• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்

Status
Not open for further replies.

saidevo

Active member
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்
ரமணி


இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம்.

01. Pantoum: பாண்டி
Pantoum - Wikipedia, the free encyclopedia


இந்த வடிவத்தைத் தமிழில் ’பாண்டி’ என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள்
தம் ’சந்தவசந்தம்’ மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே:
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w

இந்த pantoum--’பாண்டி’ வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்:

Stanza 1 A B C D
Stanza 2 B E D F
Stanza 3 E G F H
Stanza 4 G I (or A or C) H J (or A or C)

This pattern continues for any number of stanzas, except for the final stanza,
which differs in the repeating pattern. The first and third lines of the last stanza
are the second and fourth of the penultimate; the first line of the poem
is the last line of the final stanza, and the third line of the first stanza
is the second of the final. Ideally, the meaning of lines shifts when they
are repeated although the words remain exactly the same: this can be done
by shifting punctuation, punning, or simply recontextualizing.

Ref: Pantoum - Wikipedia, the free encyclopedia

அதாவது, ஒவ்வொரு செய்யுளின் இரண்டாம், நான்காம் அடிகள்
அதற்கடுத்த செய்யுளின் முதலாம், மூன்றாம் அடியாக வரவேண்டும்.
இதுபோல் எத்தனை செய்யுட்களும் வரலாம். ஆனால் இறுதிச் செய்யுள் அமைப்பில்
அதன் முந்தைய செய்யுளில் அடிகள் இரண்டும் நான்கும் இதன் முதல், மூன்றாம்
அடிகளாக அமைவதுடன், முதற்செய்யுளின் மூன்றாம் அடி இதன் இரண்டாம் அடியாகவும்,
முதற்செய்யுளின் முதலடி இதன் இறுதி அடியாகவும் அமைதல் வேண்டும்.

pantoum உதாரணங்கள்:
Pantoum Poems | Examples of Pantoum Poetry - PoetrySoup

*****

இனி, நான் எழுதிய சில ’பாண்டி’க் கவிதைகள்:

வேலை எனவோ?
(ஆங்கிலப் பாவடிவம் pantoum-இன் தமிழ் வடிவாகப் ’பாண்டி’ எனப் பெயரிட்டு,
சந்தவசந்தம் இணையக் குழும ஸ்தாபகர் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் செய்த வடிவம்)


காலை நேரம் கதிர்வரும் போதில்
மேலைக் காற்றில் மேனியும் குளிர
சாலை வாகனம் சற்றே குறைய
காலை வீசிக் கடற்கரை சென்றாள். ... 1

மேலைக் காற்றில் மேனியும் குளிர
சேலைத் தலைப்பை சேர்த்துப் போர்த்தி
காலை வீசிக் கடற்கரை சென்றாள்
வாலைக் குமரி வயதில் இளையாள். ... 2

சேலைத் தலைப்பை சேர்த்துப் போர்த்தி
சோலைப் பூச்சரம் தலையில் ஆடிட
வாலைக் குமரி வயதில் இளையாள்
சாலை யோரம் தாள்களைப் பதித்தாள். ... 3

சோலைப் பூச்சரம் தலையில் ஆடிட
மாலைக் கதிரொளி மஞ்சள் மேனியள்
சாலை யோரம் தாள்களைப் பதித்தாள்
வேலை எனவோ? வியந்தேன் நானே! ... 4

மாலைக் கதிரொளி மஞ்சள் மேனியள்
சாலை வாகனம் சற்றே குறைய
வேலை எனவோ வியந்தேன் நானே
காலை நேரம் கதிர்வரும் போதில்! ... 5

--ரமணி, 26-27/12/2014

*****

வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்!
(நாற்சீர்ப் ’பாண்டி’)

’பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதீர்’*
வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்
காரிருள் நீங்கும் கண்ணொளி சேரும்!

’நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதீர்’
பாரினில் உம்போல் பார்ப்பது அரிதே
காரிருள் நீங்கும் கண்ணொளி சேரும்
நேரமும் வருமே நினைவினிற் கொள்வீர்!

பாரினில் உம்போல் பார்ப்பது அரிதே
யாரும் உம்மை ஏய்த்தல் ஆகா
நேரமும் வருமே நினைவினிற் கொள்வீர்
சாரமே கொண்டு சக்கையைத் தள்ளுவீர்!

யாரும் உம்மை ஏய்த்தல் ஆகா
தேரும் வாழ்வில் தேடியே ஞானச்
சாரமே கொண்டு சக்கையைத் தள்ளுவீர்
சீரும் சிறப்பும் செயல்வித மாகும்!

தேரும் வாழ்வில் தேடியே ஞான
வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்
சீரும் சிறப்பும் செயல்வித மாகும்
’பாரத பூமி பழம்பெரும் பூமி’!

--ரமணி, 27/12/2014

குறிப்பு:
முதற் செய்யுளின் முதலிரண்டு அடிகள் மகாகவி பாரதியாரின் ’சத்ரபதி சிவாஜி’
என்னும் பாடலில் இருந்து கொண்ட மேற்கோள் ஆகும்.

*****

பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்!
(மழலையர் பாட்டு: நாற்சீர்ப் பாண்டி)

பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்
வெள்ளையாம் ஆடையே மேனிமேல ணிந்தவர்
கிள்ளையைப் போலவர் கீர்த்தியினைப் பாடுவோம்
அள்ளியே தருவரே ஆற்றலுடன் புத்தியும்! ... 1

வெள்ளையாம் ஆடையே மேனிமேல ணிந்தவர்
உள்ளமே வந்திடில் ஊஞ்சலாடும் உவகையாம்
அள்ளியே தருவரே ஆற்றலுடன் புத்தியும்
பிள்ளைநான் பொண்ணுநீ பிள்ளையாரைப் போற்றுவோம்! ... 2

உள்ளமே வந்திடில் ஊஞ்சலாடும் உவகையாம்
துள்ளுவோம் பிள்ளையார் தோற்றமெழில் கண்டுநாம்
பிள்ளைநான் பொண்ணுநீ பிள்ளையாரைப் போற்றுவோம்
கொள்ளவே அளவினில் குறையாத செல்வமே! ... 3

துள்ளுவோம் பிள்ளையார் தோற்றமெழில் கண்டுநாம்
புள்ளிமான் ஓட்டமாய்ப் போகுமே சோம்பலும்
கொள்ளவே அளவினில் குறையாத செல்வமே
பள்ளியின் கல்வியாய்ப் பட்டறியும் ஞானமாய்! ... 4

புள்ளிமான் ஓட்டமாய்ப் போகுமே சோம்பலும்
கிள்ளையைப் போலவர் கீர்த்தியினைப் பாடுவோம்
பள்ளியின் கல்வியாய்ப் பட்டறியும் ஞானமாய்ப்
பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்! ... 5

--ரமணி, 27/12/2014, கலி.12/09/5115

*****
 
============================================================
02. Nonet: ஒன்பான் ஓரசை
Nonnet - Wikipedia, the free encyclopedia
============================================================
A Nonnet is a type of poem which has the following requirements:
* It has nine lines
* The first line has 9 syllables, the second 8 syllables, the third 7 syllables until the ninth line which has one syllable.
* Has an iambic meter (stress every other syllable)

Example: A Bereft Mother
Poem: A Bereft Mother by Alfred Vassallo

children grew and left the nest empty
the rooms are vacant and silent
the table made for one
she feels deserted
no room to smile
worrying
about
them

தமிழ் வடிவம்: ஒன்பான் ஓரசை

01. Nonet என்பதைத் தமிழில் ’ஒன்பான் ஓரசை’ எனலாம்.

சீர்க் கணக்கு இல்லாமல் முதலடியில் ஒன்பதில் தொடங்கி ஒவ்வோர் அடியிலும் ஓரசை
குறைவாக வரவேண்டும். இரண்டு அடிகளிடை ஓரெதுகை யாகவும், இறுதி
மூன்று அடிகளிலும் ஒரே எதுகை வருமாறும் அமைக்கலாம்.

உதாரணங்கள்
இல்லம்


வீடே கலகல வென்றந் நாட்களிலே
ஊடாடும் கூட்டம் குடும்பமென
பின்னர் பிள்ளை தனிக்குடும்பம்
இன்றோ ஓர்பிள்ளை பெண்
நரைமுது பெற்றோர் தனி
திரைகடல் தாண்டிக்
கல்விவேலை
இல்லம்
இல்.

பணம்

மழைப்பொழிவு மும்மாரி அந்நாளில்
விழைபொருள் பணமென வீணர் இந்நாள்
கொலையும் கொள்ளையும் கொள்கையென
நிலையிலா மாந்தராய் வாழ்க்கை
கனவின் இலக்கு பணம்
நனவின் நன்மை
பணப் பற்று
பணமுதல்
பணம்.

--ரமணி, 27/12/2014

*****

சிவன்
(nonet: ஒன்பான் ஓரசை)

அஞ்செழுத்தில் நின்று ஆற்றுப் படுத்திப்
பஞ்ச பூதத் தண்ட மாயவை
கொள்ளும் உயிரினங்கள் அனைத்திலும்
உள்ளுறைந் தியங்கும் உண்மையாய்
உள்ளம் எட்டாத
வேதப் பரம்பொருள்
நாதபிந்து
சிவையாய்ச்
சிவன்.

--ரமணி, 28/12/2014

*****
 
============================================================
03. Monorhyme: ஒற்றை இயைபு
Pantoum - Wikipedia, the free encyclopedia
============================================================
அளவொத்த அடிகளாக அமைந்து, அடிகளின் இறுதியில் ஒற்றை இயைபு வரவேண்டும்.
இரண்டு அடிகளுக்கு ஓரெதுகையும் சீர்களிடை பொழிப்பு மோனையும் அமைவது சிறப்பு.

காலைக் கால்நடை
(monorhyme: ஒற்றை இயைபு)

காலைத் தென்றல் காற்றலை யோடும்
சோலைக் கொடிகள் சொகுசாய் ஆடும்
மரமும் செடியும் மலரைச் சூடும்
சுரும்பர் அவற்றைச் சுற்றியே ஓடும்
கொழுமரம் பின்னும் கொடிகள் கூடும்
கொழுமரக் கிளையமர் குயில்கள் பாடும்
குருகின் நடையில் குஞ்சுகள் ஓடும்
குருகின் இரையைக் குஞ்சுகள் நாடும்
மாமரக் கிளைகள் வானைத் தேடும்
மாவிழு நிழலை மணியொளி யூடும் ... 10 ... [மணி = சூரியன்]
அலவும் உள்ளம் அமைதியை நாடும்
மலரும் பூக்களின் வண்ணம் நேடும் ... [நேடும் = விரும்பும்]
நழுவும் காலம் நன்றென ஓடும்
விழுமனம் அன்றைய வேலையை நாடும்.

