்கும் அறையின் வாசலில் நின்றுகொண்டு, கிருஷ்ணனை உறக்கம் நீங்கி எழுந்திருக்குமாறு சொல்கிறாள். ஆனால், கிருஷ்ணன் எழுந்து வருவதாகத் தெரியவில்லை. ஆண்டாளுக்கு அப்போதுதான் கிருஷ்ணன் எவ்வளவு சொகுசாகப் படுத்து உறங்குகிறான் என்பது நினைவுக்கு வருகிறது. கிருஷ்ணன் படுத்திருக்கும் அழகை ஆண்டாள் எப்படி விவரிக்கிறாள் பாருங்கள்...

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்,
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி,
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்,
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்,
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை,
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்,
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,
தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்.


நான்கு பக்கங்களிலும் குத்துவிளக்குகள் மெல்லிய ஒளியைப் பரப்பிக் கொண்டிருக்கும் அறையில், யானையின் தந்தங்களால் செய்யப்பட்ட கால்களை உடைய கட்டிலின் மேல், மென்மையும் குளிர்ச்சியும் பொருந்தியதும், தூய வெண்மை நிறம் கொண்டதும், நறுமணம் நிறைந்த பஞ்சு மெத்தையின்மேல் கிருஷ்ணன் படுத்து உறங்குகிறானாம். அதுவும் எப்படி? அன்றுதான் மலர்ந்த கொத்து கொத்தான மலர்களைச் சரங்களாக்கி கரியமேகம் போன்ற கூந்தலில் சூடிக் கொண்டிருக்கும் நப்பின்னையின் மார்பில் தலைவைத்து உறங்குகிறானாம் கிருஷ்ணன். அப்படி உறங்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ணன் எழுந்திருக்கவில்லை என்றாலும் வாய் திறந்து ஒரு வார்த்தையாவது பேசக்கூடாதா என்ற ஆதங்கம் ஆண்டாளுக்கு. எனவே, 'கிருஷ்ணா, நீ எழுந்து வராவிட்டாலும் பரவாயில்லை; வாய் திறந்து ஒரு வார்த்தையாவது பேசக்கூடாதா?' என்று கேட்கிறாள்.

கிருஷ்ணனுக்கும் ஆண்டாள் அழைப்பது கேட்டு வாய் திறந்து பதில் சொல்ல ஆசைதான். ஆனால், பாவம் கிருஷ்ணனால் நப்பின்னையை மீறி எதுவும் செய்யமுடியவில்லை. ஆண்டாளோ, 'கிருஷ்ணா, நீ வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை என்றாலும் பரவாயில்லை, நப்பின்னை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பும் வேளையில், உன் கைகளை அசைத்து அபயம் என்று சொன்னாலே போதுமே' என்று கெஞ்சுகிறாள். ஹூம், கிருஷ்ணன் அதற்கும் அசையவில்லை. உடனே ஆண்டாள் வேறு முடிவுக்கு வருகிறாள். இனி நாம் நப்பின்னையிடமே வேண்டிக் கொள்வோம். அவள் மனது வைத்தால் முடியாத காரியமும் இருக்கிறதா என்ன என்ற எண்ணம் ஆண்டாளுக்கு வந்துவிடுகிறது.


தாயாரின் கடாக்ஷம் இருந்துவிட்டால் பெருமாளின் கடாக்ஷம் கிடைத்துவிடும் என்பது உலக இயல்புதானே?!
ஆண்டாள் நப்பின்னையிடம் வேண்டுகிறாள். 'மை தீட்டிய அகன்ற அழகிய கண்களை உடையவளே! நாங்கள் இத்தனை அழைத்தும் கிருஷ்ணன் எழுந்து வரவில்லையே. ஒருவேளை நீதான் அவனை எழுந்திருக்க விடாமல் செய்கிறாயோ? ஒரு நொடிப் பொழுதும் கிருஷ்ணனுடைய பிரிவை நீ தாங்கமாட்டாய் என்பது எங்களுக்கும் தெரியும்தான். ஆனாலும், எங்கள்மீது இரக்கம் காட்டக்கூடாதா? எங்கள் குலத்தில் பிறந்தவளான உன்னிடம் தவிர நாங்கள் வேறு யாரிடம் போய் ஆதரவு கேட்க முடியும்? கிருஷ்ணனை யமுனைக்கு அழைத்துச் சென்று மஞ்சன நீராட்டி, அவனுடைய புகழைப் பாடி, அவனுடைய அருளைப் பெறவே நாங்கள் விரும்பி வந்திருக்கிறோம். எங்களிடம் இரக்கம் காட்டி, நீ உன் மணாளனை எழுப்பி அனுப்பு. எங்களுடைய குலத்திலேயே பிறந்து எங்களுடனே ஆடியும் பாடியும் திரிந்த நீ, நாங்கள் வேண்டி விரும்பிக் கேட்டும் கிருஷ்ணனை எங்களுடன் அனுப்பாவிட்டால், அது உன்னுடைய மேன்மைக்கு இழுக்கு ஆகாதா?' என்று கேட்கிறாள்.