--ரமணி, 28/12/2014

*****
 
மிக அருமையான இழை, நண்பரே!
பாராட்டுக்கள். :clap2:
 
============================================================
04. Cinquain ஐம்பொருள் கட்டு
============================================================
ஐந்து விஷயங்களை ஐந்து வரிகளில் கட்டும் (ஹைக்கூவை ஒத்த) ஒரு கவிதை வடிவம்.
அந்த வரிகள் இவ்விதம் அமையவேண்டும்.

முதல் வரி: உரிப்பொருள் (ஒரு சொல்)
இரண்டாம் வரி: வருணனை (இரு சொற்கள்)
மூன்றாம் வரி: இயக்கம் (மூன்று சொற்கள்)
நான்காம் வரி: தாக்கம் (நான்கு சொற்களில் உரிப்பொருள் பற்றிய கவிஞன் உணர்வு)
ஐந்தாம் வரி: முடிவு (ஒரு சொல்)

ஆங்கிலக் கவிதை இலக்கியத்தில் இவ்வைந்து வரிகள் சொற்களாகவோ (1-5 சொற்கள்), அல்லது
அசைகளாகவோ (2-4-6-8-2அசைகள்) எழுதப் படுவன.

English Examples: word-based:

Dinosaurs
Lived once,
Long ago, but
Only dust and dreams
Remain

Syllable-based:

Snow
Lovely, white
Falling, dancing, drifting
Covering everything it touches
Blanket

தமிழில் பொதுவாக சொற்கள் அமைப்பில் எழுதினால் சொல்ல வந்ததை நன்றாகச் சொல்லலாம்.

உதாரணங்கள்
குழந்தை
தொட்டில் உயிர்
கைகால் ஆட்டும் விழிக்கும்
பூச்சுமை களிப்பு தெய்வீகம் பாடு
என்பின்

காலம்
கடிகாரம் நாட்காட்டி
நழுவும் நிற்கும் விரையும்
பேராசை எதிர்பார்ப்பு பயம் விரக்தி
காலன்

தெய்வம்
உருவ அருவாற்றல்
படைத்தல் காத்தல் அழித்தல்
கண்காட்சி வாய்முணுப்பு உள்ளச்சுமை நம்பிக்கை
மனிதன்

--ரமணி, 29/12/2014

*****

மேலை நாட்டில் இந்த Cinquain ’ஐம்பொருள் கட்டு’ உத்தியை வைத்து பள்ளிக் குழந்தைகளைச் சின்னஞ்சிறு
சித்திர வருணனை உணர்வுக் கவிதைகள் எழுதப் பழக்குகின்றனர். அவ்வாறு குழந்தைகள் எழுதியவை சில:

Watermelon
Juicy, sweet
Dripping, slurping, smacking
So messy to eat
Yummy

Ice cream.
Cold and yummy.
I love its sweet richness
as it finds its way into my
tummy

My room
is such a mess.
Toys all over the place.
Mom says, 'Clean up!' But I like it
like this.

நம் குழந்தைகளையும் வீட்டில் எளிய தமிழில் இவ்வாறு எழுதப் பழக்கலாம்.

யானை
பேருடல் துதிக்கை
தலையாட்டும் தின்னும் பிளிறும்
அழகு ஆவல் பிரமிப்பு பயம்
பிள்ளையார்

பாயசம்
வெல்லம் முந்திரி
வழியும் சொட்டும் தித்திக்கும்
சூடு வாசனை மகிழ்ச்சி கசகச
அம்மா!

--ரமணி, 30/12/2014

*****
 
============================================================
05. Clerihew: வாழ்நகை
============================================================
பிரபல புனைகதை எழுத்தாளராகவும் நகைச்சுவையாளராகவும் இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் விளங்கிய
Edmund Clerihew Bentley என்ற ஆங்கிலேயர் முதலில் புனைந்த நகைச்சுவைக் கவிதை வடிவம் Clerihew.

ஒருவர் அல்லது ஓர் உரிப்பொருள் பற்றி முற்றிலும் எதிர்பாராத கோணத்தில் நகைச்சுவை ஒலிக்க எழுதப்படும்
இந்த நாலுவரி வடிவத்தைத் தமிழில் வாழ்நகை எனலாம். இந்த வடிவின் தேவைகள்:

1. முதல் வரியில் உரிப்பொருள் சுட்டப்பட வேண்டும்..

2. நான்கு வரிகளின் இயைபுத் திட்டம் AA BB.
இயைபுகள் பொதுவாக வலுவில் அமைவதாக இருக்கும்.

3. ஒவ்வொரு வரியிலும் எத்தனை வேண்டுமாயினும், எவ்வகையிலும் (ஓரசைச் சீர் உட்பட) இருக்கலாம்.

4. தளை, தொடைக் கட்டில்லை; இறுதியில் வரும் இயைபே முக்கியம்.

5. பிரபல மனிதர்கள் அல்லது உரிபொருட்களை நகைச்சுவையாகச் சீண்டுவதே இந்த வடிவின் நோக்கம்.

Some Clerihew Examples

Sir Christopher Wren
Said, "I am going to dine with some men.
If anyone calls
Say I am designing St. Paul's."

John Stuart Mill,
By a mighty effort of will,
Overcame his natural bonhomie
And wrote Principles of Political Economy.

The Art of Biography
Is different from Geography.
Geography is about Maps,
But Biography is about Chaps.

தமிழில் Clerihew: வாழ்நகை உதாரணங்கள்:

நடிகை அம்சவல்லி
வாயெல்லாம் பல்லி
நடிக்கச் சென்ற கார் வாடகை
கிடைத்த வேடம் தாடகை!

நாயர் கடை ராயர் கடை
சூடான தேநீர் இட்லி வடை
பரபர விற்பனையா? காரணம் நீர்!
ஆம், நீரையா நீர்!

(ஓர் சமஸ்க்ருத நகைச்சுவைச் செய்யுள் தமிழில்)

உடையே உயர்வென்று சும்மாவா சொல்வது?
கடைந்த பாற்கடல் தந்த செல்வமெது?
அரிசனப் பட்டணிந்த அரிக்கோர் நாரி
அரையில் கோவணத்தான் அரனுக்கோ காரி!

--ரமணி, 10/01/2015

*****
 
சமஸ்கிருத நகைச்சுவை

வணங்குவனே மருத்துவரே!
இயமனின் தம்பியாக உம்மை நெஞ்சில் இருத்துவனே!
உயிரைக் கொள்வது இயமனின் குணம்
நீர் கொள்வதோ உயிருடன் பணம்!

அம்புயம் பிரமனும் பாற்கடல் அரியும்
வெண்பனி அரனும் உறங்குதல் தெரியும்
மஞ்சம் துஞ்சாதவர் அஞ்சுவதேன் ஆச்சி?
காரணம் மூட்டைப் பூச்சி!

வறுமையே!
உன்னால் எனக்கோர் அதிசய சக்தியுறும் பெருமையே!
உலகில்நான் காண்பதென எல்லாரும்
உலகில் என்னைக் காண்பதில்லை யாரும்!

கிழி துணியை! குடத்தை உடை!
கழுதைமேல் செல்வாய் நடை!
ஏடா கூடமாக ஏதோ செய்து
நீடுலகில் புகழை எய்து!

--ரமணி, 11/01/2015

*****
 
06. Couplet இயைபுக்-குறள்-வெண்செந்துறை

ஆங்கிலக் கவிதை யாப்பிலக்கணத்தில் Couplet என்பது:

A pair of lines of metre in poetry.
Couplets usually comprise two lines that rhyme and have the same metre.
Couples can be closed, where the meaning stops with a grammatical pause at the end of each line;
or run-on (or open), where the meaning of the first line continues to the second.

இங்ஙனம், Couplet என்பது நம் தமிழ் யாப்பிலக்கணத்தில் குறள் வெண்பாவின் இனமாகிய
குறள் வெண்செந்துறையே அன்றி வேறல்ல. குறள் வெண்செந்துறையில் அளவொத்த
இரண்டு அடிகள் எவ்வகைத் தளையும் சீரும் பெற்றுப் பொருள் முடிவுறும் ஓர் பாவினம்.
(அளவொத்த என்பது இரண்டு அடிகளிலும் சீர் எண்ணிக்கை ஒன்றுபோல் அமைதலாகும்).

ஆங்கிலக் Couplet-ஐத் வடிவில் தமிழில் எழுதும் போது இரண்டு அடிகளும் ஒரே இயைபைப் பெறுதல் வேண்டும்.
எனவே, Couplet வடிவைத் தமிழில் ’இயைபுக்-குறள்-வெண்செந்துறை’ என்போம்.

*****

பயன்பாடு

பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலக் கவிஞர் Alexander Pope, couplet வடிவினைத் தம்
கவிதைகளில் பெரிதும் பயன்படுத்தினார். சில உதாரணங்கள்:

True wit is nature to advantage dress'd;
What oft was thought but ne'er so well expressed.

Nature and Nature's laws lay hid in night;
God said, "Let Newton be!" and all was light.

Good-Nature and Good-Sense must ever join;
To err is Humane; to Forgive, Divine.

Nay, fly to Altars; there they'll talk you dead;
For Fools rush in where Angels fear to tread.

Closed Couplet வடிவைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் Epigram எனப்படும்
அங்கதப் பொன்மொழிகள் எழுதினர்.

What is an Epigram? a dwarfish whole,
Its body brevity, and wit its soul.
--Samuel Taylor Coleridge ("Epigram", 1809)

Here lies my wife: here let her lie!
Now she's at rest -- and so am I.
--John Dryden

I'm tired of Love: I'm still more tired of Rhyme.
But Money gives me pleasure all the time.
--Hilaire Belloc

ஆங்கிலக் Couplet-ஆன இயைபுக்-குறள்-வெண்செந்துறையில் நாம் இதுபோன்ற Epigrams--அங்கதப் பொன்மொழிகள் அமைக்கலாம்.

ஞானம்

கானம் அதிர்வது பூமி
வானம் மோனச் சாமி!

சிவமென வெண்ணொளிக் கதிராம்
சிவையென வெம்மைக் கதிராம்.

மூச்சின் இயக்கம் மேனி
மூச்சை இயக்குவன் ஞானி.

கண்ணில் வெறுமனே காட்சி
கண்பின் உறுமே மாட்சி!

இரையைத் தேடுதல் குன்ற
இறையைத் தேடுதல் ஒன்றும்.

தன்னில் தனதைப் பிரிக்க
மின்னும் ஞானம் புரிக்கும்.

--ரமணி, 12/01/2015

*****

அல்லது இது போன்று ஓர் உரிப்பொருள் பற்றிப் பல இணையடிகளில் ஓடும் கவிதையாக அமைக்கலாம்.

காதல்

முன்பின் தெரியா முகத்தில் எழுந்தது
அன்பின் விதையாய் அகத்தில் விழுந்தது.

ஒருவிதை யிருவரின் உள்ளம் விளைக்கும்
கருவது எழுந்தே கனவில் திளைக்கும்.

கனவின் கிளர்ச்சி கண்களில் தெரியும்
தினவுறும் மேனி தீண்டிச் சொரியும்.

இன்னும் இன்னும் என்றே விழுங்கும்
அன்பின் மொழியில் அறிவது மழுங்கும்.

தன்னை இழக்கத் தணலுறும் வேள்வியில்
அன்னை தந்தை அருளது கேள்வியில்.

கனவாய் நனவாய்க் காதல் ஆமோ
மனமுறிந் தேதான் மாயமாய்ப் போமோ?

--ரமணி, 12/01/2015

*****

மேலுள்ளவை முறையே மூன்று, நான்கு சீர்களில் அமைந்த இணையடிகள்.
இவற்றை ஐந்து அல்லது அதற்கு மேற்படும் சீரடிகளாகவும் எழுதலாம்.
சீர்கள் அதிகம் வரும் போது ஒலிநயத்துக்கு இடையே பொழிப்பு மோனைகள் சிறக்கும்.

*****
 
=========================
07. Sestina: பின்னல்
=========================
செஸ்டினா எனப்படும் ஆங்கிலப் பாவடிவத்திற்குத் தமிழில் ’பின்னல்’ என்று அழகாகப் பெயரிட்டு,
கவிமாமணி இலந்தை இராமசாமி யவர்கள் இந்த வடிவைத் தமிழில் நிறுவுவதற்காக இலக்கணத்தைத்
தம் சந்தவசந்தம் கூகுள் குழுமத்தில் கொடுத்துள்ளார்.

மேல்விவரம்:
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/6DX9G1nt7aA

செஸ்டினா என்னும் ஆங்கிலப் பாவடிவம் மொத்தம் 39 அடிகள் கொண்டு இலங்குவது.
இதன் இலக்கணம் பின்வருமாறு:

1. ஆறடி கொண்ட ஆறு செய்யுட்களும், மூன்றடி கொண்ட ஈற்றுச் செய்யுளுமாக
மொத்தம் 39 அடிகள். ஈற்றுச் செய்யுளுக்கு envoi--முடிப்பு என்று பெயர்.

2. ஆங்கில மரபில் முதற் செய்யுளின் அடியீற்றில் வரும் ஆறு இயைபுகளும் மற்ற
செய்யுட்களில் ஒரு பின்னலாகக் கீழ்வரும் முறையில் அமையும்.

செய்யுள் 1: 123456
செய்யுள் 2: 615243
செய்யுள் 3: 364125
செய்யுள் 4: 532614
செய்யுள் 5: 451362
செய்யுள் 6: 246531
செய்யுள் 7: 12-34-56 (envoi) (முடிப்பு: மூன்று அடிகள், அடிகளுக்குள் இயைபு)

இப்படிப் பின்னல் 123456 என்று தொடங்கி மீண்டும் அதே நிரலில்
ஈற்றடியில் முடிவது காண்க.

பின்னலைத் தமிழ் மரபில் புனையும் போது:

1. அடிகள் எல்லாம் அளவொத்து, மூன்று முதல் பல சீர்கள் வருமாறு அமைக்கலாம்.
அடிகளின் இயல்பைப் பொருத்து பாடலை இவ்வாறு பெயரிடலாம்:

வஞ்சி விருத்தப் பின்னல்: சீர்கள் 3
அகவற் பின்னல்: சீர்கள் 4
கலித்துறைப் பின்னல்: சீர்கள் 5.
ஆசிரிய விருத்தப் பின்னல்: சீர்கள் 6-ம் அதற்கு மேலும்

2. அடிகளின் ஈற்றில் வரும் இயைபுகளுக்கு பதில் அடிகளின் முதலில் ஒரே
எதுகையாக வந்து இவை மற்ற அடிகளில் பின்னலாக வருமாறு அமைக்கலாம்.

3. ஈற்றடியின் இறுதித் சீர் ஏகாரத்தில் முடியும்.

செஸ்டினாவின் ஆங்கில உதாரணங்களுக்குக் கீழ்க்கண்ட சுட்டியை பார்க்கவும்:
Sestina - Wikipedia, the free encyclopedia

பின்னலின் தமிழ் உதாரணங்களுக்கு இந்த சுட்டி:
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/6DX9G1nt7aA

இனி, வஞ்சி விருத்தப் பின்னலாக அடியேன் புனைந்த பாடல் கீழே:

கண்ணன் வண்ணம்
(வஞ்சி விருத்தப் பின்னல்)

மூலச் சொற்கள்
அரித்தான், சரித்தான், வரித்தான், பிரித்தான், விரித்தான், சிரித்தான்

1. குழந்தை

வெண்ணை கேட்டே அரித்தான்
வெண்ணைக் கலயம் சரித்தான்
வெண்ணையை வாயில் வரித்தான் ... [வரித்தான் = பூசினான்]
வெண்ணைக் கையைப் பிரித்தான்
வன்னம் காட்டியே விரித்தான்
சின்னக் கண்ணன் சிரித்தான்! ... 123456

2. கனவு நாயகன்

ராதை அருகில் சிரித்தான்
மாதவள் நெஞ்சினை அரித்தான்
வண்ணக் கனவுகள் விரித்தான்
கண்ணில் பிரிந்தே சரித்தான் ... [சரித்தான் = வசித்தான்]
நனவில் கனவைப் பிரித்தான்
மனதில் அவளை வரித்தான்! ... 615243

3. சிறுவன்

கோகுலந் தன்னை வரித்தான்
ஆகுலம் நீங்கச் சிரித்தான் ... [ஆகுலம் = மனக்கலக்கம்]
உரியினில் வெண்ணையைப் பிரித்தான்
திருடியே நெஞ்சினை அரித்தான் ... [அரித்தான் = கவர்ந்தான்]
கவலை யாவும் சரித்தான்
உவந்தோர்க் குள்ளம் விரித்தான்! ... 364125

4. சாரதி

அருநெறி இஃதென விரித்தான்
அருச்சுனன் தோழமை வரித்தான்
அருச்சுனன் தேரைச் சரித்தான்
வருவதைக் கண்டவன் சிரித்தான்
கன்னன் புண்ணியம் அரித்தான்
பின்னர் அவனுயிர் பிரித்தான்! ... 532614

5. உலகவேந்தன்

கனியும் காயும் பிரித்தான்
மனிதர் எல்லை விரித்தான்
இருளின் மயலாய் அரித்தான்
மரணம் இயல்பென வரித்தான் ... [வரித்தான் = எழுதினான்]
இயற்கை அழகில் சிரித்தான்
செயற்கை ஆளுமை சரித்தான்! ... 451362

6. பரம்பொருள்

வானை பூமியில் சரித்தான்
ஞானம் மாயை பிரித்தான்
அறிந்தேன் என்றால் சிரித்தான்
அறிவது வேண்டில் விரித்தான்
தத்துவம் தானென வரித்தான்
பத்தியில் மனதை அரித்தான்! ... 246531

7. ஆசான்

மனதை அரித்தான் மமதை சரித்தான் ... 12
தனிமை வரித்தான் தானைப் பிரித்தான் ... 34
முனைவது விரித்தான் மோனமாய்ச் சிரித்தானே! ... 56

--ரமணி, 31/01/2015, கலி.17/10/5115

*****
 
08. Villanelle/villanesque): மீள்வரிப் பள்ளு

Ref: Villanelle - Wikipedia, the free encyclopedia

ஆங்கில யாப்பில் இந்த Villanelle பாவடிவம் எளியோர் பாடும்
பாட்டாகத் தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரபலமாகி,
இன்றும் நடைமுறையில் இருக்கும் ஒரு பாவடிவமாகும்.

இதன் வடிவமைப்பு இவ்வாறு:

01. முதலில் மூவடிச் செய்யுட்கள் ஐந்து.

02. இறுதியாக ஒரு நாலடிச் செய்யுள்.
இங்ஙனம் மொத்தம் 19 அடிகள்.

03. முதற் செய்யுளின் ஒன்றாம் மூன்றாம் அடிகள் பல்லவியாக
மாறிமாறி மற்ற செய்யுட்களின் ஈற்றடியாக வரும்.

04. முதற் செய்யுளின் இயைபுகள் A1bA2..
அதாவது, அடிகள் ஒன்றும் மூன்றும் ஓரியைபும் (A)
நடுவில் உள்ள இரண்டாம் அடி வேறு இயைபும் (b).

05. A1 அடியாவது செய்யுட்கள் இரண்டிலும் நான்கிலும் பல்லவி.
இதேபோல், A2 செய்யுட்கள் மூன்றிலும் ஐந்திலும் பல்லவி.
இந்தப் பல்லவிகள் அவை வரும் செய்யுளின் ஈற்றடியாக இருக்கும்.

06. இரண்டு முதல் ஐந்து வரையுள்ள மூவடிச் செய்யுட்களின்
இயைபுகள் abA1 அல்லது abA2 என்று அமையும். அதாவது,
முதலடி இயைபு பல்லவி அடியினுடையது போலவும் (a),
இரண்டாமடி இயைபு முதற்செய்யுளில் நடுவடி இயைபு
போலவும் (b) அமையும்.

07. இறுதியாக அமையும் நாலடிச் செய்யுளின் இயைபுகள் abA1A2.
அதாவது, பல்லவிகள் வரிசையாக இறுதி இரண்டடிகளிலும்,
முதலடி இயைபு பல்லவியில் வருவது போன்றும் (a), இரண்டாமடி இயைபு
முன்வந்த செய்யுட்களின் நடுவடியில் வருவது போலவும் (b) அமையும்.

08. இப்படியாக இந்த வடிவத்தின் மொத்தம் 19 அடிகளின்
இயைபுத் திட்டம் இது: A1bA2 abA1 abA2 abA1 abA2 abA1A2.

09. இதன் ஆங்கில யாப்பு பொதுவாக ஐந்துசீர் அடிகளாக,
அதுவும் iambic pentameter (-/ x 5)-ஆக இருக்கும்.
தமிழில் நாம் நாற்சீர் அளவடிகளைப் பயன்படுத்தலாம்.