தன்னுடைய மேன்மைக்கு இழுக்கு ஆகாதா என்று ஆண்டாள் கேட்டதுமே நப்பின்னைக்கு சற்று இரக்கம் வந்துவிட்டது. இரக்கம் மட்டுமல்ல எங்கே தன்னுடைய மேன்மைக்கு இழுக்கு வந்துவிடுமோ என்ற அச்சமும் வந்துவிட்டது. அந்த நிலையில் நப்பின்னை என்ன செய்தாள்?

-க.புவனேஸ்வரி


நன்றி சக்திவிகடன்:FaceBook / http://www.vikatan.com/news/spirituality/76645-andal-thiruppavai-nineteenth-devotional-hymn.art
 

தினம் ஒரு திருப்பாவை


பாசுரம் - 20

நப்பின்னை நீளாதேவியா? மகாலக்ஷ்மி பிராட்டியா? #MargazhiSpecial


p50a_15156.jpg


கிருஷ்ணனும் எழுந்திருக்கவில்லை; நப்பின்னையும் எழுந்திருக்கவில்லை. நப்பின்னை தான் எழுந்திருக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, கிருஷ்ணனையும் எழுந்திருக்க விடவில்லை. இத்தனைக்கும் முதலில் ஆண்டாள் நப்பின்னையைத்தான் பலவாறாக புகழ்ந்து, கிருஷ்ணனை எழுப்பி அனுப்பச் சொன்னாள். என்னதான் அவளைப் புகழ்ந்தும் கெஞ்சியும் கேட்டும், கிருஷ்ணனை எழுந்திருக்க விடவில்லை. ஒருவேளை கிருஷ்ணனைப் புகழாமல் நப்பின்னையை மட்டும் புகழ்ந்ததால், அவள் இப்படி நடந்துகொள்கிறாளோ என்று எண்ணிய ஆண்டாள், இந்தப் பாடலில் இருவரையுமே புகழ்ந்து பாடுகிறாள்.

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று,
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்,
செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்,
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்,
நப்பினை நங்காய்! திருவே! துயிலெழாய்,
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை,
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.


கோடானு கோடி தேவர்களுக்கும் நித்யசூரிகளுக்கும் முதல்வனாக இருப்பவனே! கிருஷ்ணா! தேவர்களுக்கு ஒரு துன்பம் வருவதற்கு முன்னதாகவே, அவர்கள் உன்னை நினைத்த மாத்திரத்தில் அவர்களுக்கு முன்பாகச் சென்று அவர்களுடைய துன்பங்களைத் தீர்ப்பவனே! கம்பீரமும் மிடுக்கும் கொண்டவனே! உறக்கத்தில் இருந்து எழுந்து வருவாயாக' என்கிறாள் ஆண்டாள்.
'முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே' என்பதற்கு, தேவர்களுக்கு முன்பாகச் சென்று, அவர்களுடைய இடத்தில் இருக்கும் பாரிஜாத விருட்சத்தைப் பெற்று வந்ததையும் குறிப்பிடலாம்.
தேவர்களுக்கு ஒரு துன்பம் வராமல் பாதுகாக்கும் முதல்வன் அல்லவா கிருஷ்ணன்! அவன் ஏன் தேவர்களுக்குச் சொந்தமான ஒரு விருட்சத்துக்காக அவர்களை எதிர்க்கவேண்டும்?
நாரதரால் வந்த கலகம் அது.

நாரதர் ஒருமுறை தேவலோகத்தில் இருந்து வரும்போது, ஒரு பாரிஜாத மலரைக் கொண்டு வந்து கிருஷ்ணனிடம் தருகிறார். கிருஷ்ணன் அந்த மலரை அருகில் இருந்த ருக்மிணிக்குத் தருகிறார். உடனே நாரதர் சத்யபாமாவிடம் சென்று, ''தேவி, நான் தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மலரைக் கொண்டு வந்தேன். அதை கிருஷ்ணர் ருக்மிணி தேவிக்குக் கொடுத்துவிட்டார். உங்கள் மீது கிருஷ்ணருக்கு அவ்வளவுதான் பிரியம் போலிருக்கிறது'' என்றார். அதே நேரம் கிருஷ்ணர் அங்கு வரவே, சத்யபாமா தனக்கு பாரிஜாத மரம் வேண்டும் என்று வற்புறுத்தினாள். சத்யபாமா இப்படிச் செய்வாள் என்பது நாரதருக்குத் தெரியாதா? அவர் உடனே தேவேந்திரனிடன் சென்று பாரிஜாத மரத்துக்காக கிருஷ்ணன் வரப்போகும் செய்தியை தேவேந்திரனிடம் சொல்லிவிடுகிறார்.

கிருஷ்ணன் தேவலோகத்துக்கு வந்ததுமே, இந்திரன் கிருஷ்ணனை பணிந்து வணங்கி, தேவலோகத்து பாரிஜாத விருட்சத்தைக் கப்பமாகச் செலுத்தினான். அதாவது தேவலோகத்தில் இருந்த பாரிஜாத விருட்சத்தைக் கப்பமாகப் பெற்று, தேவலோகத்தில் பாரிஜாத விருட்சம் இல்லாதபடி தவிர்த்துவிட்டார் என்றும் சொல்லலாம்.

அந்த கிருஷ்ணன், தன்னைச் சரண் அடைந்தவர்களை எல்லாம் உடனுக்குடன் காப்பாற்றும் கருணை மிகக் கொண்டவனாம். அதேசமயம் தன்னிடமும் தன்னுடைய பக்தர்களிடமும் விரோதம் பாராட்டுபவர்களுக்கு துன்பத்தை உடனே கொடுக்கும் விமலனாம். அதாவது குழந்தையின் உள்ளத்தைப் போலவே பரிசுத்தமானவனாம்! இப்படி போற்றும் ஆண்டாள், கிருஷ்ணனிடம், 'பொழுது விடிந்துகொண்டிருப்பது உனக்குத் தெரியவில்லையா? சீக்கிரம் எழுந்து வா கிருஷ்ணா! உன்னுடைய அருள் வேண்டி, நாங்கள் எவ்வளவு நேரம்தான் இங்கே காத்துக்கொண்டு இருப்பது? சீக்கிரம் எழுந்திரு' என்று ஆண்டாள் கிருஷ்ணனை எழுப்புகிறாள்.

தான் இத்தனை சொல்லியும் கிருஷ்ணன் எழுந்திருக்கவில்லையே என்று நினைத்த ஆண்டாள், திரும்பவும் நப்பின்னையை துணைக்கு அழைக்கிறாள். 'நப்பின்னை நங்கையே, பெண்மையின் பூரணத்துவம் கொண்டவளே!' என்றெல்லாம் போற்றும் ஆண்டாள், இப்போது அவளை நீளா தேவியாகப் பார்க்காமல், சாட்சாத மகாலக்ஷ்மியாகவே பாவித்து, 'மகாலக்ஷ்மியான பெரிய பிராட்டியே! உன்னுடைய கருணை எங்களுக்குக் கிடைக்காதா? உன்னுடைய கருணை மட்டும் எங்களுக்கு இருந்துவிட்டால், கிருஷ்ணனின் கருணை எங்களுக்கு தானாகவே கிடைத்துவிடுமே. எங்களிடம் கருணை கொண்டு, எங்கள் நோன்புக்குத் தேவையான விசிறியும், கண்ணாடியும் தருவதுடன், கிருஷ்ணனையும் எழுப்பி எங்களுடன் அனுப்பி வைப்பாய்' என்று வேண்டுகிறாள்.