10. தமிழ் மரபில் எழுதும் போது:
எப்படியும் பல்லவிகள் அமைவதால், இயைபுகளுக்கு பதில்
அடியெதுகைகளையும் பொழிப்பு மோனைகளையும் பயன்படுத்தலாம்.

அல்லது எதுகை-மோனையின்றி இயைபுக்கு மட்டும் முக்கியத்துவம்
கொடுத்து எழுதலாம்.

அல்லது எதுகை-மோனை-இயைபுகளைக் கலந்தும் எழுதலாம்.

ஒரு Villanelle வடிவ ஆங்கிலப் பாடல் கீழே:

Do not go gentle into that good night
Dylan Thomas

Do not go gentle into that good night, Refrain 1 (A1)
Old age should burn and rave at close of day; Line 2 (b)
Rage, rage against the dying of the light. Refrain 2 (A2)

Though wise men at their end know dark is right, Line 4 (a)
Because their words had forked no lightning they Line 5 (b)
Do not go gentle into that good night. Refrain 1 (A1)

Good men, the last wave by, crying how bright Line 7 (a)
Their frail deeds might have danced in a green bay, Line 8 (b)
Rage, rage against the dying of the light. Refrain 2 (A2)

Wild men who caught and sang the sun in flight, Line 10 (a)
And learn, too late, they grieved it on its way, Line 11 (b)
Do not go gentle into that good night. Refrain 1 (A1)

Grave men, near death, who see with blinding sight Line 13 (a)
Blind eyes could blaze like meteors and be gay, Line 14 (b)
Rage, rage against the dying of the light. Refrain 2 (A2)

And you, my father, there on the sad height, Line 16 (a)
Curse, bless, me now with your fierce tears, I pray. Line 17 (b)
Do not go gentle into that good night. Refrain 1 (A1)
Rage, rage against the dying of the light. Refrain 2 (A2)


தமிழ் மரபில் நான் புனைந்த Villanelle: ’மீள்வரிப் பள்ளு’ உதாரணம் கீழே

காதலும் போரும்
(அகவற் றாழிசை, அகவற்பா வடிவில் மீள்வரிப் பள்ளு)

காதல் போரில் யாவும் முறையே
மோதலும் உண்டு முத்தமும் உண்டு
ஏதும் அறியா ஏழ்மை ஏனோ?

சேதம் கொள்ளும் சிந்தை சிறையே
போதின் உள்ளே புகுமே வண்டு
காதல் போரில் யாவும் முறையே.

போதம் என்பது பொய்மை உறையே
காதில் சொல்லும் சொல்கற் கண்டு
ஏதும் அறியா ஏழ்மை ஏனோ?

வாதம் செய்தே வெல்வதும் நிறையே
ஏதும் செய்யும் துணிவும் உண்டு
காதல் போரில் யாவும் முறையே.

சாதல் முடிவெனில் காதல் குறையே
ஓதல் இன்றியே ஒழுக்கம் உண்டு
ஏதும் அறியா ஏழ்மை ஏனோ?

வீதியில் கண்டால் வீட்டில் அறையே!
பேதைமை உண்டு பேடிசம் உண்டு!
காதல் போரில் யாவும் முறையே!
ஏதும் அறியா ஏழ்மை ஏனோ?

[பேடிசம் = மாய்மாலம், பாசாங்கு]

--ரமணி, 10/02/2015

*****

அறிஞர்களும் அன்பர்களும் இந்த ’மீள்வரிப் பள்ளு’ வடிவத்தில் பல்வேறு உரிப்பொருள்களிலும்
இசையுடன் கூடவும் பாக்கள் புனைந்து பார்க்கலாமே?

*** *** ***
 
09. Balliol rhyme: நகைத்துளி
Ref: Balliol rhyme - Wikipedia, the free encyclopedia

1875-ஆம் வருடம் Balliol College, Oxford-இல் அறிமுகமான
இந்த ஆங்கில பாவடிவம் ஒருவரைப் பற்றி நாலே வரிகளில்
நகைச்சுவையாக எழுதப்படும் பாடல்.

தமிழ் மரபில் இதன் வடிவமைப்பு இவ்வாறு இருக்கலாம்:

01. நான்கு அடிகள், AABB இயைபில்.
ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள்.

02. முதலிரு அடிகள் இணையில் ஒருவரது பெயர் வரும்.

03. மூன்று-நான்கு அடிகள் இணையில் அவரது இயல்பைக்
குறைகூறும் விதமாக ஒரு நகைச்சுவைக் குறிப்பு இருக்கும்.

04. இவ்வகைப் பாக்கள் பொதுவாக ஒருவர் தன்னைப் பற்றி
ஹாஸ்யமாகச் சொல்லுவதுபோல் அமையும். படர்க்கையில் குறித்தும்
எழுதலாம். பாடலில் ஒருவரைப் பற்றிய நையாண்டி இருப்பது முக்கியம்.

05. சீர்களிடையே தளைக் கட்டுப்பாடு இல்லை.
இரண்டடிக்கு ஓரெதுகை வருவது முக்கியம்.
சீர்கள் ஒன்றிலும் மூன்றிலும் வரும் பொழிப்பு மோனை மேலும் மெருகூட்டும்.

Examples in English

My name is George Nathaniel Curzon,
I am a most superior person.
My cheeks are pink, my hair is sleek,
I dine at Blenheim twice a week.

My name is Michael Andrew Gove
At private school I found I throve
And so all children must agree
To learn Latin by rote like me.

*****

Clerihew: வாழ்நகை என்று முன்னர் நாம் கண்ட யாப்பு வடிவத்திற்கும்
Balliol rhyme: நகைத்துளி-க்கும் உள்ள வேறுபாடு என்னவெனில்

உரிப்பொருள் எதுவாகவும் இருந்து முற்றிலும் எதிர்பாராத கோணத்தில்
நகைச்சுவை ஒலிக்க அளவொத்த அடிகள் நான்கில் எழுதப் படுவது,
Clerihew: வாழ்நகை.

ஒருவர் தன்னைப் பற்றியோ அல்லது கவிஞர் ஒருவரைப் பற்றியோ
நகைச்சுவையாக எழுதப்படும் நாற்சீர் அடிகள் நான்கில் அமைவது,
Balliol rhyme: நகைத்துளி

*****

தமிழில் உதாரணங்களாக நான் புனைந்தது கீழே.

Balliol rhyme: நகைத்துளி: தமிழில்
(ரமணி)


எளிதில் காண்பதல்ல என்பெயர், ஏடகம்
களித்தே நான்மேடையில் காண்பது நாடகம்
அருமை நண்பர்கள் அழைக்கும்பேர் ஏடாகூடம்
ஒருமையில் நானுமென் உபயமாக வாடாபோடா!

*****

ஏடு சொல்லும் என்பெயர் அந்தோணி
வீடு என்றுபோய் வீழத்திருத் தந்தோணி
சங்கத் தமிழ்ப்பாக்கள் சகலமும் பிடிக்கும்
சிங்கப் பல்லவை செப்புதல் தடுக்கும்!

*****

அழகிய தமிழ்மகள் அமரா வதியாள்
பழகியும் ஆடலிற் பாதம் பதியாள்
அடவு முத்திரை அபிநயம் நவரசம்
நடையில் குறையும் நளினமோர் அவசரம்!

*****

கோலுடன் வருவாள் கோமுப் பாட்டி
ராமு-அவள் பையனுக்கு ராதா பெண்டாட்டி!
வாயைக் கொடுத்து வம்பை வாங்காது
பாயில் பாட்டி படுத்துத் தூங்காது!

*****

என்றும் இளமை என்றன் ரகசியம்
இன்றே அறிவீர் இதுமிக அவசியம்
ஒருவன் எனக்கு ஒருத்தி இல்லை
வருமுன் காத்தேன் வந்திலை தொல்லை!

*****

அரசியல் வாதி அய்யா சாமி
பரிசிலாய்க் கேட்பது ’பையைக் காமி’!
வாயைத் திறந்தால் வசைமாரி பொழிந்தார்
நோயில் படுத்து நொந்தே அழிந்தார்.

*****

கதையெழுத் தாளர்நான் காசி நாதன்
எதையும் கதையாய் எழுதும் தூதன்
கட்டைப் பேனாவில் கற்பனை வந்தது
தட்டும் விசைகளில் தயங்கி நின்றது.

--ரமணி, 27-28/02/2015

*****
 
10. Sonnet: சானட்

பதினான்கு அடிகளில் அமையும் சின்னப் பாடலான சானட் ஆங்கில யாப்பின்
முக்கிய வகைகளில் ஒன்றாக அது தோன்றிய நாள்தொட்டு விளங்கி வருகிறது.
இத்தாலிய இலக்கியத்தில் 12-13-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றி Petrarch என்ற
கவிஞரால் பிரபலமான இந்த சானட் வடிவத்தை ஆங்கிலத்தில் Sir Thomas Wyatt
என்பவர் 15-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அறிமுகப் படுத்தினார். ஆங்கில
இலக்கியத்தில் இன்று வரை, புகழ் பெற்ற கவிஞர்களில் பெரும்பாலோர் சானட்
வடிவத்தில் கவிதைகள் புனைந்துள்ளனர்.

இத்தாலிய சானட் வடிவத்தைக் கொஞ்சம் மாற்றி William Shakespeare
ஆங்கிலத்தில் தம் புகழ்பெற்ற 154 சானட்களை எழுதினார். இப்படியாக, சானட்
ஆங்கிலத்தில் இரண்டு வடிவங்களில் எழுதப் படுகிறது: Italian or Petrarchan format,
and English or Shakespearean format.

சானட் யாப்பு வடிவின் புகழுக்கு முக்கிய காரணம், அந்த வடிவத்தில் கவிதை
புனைவதில் உள்ள சவால்தான். பதினாலு வரிகளில் கவிஞன் தன் கருத்தை,
உள்ளுணர்வை, இயற்கை சார்ந்த உருவகங்களோடு வாசகரிடம் கொண்டு
சேர்க்கவேண்டும். சானட் கவிதைக் கருத்தாகக் காதல், போர், மரணத்துவம்,
மாற்றம், துன்பம் போன்றவை அமையலாம். இந்த உரிப் பொருள்களில் கவிஞன்
பொதுவாக ஒரு தனிமை உணர்வு எழுமாறு கவிதைகள் புனைவான். (இதனால்
தான் தமிழில் பாரதியார் தமிழில் தான் எழுதிய சானட் கவிதைக்குத்
’தனிமை இரக்கம்’ என்று தலைப்பிட்டார் போலும்.)