- க.புவனேஸ்வரி


நன்றி : சக்தி விகடன்
Source: www.vikatan.com/news/spirituality/76743-andal-thiruppaavai-twentieth-devotional-hymn.art
 
Last edited by a moderator:

தினம்
ஒரு திருப்பாவை
பாசுரம் - 21
கிருஷ்ணன் திருடன் - யார் சொன்னது #MargazhiSpecial

p29_21089_19361.jpg


ப்பின்னையை புகழ்ந்தும், கிருஷ்ணனைப் புகழ்ந்தும், இருவரையும் சேர்த்தே புகழ்ந்தும் கிருஷ்ணன் எழுந்தபாடில்லை. இப்போது கிருஷ்ணன் யாருடைய பிள்ளை, அவன் தந்தை எப்படிப்பட்ட வள்ளல், அவனுடைய செல்வச் செழிப்புதான் என்ன என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லி, கிருஷ்ணனை எழுந்திருக்குமாறு சொல்கிறாள்.
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப,
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்,
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்,
ஊற்ற முடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்,
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்,
ஆற்றாது வந்துன் னடிபணியு மாபோலே,
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.

கு
டங்களை வைத்து பசுவின் மடியில் கை வைத்தாலே, குடங்கள் எல்லாம் நிறையும்படியாக தாராளமாகப் பாலைப் பொழியும் பசுக்களை கணக்கின்றி பெற்றிருக்கும் நந்தகோபரின் பிள்ளையே, அந்தப் பசுக்களுக்கு இருக்கும் வள்ளல்தன்மைகூட உனக்கு இல்லையா? நீ என்ன சாதாரண பிறவியா? என்று ஆண்டாள் கேட்கிறாள்.
ஆண்டாளின் கேள்விக்கு கிருஷ்ணனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இந்த இடத்தில் விளக்கம் சொல்லும்போது அஹோபில மடம் 44-வது பட்டம் ஶ்ரீமத் அழகிய சிங்கர் சுவாமிகள், தம்முடைய திருப்பாவைக்கான ஸுபோதினி விளக்கவுரையில் கிருஷ்ணனுக்கும் ஆண்டாளுக்கும் இடையிலான ஓர் உரையாடலாக சுவைபடச் சொல்லி இருக்கிறார். அவருடைய அந்த ரசமான விளக்கம்...

ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் கிருஷ்ணனின் தந்தை எப்படிப்பட்ட செல்வந்தன் என்று சொல்லி, உறக்கத்தில் இருந்து எழுந்திருக்கச் சொல்லும்போது கிருஷ்ணன் படுக்கையில் இருந்தபடியே பேசத் தொடங்குகிறான். அவன் திருவாய் மலர்ந்தவுடனே ஆண்டாளும் அவளுடைய தோழிகளான கோபிகைகளும், 'ஆஹா, எங்கள் கிருஷ்ணன் பேச ஆரம்பித்துவிட்டான்' என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.


அவர்களின் மகிழ்ச்சியைப் போக்கடிப்பது போலவே கிருஷ்ணன் பேச ஆரம்பிக்கிறான்.

'அசட்டுப் பெண்களே! கேளுங்கள், நான் இந்த ஊரில் எந்த ஜாதியைச் சேர்ந்தவன்? எந்த விதத்தில் உயர்ந்தவன்? மாடு மேய்த்து ஜீவனம் பண்ணுகிறவன். அவர்கள் சோறு போடாமற் போனால் திருடித் தின்றுகொண்டிருக்கிறேன். படிப்புக் கிடையாது. இந்த ஊரில் எங்கும் எனக்குக் கெட்டபேர்தான் இருக்கிறது. என் அம்மா எத்தனையோ தடவை என்னைக் கட்டிப் போட்டு அடித்திருக்கிறாள். உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். நல்ல துணி கிடையாது. கந்தல் துணி. என் நகையைப் பார்த்தீர்களா? குன்றிமணிமாலை. தலையில் பாருங்கள்: பெரிய கிரீடம் மயில்தோகை! எனக்கு 'நொண்டி கிருஷ்ணன்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

'பகல் திருடன்' என்ற ஜாப்தாவில் என்னை சேர்த்திருக்கிறார்கள். 'அந்த இடைப்பையன் எங்கே?' என்று தேடிக்கொண்டு வருகிறார்கள். எங்கள் தகப்பனும் ஏழை. உங்கள் தாய்தந்தையர் உங்களை வீட்டிற்குள் நுழையவிடாமல், 'உங்கள் இஷ்டப்படி கிருஷ்ணனுடனேயே போய் விடுங்கள்' என்று உங்களைத் தள்ளி வைத்துவிட்டார்களேயானால், உங்களைக் கட்டிக்கொண்டு சோறுபோட எனக்கு என்ன இருக்கிறது? பெண்களே! வேண்டாம் முரட்டுத்தனம். வீடு போய்ச் சேருங்கள்" என்று ஶ்ரீகிருஷ்ணன் அந்தப் பெண்களைப் பார்த்துக் கபடமாகச் சொன்னான்.