முதலில் ஆங்கில சானட் வகைகளின் இலக்கணத்தைப் பார்ப்போம்.
பின்னர் இவற்றைத் தமிழ் மரபில் அறிமுகப்படுத்தும் முறைகளை ஆராய்வோம்.

இரண்டு வடிவத்திற்கும் பொதுவில் உள்ள கூறுகள் இவை:

1. ஐந்து (லகு-குரு) சீர் கொண்ட அடிகள், அதாவது iambic pentameter

2. முதல் எட்டு அடிகளில் கவிதையின் மையக் கருத்து இயற்கை உருவகங்களுடனும்
மற்ற கவிதை அணிகளுடனும் அறிமுகப் படுத்தப்பட்டு விவரிக்கப்படும்.

3. ஒன்பதாம் அடியில் volta (turn) என்னும் திருப்பம் இருக்கும்.
இந்தத் திருப்பம் கவிதைக் கருத்திலோ, செய்தியிலோ, காட்சியிலோ,
ஒலியிலோ அல்லது வேறொரு கூறிலோ இருக்கலாம்.

4. முடிவுரையாக ஒரு செய்தி வாசகனுக்கு அறிவுறுத்தப்படும்.
அது பொதுவாக முதற் சொன்ன உரிப்பொருள்/உணர்வின்
இப்போதைய நிலையெனக் கவிஞன் கருதுவதாக இருக்கும்.

Italian or Petrarchan sonnet

1. Octave எனப்படும் முதல் எட்டு அடிகள் கவிதைக் கருவை
விதைத்து வளர்க்கும், .

2. Sestet எனப்படும் இறுதி ஆறு அடிகள் மேற்சொன்ன
திருப்பத்தை ஏற்படுத்திக் கவிதையை முடித்துவைக்கும்.

3. Rhyme scheme for ocatave: abba, abba
4. Rhyme scheme for the sestet: cde, cde or cdc, dcd

English/Shakespearean/Elizebethan sonnet

1. Quartrains எனப்படும் நான்கு அடிகளை உடைய பத்திகள்
மூன்றுடன் இறுதியாக ஒரு rhyming couplet என்னும் இயைபுடன்
கூடிய இரண்டு அடிகள்.

2. Quartrain 1 மையக் கருத்தைத் தொடங்கிவைக்கும்.
Quartrain 2 அதனை விரிக்கும்.
Quartrain 3 -இன் முதல்வரியில் முன் சொன்னதற்கு
மாறாக ஒரு திருப்பம் தொடங்கிச் சொல்லப்படும்.
Final rhyming couplet முடிவுரையாக அமையும்.

3. Rhyme scheme: abab, cdcd, efef, gg

ஆங்கில சானட் உதாரணங்கள்

ஆங்கில இலக்கியத்திலுள்ள இரண்டு சானட்களைக் கொஞ்சம் ஆராய்வோம்.
முதலில், ஸ்டெல்லா என்ற தன் (உருவகக்) காதலிக்காக
ஒரு கவிதை எழுத முயல்வதில் தாம் படும் பாட்டை விவரிக்கும்
Sir Philip Sidney-யின் இத்தாலிய வகை சானட்.

இந்தப் பாடலின் ஒன்பதாம் அடியில் வரும் திருப்பத்தையும்
அதன் பின் முடிவாக வரும் இறுதி அடியையும் நோக்குக.

Sir Philip Sidney: Italian sonnet form
"Loving in truth..."

Loving in truth, and fain in verse my love to show,
That the dear she might take some pleasure of my pain,
Pleasure might cause her read, reading might make her know,
Knowledge might pity win, and pity grace obtain,
I sought fit words to paint the blackest face of woe:
Studying inventions fine, her wits to entertain,
Oft turning others' leaves, to see if thence would flow
Some fresh and fruitful showers upon my sunburned brain.

But words came halting forth, wanting Invention's stay;
Invention, Nature's child, fled stepdame Study's blows;
And others' feet still seemed but strangers in my way.
Thus, great with child to speak, and helpless in my throes,
Biting my truant pen, beating myself for spite:
"Fool," said my Muse to me, "look in thy heart, and write."

ரத்தினச் சுருக்கமாகப் பாடல் உரைநடை வடிவில் கீழே:
Sidney - Astrophil and Stella - Sonnets 1-27

Loving, and wishing to show my love in verse,
So that Stella might find pleasure in my pain,
So that pleasure might make her read, and reading make her know me,
And knowledge might win pity for me, and pity might obtain grace,
I looked for fitting words to depict the darkest face of sadness,
Studying clever creations in order to entertain her mind,
Often turning others’ pages to see if, from them,
Fresh and fruitful ideas would flow into my brain.

But words came out lamely, lacking the support of Imagination:
Imagination, nature’s child, fled the blows of Study, her stepmother:
And the writings (‘feet’) of others seemed only alien things in the way.
So while pregnant with the desire to speak, helpless with the birth pangs,
Biting at my pen which disobeyed me, beating myself in anger,
My Muse said to me ‘Fool, look in your heart and write.

*****

கவிஞன் தன்னுள் பார்த்தே எழுதினால்தான் அது கவிதையாகும்
என்று ஸிட்னி சொன்னாரா? கீழ்வரும் பாடலில் ஷேக்ஸ்பியர்
தாம் எழுதும் கவிதை என்றும் நிற்கும் அதை ’நீவிர்’
என்றும் படிப்பீர்கள் என்று (செருக்குடன்?) சொல்கிறார்.

William Shakespeare: English/Shakespearean sonnet form
Shall I compare thee to a summer’s day?

Shall I compare thee to a summer’s day?
Thou art more lovely and more temperate:
Rough winds do shake the darling buds of May,
And summer’s lease hath all too short a date:

Sometime too hot the eye of heaven shines,
And often is his gold complexion dimm’d;
And every fair from fair sometime declines,
By chance, or nature’s changing course untrimm’d;

But thy eternal summer shall not fade,
Nor lose possession of that fair thou ow’st,
Nor shall death brag thou wander’st in his shade,
When in eternal lines to time thou grow’st;

So long as men can breathe, or eyes can see,
So long lives this, and this gives life to thee.

இந்தப் பாடலில் வரும் ’நான்’ என்பவர் பாடல் வரிகளைச் சொல்லும் ஸ்பீக்கர்,
பாடல் வரிகளை எழுதியவர், அதாவது கவிஞர் என்ற இரு நோக்கிலும்,

பாடல் குறிக்கும் ’நீ/நீவிர்’ என்பவர் ஒரு பெண் (கவிஞரின் காதலி?) அல்லது
ஆண் (கவிஞரின் புரவலர்) அல்லது வாசகர்களாகிய நாம் என்ற மூன்று
நோக்கிலும் கவிதையைப் படித்துப் பார்த்தால், புதுப்புது அர்த்தங்கள் தோன்றும்.
அதுதான் ஷேக்ஸ்பியர்.

இந்தப் பாடல் பற்றி ஆராயும் விளக்கத்தை இங்கே காண்க:
Sonnet 18

ஆங்கிலத்திலோ, தமிழிலோ சானட் எழுத முயல்வோர் அவசியம் இந்த இரு
பாடல்களையும் படித்துப் புரிந்துகொண்டு இவற்றை முன்மாதிரியாகக் கொண்டு
எழுதவேண்டும்.

சானட்களுக்கென்றே ஓர் வலைதளம்:
Sonnet Central
Shakespeare's Sonnets
Analysis of Shakespeare's Sonnets and Paraphrase in Modern English

தமிழில் இந்த சானட் வடிவத்தை அமைப்பது பற்றி இனி ஆராய்வோம்.

*****
 
தமிழில் சானட்
முதல் முயற்சிகள்

’பரிதிமாற் கலைஞர்’ என்று அறியப்படும் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார்
அவர்களும் எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை யவர்களும் சேர்ந்து ’ஞானபோதினி’
என்னும் இதழை 1897-ஆம் ஆண்டில் தொடங்கி, அதை 1904 வரை வெளியிட்டனர்.

இந்த இதழில் சாஸ்திரியார் தனிப்பாசுரங்களாக நேரிசை ஆசிரியப்பா வடிவில்
பதினாலடிப் பாடல்களை எழுதி வெளியிட்டுவந்தார். இவை பின்னர் அவரால்
’தனிப்பாசுரத்தொகை’ என்னும் பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டன.

இந்தப் பாசுரங்களைக் கண்ட ஜி.யு.போப் அவர்கள் அவற்றை ஆங்கிலத்தில்
சானட் வடிவில் அமைத்தார். தமிழ்ப் பாசுரங்களும் போப்பின் ஆங்கில அமைப்பும்
1901-ஆம் ஆண்டில் 'TANI-PACURA-TOGAI: A Book of Sonnets in Tamil with English Echoes'
என்னும் தலைப்பில், முன்வந்த புத்தகத்தின் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டன.

இந்தப் புத்தகத்தை இங்கே தரவிறக்கலாம்:
A Book of SONNETS in TAMIL and English by Suriya Narayana Sastri -Rare TAMIL Book

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் ’தனிமை இரக்கம்’ என்ற பெயரில்
தன் மனைவிக்கு எழுதிய பதினாலடிக் கவிதை மதுரை விவேகபாநு இதழில்
1904-ஆம் ஆண்டு வெளிவந்தது.

பாரதியின் பாடலும் சாஸ்திரியாரின் முதற் பாடலும் கீழே:

தனிமை இரக்கம்
(நேரிசை ஆசிரியப்பா)

குயிலனாய்! நின்னொடு குலவியின் கலவி
பயில்வதிற் கழித்த பன்னாள் நினைந்துபின்
இன்றெனக் கிடையே எண்ணில் யோசனைப்படும்
குன்றமும் வனமும் கொழிதிரைப் புனலும்
மேவிடப் புரிந்த விதியையும் நினைத்தால்
பாவியென் நெஞ்சம் பகீரெனல் அரிதோ?
கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா
மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன்
முடம்படு தினங்காள்! முன்னர்யான் அவளுடன்
உடம்பொடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்
வளியெனப் பறந்தநீர் மற்றியான் எனாது
கிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடக்கும்
செயலையென் இயம்புவல் சிவனே!
மயலையிற் றென்றெவர் வகுப்பரங் கவட்கே?