அதற்கு அந்தப் பெண்கள், "கிருஷ்ணா! நீ சொல்லுவது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீ இந்த ஊரில் இருக்கிறவர்களின் வீட்டு மாட்டையா மேய்த்துப் பிழைக்கிறாய்? ஐயோ பாவம்! சுமார் பத்து லக்ஷம் பசுக்களை வைத்துக்கொண்டிருக்கிற மகாராஜனான நந்தகோபன் குமாரன் அல்லவா நீ? யாருக்குத் தெரியாது என்று பொய் சொல்லுகிறாய். நீ ஒரு பிள்ளைதானே நந்தகோபனுக்கு? அவ்வளவு சொத்தும் பங்கு போடாமல் உனக்கு மாத்திரம்தானே பாத்தியப்பட்டது? உங்கள் தகப்பனுக்கு உள்ள எல்லாப் பசுக்களும் எங்களுக்குத் தெரியும். அவை எவ்வளவு பால் கறக்கின்றன என்றும் எங்களுக்குத் தெரியும். சொல்லுகிறோம், கேள்; ஒவ்வொரு பசுவையும் கறக்கவேண்டும் என்று நினைத்துப் பெருங் குடங்களைப் பசுவின் மடிக்கு சமீபத்தில் கொண்டுபோனவுடனே பால் சொரிய ஆரம்பிக்கின்றன.

குடங்கள் நிறைந்து மேலே வழிய ஆரம்பிக்கிறது பால்."ஒரு பசுவின் இடத்தில் எத்தனை குடங்கள் வைத்தாலும் நிறைக்கிறது. இப்படியே பத்து லக்ஷம் பசுக்களும் கறக்கிற பெரும் பசுக்கள், நல்ல ஸ்வபாவத்தோடு கூடின பெரும் பசுக்கள். இளம் பெரும் பசுக்கள். பால் விற்கிறவர்கள் இந்தப் பாலை வாங்கிக்கொண்டு அயல் ஊர்களுக்குப் போய் விற்றுப் பெரும் பணக்காரர்களாக ஆகியிருக்கிறார்கள். அவ்வளவு பசுக் கூட்டங்களை ஜன்மாந்திர புண்ணியத்தினால் நந்தகோபன் 'படைத்தான்' அடைந்திருக்கிறான். அப்படிப்பட்ட வள்ளலின் பிள்ளையான நீ எங்களுக்கு அருள் செய்யக்கூடாதா? என்கிறார்கள்.

என்ன ஒரு ரசனையான உரையாடல் பாருங்கள்!

வேதங்கள் எல்லாம் போற்றும், வேதங்களுக்கெல்லாம் நாயகனான கிருஷ்ணனே! உன்னுடைய பகைவர்கள் உனக்கு அஞ்சி, தங்கள் வலிமையைத் தொலைத்து, உன்னுடைய வாசலில் வந்து நிற்பதுபோல் நாங்களும் வந்து நிற்கிறோம். ஆனால், உன்னுடைய பகைவர்கள் உனக்கு அஞ்சி வந்து உன் திருவடி பணிந்து நிற்கிறார்கள். ஆனால், நாங்களோ உன்னிடம் பிரேமை கொண்டவர்களாக வந்து இருக்கிறோம். எங்களுக்கு அருள் செய்ய எழுந்து வருவாயாக என்று ஆண்டாள் வேண்டுகிறாள்.

ஆனால், கிருஷ்ணனுக்கு இன்னும் ஆண்டாளின் தெள்ளுத் தமிழ்ப் பாசுரங்களைக் கேட்கவேண்டும் போல் இருக்கிறதோ என்னவோ? அவன் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.

-
.புவனேஸ்வரி

நன்றி : சக்தி விகடன்

Source: http://www.vikatan.com/news/spirituality/76886-andal-thiruppavai-twenty-oneth-devotional-hymn.art
 
Last edited by a moderator:
தினம் ஒரு திருப்பாவை

பாசுரம் - 22

எங்கள் மீது அன்பு செய்வாய் கிருஷ்ணா...#MargazhiSpecial


310977gif_20489.jpg


கிருஷ்ணனின் அருள் வேண்டி வந்திருக்கும் எங்கள்மேல் இரக்கம் காட்டக்கூடாதா? உன் இரு மலர்க் கண்களைக் கொண்டு எங்களைப் பார்க்கமாட்டாயா? உன்னுடைய கடைக்கண் பார்வை ஒன்றே போதுமே எங்களுடைய பாவங்கள் எல்லாம் நீங்கி, அதனால் எங்களுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிவிடுமே என்று ஆண்டாள் கிருஷ்ணனிடம் வேண்டிப் பிரார்த்திக்கிறாள். கிருஷ்ணனின் தரிசனத்துக்காக வந்திருப்பவர்களின் தகுதிகளைச் சொல்லும் ஆண்டாள், அப்பேர்ப்பட்டவர்கள் உன்னுடைய தரிசனத்துக்காக வந்திருக்கிறார்கள் என்றால், நீ எப்படி உன்னை ஏழை என்று சொல்லமுடியும்? விரும்பும் எதையும் தரக்கூடிய உன்னை, நீ ஏழை என்று சொல்லிக்கொண்டால், நாங்கள் அதை நம்பிவிட முடியுமா என்று கேட்பதுபோல் பாடுகிறாள்.

அங்கண்மா ஞாலத் தரசர், அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே,
சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்,
கிண்கிணி வாய்செய்த தாமரைப் பூப்போலே,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ,
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்,
அங்கண் இரண்டுங்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல்,
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.


அழகும், அனைத்து வளங்களும் நிரம்பப் பெற்றிருப்பதும், விசாலமான பரப்பினை உடையதுமான பெரிய பெரிய ராஜ்யங்களை ஆளும் அரசர்கள் எல்லோரும், இதுவரை தங்களுக்கு இருந்த, 'தங்களை விடவும் மேம்பட்டவர்கள் இல்லை' என்ற அகந்தையை விட்டுவிட்டனர். இந்த உலகத்தில் எப்போது உன்னை தோற்றுவித்துக் கொண்டாயோ, அப்போதே அவர்களுடைய அகந்தை நீங்கிவிட்டது. நீயே அனைவரிலும் மேம்பட்டவன் என்றும், நீயே அனைவரிலும் பெரியவன் என்றும், வல்லமை மிக்கவன் என்றும் உணர்ந்துகொண்டவர்களாக, உன்னிடம் சரண் அடைவதற்காக வந்திருக்கிறார்கள். இதுவரை சாம்ராஜ்ய சக்கரவர்த்திகள் எல்லோருமே, நமக்குமேல் இறைவன் என்று ஒருவன் இல்லை; இருந்தாலும் அவனுடைய தயவு நமக்குத் தேவையில்லை; நம்முடைய சாமர்த்தியமே போதும் என்று இறுமாப்புடன் திரிந்துகொண்டிருந்தார்கள். உன்னுடைய அவதாரம் எப்போது இந்த பூமியில் நிகழ்ந்ததோ, எப்போது உன்னுடைய லீலைகள் இந்த பூமியில் தொடங்கியதோ அப்போதே அவர்கள் தங்களுடைய இறுமாப்பை எல்லாம் தொலைத்தவர்களாக, இதோ இப்போது உன்னுடைய திருவடி தரிசனத்துக்காக இங்கே காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் எல்லோரும் உன்னிடம் கொண்ட அச்சத்தால், எங்கே உன்னால் தங்களுக்கும் தங்கள் ராஜ்யத்துக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தினால் வந்திருக்கின்றனர். பூதனை, சகடாசூரன், பகாசுரன் போன்றவர்களுடன் அவர்களை அனுப்பிய கம்சனையும் வதம் செய்த உன்னுடைய தோள்வலியும், வீரமும் அவர்களைப் பெரிதும் பயமுறுத்திவிட்டது போலும். அதனால்தான் அவர்கள் உன்னிடம் வந்திருக்கிறார்கள்.