--பாரதியார்

*****

1. கடவுள்
(நேரிசை ஆசிரியப்பா)

எங்கணும் விளங்குறு மிறைவனே! எண்குணந்
தங்கிய வொருபெருந் தலைவனே! ஒப்புயர்
வில்லா தோங்கிய வீசனே! என்றும்
எல்லாந் தானா யிலகிடும் பொருளே!
இன்பமொ டெழிலு மன்புட னருளும்
நண்ணிய நாதனே! புண்ணிய முதலே!
உருவுடை யாயோ? உருவிலி யேயோ?
உருவரு விலாயோ? உடையையோ? உணர்கிலேன்.
என்னண மெளியே னின்னை யண்முகோ?
உன்னுமா றறியேன்; உணருமா றறியேன்.
பண்ணுமா றறியேன்; பாடுமா றறியேன்.
வணங்குமா றறியேன்; வாழ்த்துமா றறியேன்;
இணங்கி மென்னையு மெடுத்துக்
காத்தல் வேண்டும் பூத்துநின் னருளே.

--’பரிதிமாற் கலைஞர்’

1. GOD
(English rendition in sonnet form)

My God! filled with Thy glorious Majesty
Are earth and heaven; Thy loving saints declare
Thine eight-fold attributes. Beyond compare,
Lord of the Universe exalted, Thee

In every creature immanent, I see!
All bliss, all love, all grace, all beauty fair,
Flow forth from Thee, Fount of all virtue rare!
Thy Form,--Thy formless Self--reveal to me!

How may I, faint and frail, approach Thy feet?
How worshipping in lowly homage bow?
Beyond my struggling thought's conception Thou!
How utter Thee? How sing Thy praises meet?

O let Thy grace reveal'd around me shine!
Draw near to take and guard me ever thine!

--G.U.Pope

*****

சானட் வடிவின் தமிழ்ப் பெயர்

தமிழில் சானட் வடிவத்திற்கு உகந்த பெயரென்ன?

பாரதியாரும் சாஸ்திரியாரும் தம் பதினான்கடிக் கவிதையை சானட் உருவில்
எழுதினாலும், அந்த வடிவத்திற்குத் தமிழில் பெயரிடவில்லை.

சானட் என்பததற்குத் தமிழ்ப் பெயராக ’ஈரேழ்வரிப்பா’ என்றொரு பெயரை
இணையத்தில் உள்ள தமிழ் அகராதிகளில் காணலாம்:

English to Tamil Dictionary, A2Z all Words in tamil, Online Tamil Dictionary, English-Tamil dictionaries. sonnet Tamil Meaning, sonneteer Tamil Meaning, sonny Tamil Meaning, sonobuoy Tamil Meaning, sonometer Tamil Meaning, sonorescent Tamil Meaning,
S - sonneteer - definitions and meaning | tamillexicon.com

கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள், சானட்டின் இத்தாலிய, ஆங்கில வடிவம்
இரண்டையும் குறிப்பதாக ’இருநான்கிருமூன்று’ என்னும் பெயரைப் பரிந்துரைக்கிறார்.
’இருபா இருபஃது’ என்பதுபோல் எண்ணிக்கை வைத்துப் பெயர் தரும் வழக்கம்
தமிழில் இருப்பதால், இந்தப் பெயரை அவர் பரிந்துரைக்கிறார்.

சானட் என்னும் ஆங்கிலப் பெயரின் மூலம் sonetto என்னும் இத்தாலியச் சொல்லாகும்.
இந்தச் சொல்லின் பொருள் ’ஒரு சிறிய பாடல்’ என்பதே.
Online Etymology Dictionary

’ஈரேழ்வரிப்பா, இருநான்கிருமூன்று’ போன்ற பெயர்கள் தம்மளவில் சிறப்பாக இருந்தாலும்
அவை சானட் உருவின் பதினான்கு அடிகளைக் குறிப்பதாக உள்ளனவே தவிர, அவற்றில்
சானட் என்னும் பெயரில் உள்ளதுபோல் அது ஒரு சிறிய பாடல் என்ற குறிப்பு இல்லை.

எனவே, sonetto என்னும் இத்தாலியச் சொல்லை ஆங்கிலத்தில் எடுத்தாண்ட போது
அவர்கள் அதை fourteen-line-song போன்ற பெயரில் குறிக்காமல் சானட் என்றே
எடுத்தாண்டதால், நாமும் இந்தப் பெயரை ஓர் திசைச்சொல்லாகக் கருதி, தமிழில்
சானட் என்றே அழைக்கலாம். மற்றவிரு பெயர்களையும் விழைவோர் பயன்படுத்தலாம்
எனக் கொள்வோம்.

*****

தமிழ் மரபில் சானட் அமைப்பு

ஆங்கில மரபு இலக்கணக் கூறுகளாகிய அடியிறுதி இயைபுகளையும், அளவொத்த அடிகளையும்,
தமிழ் மரபின் அடி-தளை-தொடை-வாய்பாடு யாப்பிலக்கணக் கூறுகளையும் உள்ளடக்கியே
தமிழ் சானட் எழுத வேண்டும்.

அங்ஙனம் எழுதும் அடிகளில் ஆங்கில மரபில் உள்ள கவிதை மையக்கரு அறிமுகம்,
விரிப்பு, திருப்பம், இயற்கை சார்ந்த உருவகம் போன்ற அணிகள் முதலிய இலக்கியக்
கூறுகளைத் தவறாமல் குறிப்பிட்ட இடங்களில் அமைக்கவேண்டும்.

தமிழ் சானட் எழுதப் பயன்படும் மரபுப் பா/பாவின வகைகள்
(ஏதேனும் விட்டுப்போயிருந்தால் அன்பர்கள் சேர்க்கவும்)

இரண்டடிச் செய்யுள்
குறள் வெண்செந்துறை (அளவொத்த அடிகள்)

மூன்றடிச் செய்யுள்
நிலைமண்டில ஆசிரியப்பா (அளவடி)
ஆசிரியத் தாழிசை (அளவொத்த அடிகள்)

நான்கடிச் செய்யுள்
நிலைமண்டில ஆசிரியப்பா (அளவடி)
தரவு கொச்சகக் கலிப்பா (அளவடி)
கலிவிருத்தம் (அளவடி)
கலித்துறை (நெடிலடி)
கட்டளைக் கலித்துறை (நெடிலடி)
ஆசிரிய விருத்தம் (ஆறு சீரும் அதற்கு மேலும்)
கட்டளைக் கலிப்பா (எட்டு சீர்கள்)

ஆறடிச் செய்யுள்
நிலைமண்டில ஆசிரியப்பா (அளவடி)

எட்டடிச் செய்யுள்
நிலைமண்டில ஆசிரியப்பா (அளவடி)
தரவுக் கொச்சகக் கலிப்பா (அளவடி)

மேற்சொன்ன விவரங்களைக் கொண்டு தமிழ் சானட் வகைகளை இப்படி அமைக்கலாம்.
தமிழ் மரபில் குறித்த இடங்களில் எதுகை-மோனைகள் அடிகளில் அமையவேண்டும்.

*****

இத்தாலிய சானட் வகை
முதல் எட்டடிகளின் இயைபுத் திட்டம்: abba, abba
இறுதி ஆறடிகளின் இயைபுத் திட்டம்: cde-cde/cdc-dcd
திருப்பம் ஒன்பதாம் அடியில் (ஆறடிச் செய்யுளின் முதல் அடியில்)

இத்தாலிய சானட் வகையைக் கூடியவரை ஒரே பா/பாவின வகை பயிலுமாறு
கீழ்வரும் சேர்க்கைகளில், அமைக்கலாம்.

அளவியல் இத்தாலிய சானட் (அளவொத்த நாற்சீர் அடிகள்)
1. எட்டடி நிலைமண்டில ஆசிரியப்பா + ஆறடி நிலைமண்டில ஆசிரியப்பா
2. எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா + ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா
3. இரண்டு நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா + ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா
4. இரு ஆசிரியத் தாழிசை + ஒரு குறள் வெண்செந்துறை + இரு ஆசிரியத் தாழிசை
5. இரண்டு கலிவிருத்தம் + ஒரு கலிவிருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை
6. முதல் எட்டடி குறள் வெண்செந்துறை + இறுதி ஆறடி குறள் வெண்செந்துறை

நெடிலடி இத்தாலிய சானட் (அளவொத்த ஐந்து சீர் அடிகள்)
1. இரண்டு கலித்துறை + ஒரு கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை
2. இரண்டு கட்டளைக் கலித்துறை + ஒரு கட்டளைக் கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை
3. இரு ஆசிரியத் தாழிசை + ஒரு குறள் வெண்செந்துறை + இரு ஆசிரியத் தாழிசை
4. முதல் எட்டடி குறள் வெண்செந்துறை + இறுதி ஆறடி குறள் வெண்செந்துறை

விருத்த இத்தாலிய சானட் (அளவொத்த ஆறு/ஆறின் மேற்பட்ட சீர் அடிகள்)
1. இரண்டு ஆசிரிய விருத்தம் + ஒரு ஆசிரிய விருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை
2. இரு ஆசிரியத் தாழிசை + ஒரு குறள் வெண்செந்துறை + இரு ஆசிரியத் தாழிசை
3. முதல் எட்டடி குறள் வெண்செந்துறை + இறுதி ஆறடி குறள் வெண்செந்துறை
4. இரண்டு கட்டளைக் கலிப்பா + ஒரு கட்டளைக் கலிப்பா + ஒரு குறள் வெண்செந்துறை

*****

ஆங்கில சானட் வகை
முதல் மூன்று நாலடிச் செய்யுளின் இயைபுத் திட்டம்: abab, cdcd, efef
இறுதி இரண்டடியின் இயைபுத் திட்டம்: gg
திருப்பம் ஒன்பதாம் அடியில் (மூன்றாம் நாலடிச் செய்யுளின் முதல் அடியில்)
முடிவுரை இறுதி இணையடிச் செய்யுளில்.

ஆங்கில சானட் வகையைக் கூடியவரை ஒரே பா/பாவின வகை பயிலுமாறு
கீழ்வரும் சேர்க்கைகளில், அமைக்கலாம்.

அளவியல் ஆங்கில சானட் (அளவொத்த நாற்சீர் அடிகள்)
1. மூன்று நாலடி நிலைமண்டில ஆசிரியப்பா + குறள் வெண்செந்துறை
2. மூன்று நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா + குறள் வெண்செந்துறை
3. எட்டடித் தரவு + நாலடித் தரவு + குறள் வெண்செந்துறை
4. நான்கு ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை
5. மூன்று கலிவிருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை
6. முதல் மூன்று நாலடிச் செய்யுள் குறள் வெண்செந்துறை + இறுதிக் குறள் வெண்செந்துறை

நெடிலடி ஆங்கில சானட் (அளவொத்த ஐந்து சீர் அடிகள்)
1. முன்று கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை
2. மூன்று கட்டளைக் கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை
3. முதல் பன்னிரண்டிகள் ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை
4. முதல் மூன்று நாலடிச் செய்யுள் குறள் வெண்செந்துறை + இறுதிக் குறள் வெண்செந்துறை

விருத்த ஆங்கில சானட் (அளவொத்த ஆறு/ஆறின் மேற்பட்ட சீர் அடிகள்)
1. மூன்று ஆசிரிய விருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை
2. முதல் பன்னிரண்டிகள் ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை
3. முதல் மூன்று நாலடிச் செய்யுள் குறள் வெண்செந்துறை + இறுதிக் குறள் வெண்செந்துறை
4. மூன்று கட்டளைக் கலிப்பா + ஒரு குறள் வெண்செந்துறை

*****

மேலே கொள்கையளவில் உருவாக்கிய சானட் வகை வடிவங்களை அறிஞர்களும் அன்பர்களும்
செயலளவில் முயன்று பார்த்து உதாரணங்கள் தந்து இந்த வடிவம் தமிழில் முறைப்படி
அமைய வலிமை கூட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். நானும் என்னளவில் முடிந்ததை முயல்கிறேன்.

*****
 
தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
1. எட்டடி நிலைமண்டில ஆசிரியப்பா + ஆறடி நிலைமண்டில ஆசிரியப்பா


இ1. காலம் என்னும் குழந்தை
(இத்தாலிய சானட்: நிலைமண்டில ஆசிரியப்பா
இயைபு: அஆஆஅ-அஆஆஅ, இஈஎ-இஈஎ)


கையில் உள்ளதைக் கைவிடும் முன்னம்
பையில் எட்டிப் பார்க்கும் பழக்கம்
இன்றே வேண்டும் என்றும் முழக்கம்
இன்னமும் குழந்தை யென்றே உன்னும்!
சொக்கும் வானிருள் சொப்புகள் மின்னும்
இக்கணம் உள்ளது இன்றைய வழக்கம்!
உலகினில் உயிர்மெய் ஒலியின் முழக்கம்
பலவகை யாகப் பரிபவச் சின்னம்!

கோலம் என்றும் குழந்தை யென்றே
காலம் ஆடும் கானம் பண்டே!
ஞாலம் பயிலும் ஞானம் சிரித்தே
வண்ணத் துயிர்மெய் வளியை மென்றே
மண்ணை யுண்டே மரத்தை யுண்டே
உண்ணும் எண்ணமும் உண்மை விரித்தே.

--ரமணி, 12/03/2015

குறிப்பு:
சொக்கும் வானிருள் ... பரிபவச் சின்னம்!
வானில் உள்ள மீன்கள் முதல் மண்ணில் மெய்யில் வாழும் உயிர்கள் வரை
எல்லாவிதமான, இறுதியில் அவமானம்/இகழ்ச்சி என்றே கைவிடப்படும்
சின்னங்கள் யாவும் காலக் குழந்தையின் விளையாட்டுச் சொப்புகள்.

*****
 
தமிழில் அளவியல் ஆங்கில சானட் உதாரணங்கள்
1. மூன்று நாலடி நிலைமண்டில ஆசிரியப்பா + குறள் வெண்செந்துறை

ஆ1. மழலைச் செல்வம்
(அளவியல் ஆங்கில சானட்: நிலைமண்டில ஆசிரியப்பா)

செந்நெல் இதழ்கள் செப்பும் மழலை!
என்னை மறந்தே இறைவச மானேன்!
கரும்பு வண்ணக் கருவிழிச் சுழலை
விரும்புதல் கொள்ளும் வெகுளி யானேன்.

வண்ணப் பூச்சியின் மலர்தா வல்போல்
கண்கள் அலையக் கண்துளிர்த் தேநான்
என்னுள் கொண்டேன் ஏக்கம்: என்மேல்
மின்னல் வீழ்ந்துள் விழிப்புறு வேனோ?

என்னிடம் குறையிலை இல்லைய வரிடம்
சின்னக் குழந்தை சிறுமியோ சிறுவனோ
இருவரும் விழைந்தே சென்றன வருடம்
கருவரம் உண்டெனக் கணித்தது வெறுமனோ?

என்னுள் உயிரொன் ரேறும் காலம்
இன்றோ என்றோ வென்றெம் ஓலம்!

--ரமணி, 07/03/2015

*****
 
தமிழில் அளவியல் ஆங்கில சானட் உதாரணங்கள்
2. மூன்று நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா + குறள் வெண்செந்துறை

ஆ2. குடும்பக் குமிழிகள்
(அளவியல் ஆங்கில சானட்: தரவு கொச்சகக் கலிப்பா)

அப்பாவின் குட்டியென்றே ஆகிநின்றேன் அப்போதே
எப்போதும் அம்மாவே என்றிருந்தேன் சின்னாளே
தப்பாமல் எதிலும் தலைநீட்டும் அப்பாவே
ஒப்பாரி யம்மாவே ஒப்பவிலை பின்னாளே.

கல்யாணம் ஆனதுமே கடமைகளாய்க் கதித்தனவே
இல்லாளும் அன்னையாரும் இன்முகமே வேட்டனரே
நல்விதமா யிருகுழந்தை நலம்தந்தான் விதித்தவனே
பல்லாண்டு வாழ்ந்தனரே பாட்டிதாத்தா வீட்டினிலே.

ஆயினநாள் இன்றுநாங்கள் அறுபதினும் நனியெனவே!
தாயன்புப் பிள்ளையவன் தந்தையன்புச் சேயிழையும்
போயினரே திருமணத்தில் புக்கவரும் தனியெனவே!
நோயற்ற வாழ்வெனினும் வாயற்ற ஆவினமே!

கூட்டுக் குடும்பமொன்று குமிழிகளாய்ப் பிரிந்ததுவே
காட்டாற்று வெள்ளத்தில் கதியற்றே உடைந்ததுவே.

--ரமணி, 12/03/2015

*****
 
தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
2. எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா + ஆறடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

இ2. மருள்மலர்
(அளவியல் இத்தாலிய சானட்: தரவு கொச்சகக் கலிப்பா)

வானின்று வரர்தூவும் மலர்களிலே ஒருமலரோ
கானின்று விகசித்தே கருவண்டு சூழ்-இனமோ
நானென்றன் முற்பிறப்பில் நற்கரும வாழ்வினிலோ
ஆனின்று உய்விக்கும் அறுமுகனாய் ஒருமகனோ
தேனுண்டு கண்ணுறங்கும் தெய்வீகத் திருமுகமோ
தானுண்டு தனக்குள்ளே தனதென்று வாழ்மனமோ
ஊணுண்டு உலவுகின்ற உயிரெனவே வாழ்முனமே
மானொன்று பார்ப்பதுபோல் மலர்விழிகள் உருவகமே!

அரவொன்று தீண்டியதோ அடிவயிற்றில் நஞ்செனநான்
உரமின்றிக் குமைகின்றேன் உயிர்பெற்ற உறவினிலே
வரமொன்று கேட்டேனே வகையின்றிக் கேட்டேனோ
நரம்பியலில் கோளாறால் நாளங்கள் துஞ்சுவதாம்
உருவமுண்டு மிழலையுண்டு உளஞ்சொல்லும் திறனிலையே
கருகமணிக் கோவையெனக் கனகமாலை வேட்டேனோ?

--ரமணி, 19/03/2015

*****
 
தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
3. இரண்டு நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா + ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா

இ3. கணிணிச் செயலியும் புதுக்கவிதையும்
(அளவியல் இத்தாலிய சானட்: தரவு கொச்சகக் கலிப்பா)

சொற்பலவும் சேர்ப்பதிலே தொட்டுவரும் குற்றென்றோ ... ... [குற்று = குறை; syntax error]
பற்பலவாம் குறியீடு பக்கமொன்று தப்புதலோ ... ... [error in punctuation]
சொற்பொருளை ஆய்ந்தெழுதித் தொட்டதிலே தப்பெனவோ ... ... [semantical error]
சற்றோடி என்செயலி தத்திநிற்கும் வெற்றென்றே! ... ... [செயலி = computer program]

என்றிருக்கும் போதிவண்நான் எத்தனை யோவிதமாய்த்
தன்னளவில் நன்கியங்கித் தக்கபலன் தந்திடவே
இன்றுபல வேசெயலி எண்ணியெழு துந்திறனைக்
குன்றெனவே என்வசத்தில் கொள்கணினிக் கோவிதன்நான். ... ... [கோவிதன் = நன்குணர்ந்தோன், expert]

இத்தனையொ ழுங்கிருந்தும் ஏன்கவிதை யாப்பினிலே
வித்தகனாய் ஆகாமல் மீக்கூரும் ஓசையற
தெத்துசொல்லே எண்ணமதைச் செப்புவதாய் வாக்கியமே
குத்துடைத்துத் தொங்கவிட்டுக் கூறிடுதல் காப்பெனவே ... ... [காப்பு = அணி]
சொத்தையைப்பு துக்கவிதைச் சொர்ணமலர்ப் பூசையென
எத்தனைநாள் இன்னும்நானும் ஏமாறும் பாக்கியமோ?

--ரமணி, 24/03/2015

*****
 
தமிழில் அளவியல் ஆங்கில சானட் உதாரணங்கள்
3. எட்டடித் தரவு + நாலடித் தரவு + குறள் வெண்செந்துறை

ஆ3. மரபே இதயம்!
(அளவியல் ஆங்கில சானட்: தரவு கொச்சகக் கலிப்பா)

நாளெல்லாம் பாடுபட்டால் நாலுவரிக் கவிதைவரும்
கோளொன்றும் குணமொன்றும் குறியெனவே கொண்டமர்ந்தேன்
வாளென்றே இலக்கணத்தால் வகையில்லா எதுகைவரும்
நீளில்லா மோனைவரும் நிலையெல்லாம் விண்டெறிந்தேன்
தாளொன்றும் தலையொன்றும் சார்வதிலே தளைதட்ட
வேளொன்று வினையொன்று விளைவொன்று வந்ததுவே
ஆள்வினையை விட்டிடாமல் அரும்பொருளைக் களைகட்டக்
கேள்விஞானம் கல்விஞானம் கேவலமாய் நின்றதுவே.

பேசாமல் புதுக்கவிதைப் பேரினிலே எழுதிடவோ?
கூசாமல் சொற்றொடரைக் குறைத்திடவோ மழுங்கிடவே?
ஏசாமல் படிப்போரும் இருக்கையிலே பழுதுறுமோ?
வீசாமல் தரித்துநின்றால் விளையாதோ ஒழுங்கெனவே?