ஆனால், நாங்கள் அப்படி இல்லை, உன்னிடம் கொண்டிருக்கும் அளவற்ற பிரேமையின் காரணமாக வந்திருக்கிறோம். உன்னால்தான் எங்களை அரவணைத்து ஆறுதல் சொல்லி,நல்ல வழிக்கு எங்களை அழைத்துச் செல்லமுடியும். அந்த நல்ல வழியின் முடிவிடம் எது தெரியுமா? தாமரை மலர்களையும் பழிக்கும்படி மென்மை வாய்ந்த உன்னுடைய திருவடிகள்தான். எங்கள்மீது வெறுப்பினாலோ அல்லது உனக்கு அருகில் இருக்கிறாளே நப்பின்னை அவளிடம் உனக்கு உள்ள அச்சத்தினாலோ கண்களை மூடிக்கொண்டு தூங்குவதுபோல் பாசாங்கு செய்யாதே. உன்னிடத்தே அளவற்ற பிரியம் வைத்திருக்கும் எங்கள்மேல் கருணை கொண்டு, சூரியோதய காலத்தில் மெள்ள மெள்ள மலரும் தாமரை மலரைப் போல், சூரியனையும் சந்திரனையும் போன்ற உன்னுடய கண்களைத் திறந்து எங்களைப் பார்ப்பாயாக. அப்படி நீ பார்த்தாலே போதும், எங்கள்பேரில் இருக்கிற பாவங்கள் எல்லாம் எங்களை விட்டுப் போய்விடும். எங்கள் மீது அன்பு செய்வாய் கிருஷ்ணா என்று ஆண்டாள் வேண்டுகிறாள்.

அடுத்த பாடலிலாவது ஆண்டாளுக்கு கிருஷ்ணனின் அருள் கிடைக்குமா..?

-க.புவனேஸ்வரி

நன்றி : சக்தி விகடன்

Source: http://www.vikatan.com/news/spirituality/77006-andal-devotional-hymn-series-22.art
 
Last edited by a moderator:
தினம் ஒரு திருப்பாவை-

பாசுரம்-
23

கிருஷ்ணனின்
நடையழகை காண விருப்பமோ? #MargazhiSpecial









311010gif_17393.jpg


மா
ர்கழி முதல் நாளில் இருந்து தன் தோழிகள் ஒவ்வொருவரையும் பாடுபட்டு எழுப்பிய ஆண்டாள், நந்தகோபனின் மாளிகைக்கு வந்து வாயிற்காவலனை ஒருவழியாகச் சமாதானப்படுத்தி உள்ளே சென்று நந்தகோபரின் அனுமதி பெற்றுவிட்டாள். தொடர்ந்து அடுத்த அறையில் இருந்த யசோதையின் அனுமதி பெற்று, கிருஷ்ணனின் அறைக்கும் வந்துவிட்டாள்.

ஆனால், கிருஷ்ணனை யமுனைக்கு அழைத்துச் செல்வதற்கு நப்பின்னையின் சம்மதம் அல்லவா முக்கியம்? அவளைப் பலவாறு புகழ்ந்தும் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. பகவானைப் பிரிய மனம் வருமா அவளுக்கு? கடைசியில் ஒருவழியாக நப்பின்னையின் மனமும் ஆண்டாளிடமும் அவளுடைய தோழிகளிடமும் இரக்கம் கொண்டது.

அவளும் கிருஷ்ணனை அழைத்துச் செல்ல சம்மதம் தெரிவித்துவிட்டாள். ஆனால், கிருஷ்ணனுக்கு உடனே எழுந்திருக்க மனம் வரவில்லை. ஒருவேளை நப்பின்னையிடம் பயமோ என்னவோ? அல்லது பயந்தது போன்ற நடிப்பாகவும் இருக்கலாம். அவனுக்குத்தான் வெளிச்சம். கடைசியில் ஒருவழியாக கிருஷ்ணனும் எழுந்திருக்கிறான். கிருஷ்ணன் எழுந்ததைக் கண்டு ஆண்டாளும் அவள் தோழியரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். கிருஷ்ணன் சீக்கிரம் வந்து அவனுக்கு உரிய ஆசனத்தில் அமர்ந்து தங்களுடைய குறைகளைக் கேட்கவேண்டும் என்று சொல்கிறாள்.
கிருஷ்ணன் எப்படி எழுந்து வரவேண்டும் என்பதை ஆண்டாள் பாடுவதைப் பாருங்கள்...

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்,
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா, உன்
கோயில்நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து, யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.

'கிருஷ்ணா, நீ எழுந்துகொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், நீ எழுந்துகொண்டால் மட்டும் போதுமா என்ன?' என்று கேட்கிறாள். அதற்கு கிருஷ்ணன், 'நீங்கள் சொன்னபடியே எழுந்துகொண்டேன்.. இன்னும் நான் என்ன செய்யவேண்டும்?' என்று கேட்கிறான்.


ஆண்டாள், 'மழைக்காலத்தில் மலைக் குகையில் நீண்ட உறக்கத்தில் இருக்கும் சிங்கம், மழைக்காலம் முடிந்ததை உணர்ந்துகொண்டதும், தீக்கங்கு போல் சிவந்த கண்களை விழித்துப் பார்த்தபடியும், எல்லா அங்கங்களையும் பிடரி முடி சிலிர்க்கும்படியாக உடம்பை உதறிக்கொண்டு, கர்ஜனை செய்துகொண்டு வெளியில் வருவதுபோல், காயாம்பூவின் நிறம் கொண்டவனே, கிருஷ்ணா! உன்னுடைய அறையில் இருந்து புறப்பட்டு, நீ ராஜாங்கம் நடத்தும் ஆஸ்தான மணிமண்டபத்துக்கு எழுந்தருளவேண்டும்' என்கிறாள்.



310499gif_17283.jpg




ஆண்டாள் கிருஷ்ணனை சிங்கமாக வர்ணித்துப் பாடியதற்குக் காரணமும் இருக்கிறது. பிரகலாதன் காணும் இடமெங்கும் நீக்கமற நிலைத்திருப்பான் என் நாராயணன் என்று சொன்ன அந்தக் கணமே, எங்குமே நீக்கமற அருவமாக நிலைத்திருக்கும் அந்தப் பரம்பொருளான நாராயணன், நரசிம்ம உருக்கொண்டுவிட்டான். அதுமட்டுமல்ல 'இரண்யன் எந்தத் தூணைப் பிளப்பானோ?' என்ற எண்ணத்தில் காணும் இடமெங்கும் நரசிங்க வடிவம் கொண்டு நிலைகொண்டுவிட்டார். அதேபோல் கிருஷ்ணனும் நாங்கள் காணும் இடமெங்கும் நிலைபெற்று இருந்து தங்களை மகிழ்விக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஆண்டாள் இப்படிப் பாடி இருக்கலாம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

'அப்படி கிருஷ்ணன் சிங்கம் போல் எழுந்து நடந்து ஆஸ்தான மண்டபத்தில் உள்ள சிங்காசனத்தில் எழுந்தருளவேண்டும். உனக்கு நாங்கள் வந்திருக்கும் காரியம் நன்றாகத் தெரிந்திருக்கலாம். ஆனாலும், நீ உன்னுடைய ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி எங்கள் விருப்பத்தைக் கேட்பதுதான் சரியாக இருக்கும்' என்கிறாள் ஆண்டாள்.


ஆண்டாள், ஏன் கிருஷ்ணன் உறக்கத்தில் இருந்து எழுந்த அறையிலேயே அவனுடைய குறைகளைச் சொல்லாமல், ஆஸ்தான மண்டபத்துக்கு எழுந்தருளச் சொல்கிறாள் தெரியுமா? அவனுடைய நடையழகை தரிசித்து மகிழத்தான். அப்படி கிருஷ்ணன் நடந்து வரும்போதுதானே அவனுடைய திருவடிகளின் திவ்விய தரிசனத்தை ஆண்டாளும் தோழியரும் பெற முடியும். எனவேதான் ஆண்டாள் கிருஷ்ணனை ஆஸ்தான மண்டபத்துக்கு நடந்து வருமாறு கேட்டுக்கொள்கிறாள்.

விபீஷணன் ராமபிரானின் நடையழகைக் காண்பதற்கு விரும்பியபோது, ராமபிரான் திருக்கண்ணபுரத்தில் நடையழகு தரிசனம் தருவதாகச் சொல்லி, அதன்படியே இன்றைக்கும் திருக்கண்ணபுரத்தில் அமாவாசைதோறும் விபீஷணனுக்கு நடையழகு சாதிக்கும் வைபவம் நடைபெறுகிறது.

ஆண்டாள் கிருஷ்ணனுடைய நடையழகைக் காண விரும்புவதாகச் சொன்னவுடனே கிருஷ்ணன் எழுந்து வந்துவிடுவானா என்ன?
ஆண்டாளின் தேன்தமிழ்ப் பாசுரங்களைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருந்ததுபோலும். எனவே அவன் உடனே எழுந்து நடந்து வரவில்லை.

ஆண்டாளும் விடுவதாக இல்லை.....

- க.புவனேஸ்வரி

நன்றி : சக்தி விகடன்

Source: http://www.vikatan.com/news/spirituality/77118-andal-thiruppavai-twenty-third-devotional-hymn.art
 
Last edited by a moderator:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top