இதயமென்று துடித்தொன்று இயங்கிடுமே வேரெனவே
எதையுமிங்கு மரபினிலே எழுதுவதே சீரெனவே.

[கோள் = கொள்கை, கோட்பாடு; நீள் = ஒளி; நிலை = இடம்;
தாள்-தலை = உறுசீரின் முடிவும் வருசீரின் முதலும்; வேள் = விருப்பம்;
ஆள்வினை = முயற்சி; வீசாமல் = விரித்துநீட்டாமல்.]

--ரமணி, 10/04/2015

*****
 
தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
4. இரு ஆசிரியத் தாழிசை + ஒரு குறள் வெண்செந்துறை + இரு ஆசிரியத் தாழிசை

இ4. எந்திரப் புலமைவேலை ஏன்தோழி!
(அளவியல் இத்தாலிய சானட்: ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை:
இயைபுத் திட்டம்: அஆஆஅ-அஆஆஅ, இஈஎ-இஈஎ)


அந்தியின் வண்ணங்கள் அழகினை விரிக்கும்
மந்திரம் மேவும் மாலன்கை யாழி!
வந்துநீ காண வழியிலையே தோழி!
சிந்தனை யெல்லாம் திருவிரல் அரிக்கும்
விந்தைகள் புரிந்தவை விசைகளில் தரிக்கும்
எந்திரப் புலமைவேலை ஏனோ தோழி?
உந்துதல் பலவாக உதிர்ந்திடும் ஊழி
தந்திரம் எல்லாம் தகவென வரிக்கும்!

பெண்ணெனும் இயல்பின் பெற்றிமை உள்ளுவாய்
பெண்மையின் மென்மையைப் பெரிதும் வஞ்சித்தே
வண்ணங்கள் இழந்தே வாடுதல் விடுதோழி!
பெண்மையாய்ப் பொலியும் பேற்றினைக் கொள்ளுவாய்
உண்மையில் நீசெயும் ஊழியம் சிந்தித்தே
வண்மையால் வந்துசேரும் வளங்கொள்ள இதுநாழி!

[ஆழி = சக்கரம்; விசை = கணினி விசைப்பலகை விசைகள்;
ஊழி = வாழ்நாள்]

--ரமணி, 11/04/2015

*****
 
தமிழில் அளவியல் ஆங்கில சானட் உதாரணங்கள்
4. நான்கு ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை

ஆ4. என்னில்லம் என்னில்லமான கதை
(அளவியல் ஆங்கில சானட்: ஆசிரியத் தாழிசை + குறள் வெண்செந்துறை:
இயைபுத் திட்டம்: அஆஅஆ, இஈஇஈ, உஊஉஊ, எ-ஏ)


கிடைநிலை மூன்றடுக்காய்க் கீழ்முதல் மாடியே
தடையிலா வாஸ்து சக்திகள் அருள்தரும்
மடைதிறந்த வெள்ளமாய் வரும்தென்றல் ஆடியே!

வான்கூரை மேல்மாடம் மாலையின் பொருள்தரும்
கான்சூழும் புள்ளிசை கவனத்தை ஈர்க்கும்
தேன்சூழும் மலர்வண்டு திண்டாடிக் கால்வைக்கும்!

எழுந்திரு விடிந்தது எனக்காலைக் கதிர்பார்க்கும்!
முழுநிலா சன்னல்வழி முகம்காட்டிக் கால்வைக்கும்!
இழுபறியாய்ச் சுற்றிலுமே இன்றுபல அடுக்ககமே!

வானம் துண்டாகி வருமெனக்கோர் பங்கென்றே
கானப் பறவையின் கவின்சிறகுத் துடிப்பிலையே
மோன உதயமும் முழுநிலவும் எங்கென்றே!

விண்ணும் மண்ணும் வேருடன் மறையும்
கண்ணில் மனிதன் கவலைகள் உறையும்!

--ரமணி, 12/04/2015

*****
 
தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
5. இரண்டு கலிவிருத்தம் + ஒரு கலிவிருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை

இ5. கணிணித் துறையே கவையென்று...
(அளவியல் இத்தாலிய சானட்: வெண்டளைக் கலிவிருத்தம் + குறள் வெண்செந்துறை:
இயைபுத் திட்டம்: அஆஆஅ-அஆஆஅ, இஈஎ-இஈஎ)

வான்சூழும் நீலம். வடிவம் உறுமேகம்.
தான்வீழும் செங்கதிர்த் தண்ணொளி ஜாலத்தில்
வானவில் லைவிஞ்சும் வண்ணமிகு கோலத்தில்
மோனச் சிரிப்பில் முகிழ்க்கும் உறவாகும்!
தேன்மலர் வண்டுகள் தேடிச் சிறகோயும்;
கானுறும் பண்ணில் கனியுள்ளம் சீலத்தில்;
ஆன்றமையும் சாந்தி அகம்வர ஞாலத்தில்
தோன்றும் இறைமையில் தொல்லை அறுந்தோயும்!

இவையெதுவும் காணா(து) இளநெஞ்சம் இன்று
கவையென்று கொள்ளும் கணிணித் துறையில்
சுவையின்றிச் சொல்லின்றிச் சோப்புக் குமிழ்செய்(து)
அவையே நிலையென்(று) அவனியை வென்றே
தவமென்று கொண்டே தனிமை அறையில்
சவமென்று முடங்கி சலத்தில் அமிழ்வெய்தும்!

[கானுறும் = செவியுறும்; சீலத்தில் = ஒழுக்கத்தில்;
கவை = வேலை, அக்கறை; சலம் = சுழற்சி, பட்சபாதம்,
மாறுபாடு, போட்டி, பிடிவாதம்.]

--ரமணி, 13/04/2015

*****
 
அன்புடையீர்!

கல்லூரிப் படிப்பை முடித்ததும் நான் ’பாபா அணு ஆராய்ச்சி நிலையம்’
அனுப்பியிருந்த நேர்காணல் மடலில் மகிழ்ந்து சென்னையில் இருந்து
மும்பைக்குத் தனியாக தாதர் விரவுவண்டியில் பதிவுசெய்யப் படாத
இருக்கையில் முப்பது மணிநேரம் அமர்ந்து பயணித்தேன்.

என் நண்பன் இதே வேலைக்கு ஒருநாள் முன்னதாகவே மடல் வந்து
முதல்நாள் கிளம்பிச் சென்றவன் என்னை தாதர் மாதுங்கா ரயில் நிலையம்
வந்து கூட்டிச் செல்வதாகச் சொல்லியிருந்தான். பயணத்தில் புனே-மும்பை
ரயில்வே தடத்தில் அதிகாலை சென்றபோது மேற்குத் தொடர்ச்சி மலையின்
இயற்கை அழகை ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

ரயில்வண்டியில் வாசல் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு காலைத்
தொங்கப்போட்டபடி அங்கும் இங்கும் கண்ணோட்டி ரசித்த காட்சிகள்
இன்றும் என் நெஞ்சில் பசுமையாக. இந்தப் பாடலில் நான் ரயில்
சக்கரம் எழுப்பும் ஒலியை எதிரொலிக்கும் வகையில் சொற்களை
அமைத்துள்ளேன். பாடலைப் பற்றி அன்பர்கள் கருத்துரைக்க வேண்டுகிறேன்.

அன்புடன்,
ரம்ணி

*****

தமிழில் அளவியல் ஆங்கில சானட் உதாரணங்கள்
5. இரண்டு கலிவிருத்தம் + ஒரு கலிவிருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை

ஆ5. படித்ததும் கிடைத்ததும்
[அளவியல் ஆங்கில சானட்: கலிவிருத்தம் (விளம் விளம் விளம் மா) + குறள் வெண்செந்துறை:
இயைபு: அஆஅஆ, இஈஇஈ, உஊஉஊ, எ‍எ]


புனேநகர் கடந்ததும் பூத்ததே எங்கும்
சினேகிதம் நடம்பயில் சிலிர்ப்பினில் இயற்கை!
அனேகமாய்ப் பசுமையே, அருவிகள் தொங்கும்
முனேவரும் குகைத்தடம் முடுக்கிடும் மயற்கை!

இயற்கையின் நடக்கையில் எழுந்திடும் ஆடல்
நயம்படும் முகத்துடன் நடம்புரி மங்கை!
கயங்கிடும் கருந்திரள் கசிந்திடும் தூறல்
இயன்றிடும் வெடித்திடும் இசைத்திடும் கங்கை!

படிப்பினை முடித்தவன் பார்க்கவோர் வேலை
கிடைப்பதற் கென்றுநான் கிடந்தவண் சென்றேன்
கடுமையாய் வந்தநேர் காணலோர் காலை
கடிதமும் வருமெனக் கனவுகள் கண்டேன்.

வந்ததோ மறுப்பென; வாழ்விலே இறைவன்
தந்தவோர் வேலையில் தங்கியே நிறைவன்!

--ரமணி, 13/04/2015

*****
 
தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
6. முதல் எட்டடி குறள் வெண்செந்துறை + இறுதி ஆறடி குறள் வெண்செந்துறை

இ6. சவலத்தில் மனம்தோய்வேன்!
(அளவியல் இத்தாலிய சானட்: குறள் வெண்செந்துறை:
இயைபுத் திட்டம்: அஆஆஅ-அஆஆஅ, இஈஎ-இஈஎ)


எத்தனை புத்தகங்கள் எப்படிப் படிப்பேன்?
இத்தனை சஞ்சிகைகள் ஈயென மொய்த்தால்
மாமரப் பூக்களாய் மலைக்க வைத்தால்
பாமரன் நானெதைப் படித்து முடிப்பேன்?
இவைபோ தாதென்று இணையத்தில் கால்கடுப்பேன்
கவையோ கலையோ கரைமீறிக் கால்வைத்தால்
கனவிலும் அலைமனம் கட்டெறும்பாய் மொய்த்தால்
நனவிலெதைக் கொள்ளுவேன் நலமெனவாய் மடுப்பேன்?

மனதின் விருத்தியில் வளரும் வினைகளாய்
நனவின் மாயயை நன்றாய் மறைப்பதில்
உள்ளுறை ஆன்மாவை உள்ளுதல் தடுத்தே
கள்ளுறும் போதையாய்க் காமச் சுனைகளாய்
அவலத்தை நலிவை அறிவென்றே உரைப்பதில்
சவலத்தில் மனம்தோய்வேன் சாதனை விடுத்தே.

[கவை = செயல், வேலை; சவலம் = சபலம்]

--ரமணி, 26/04/2015

*****
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top