• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அருணகிரிநாதர் போடும் 3 விடுகதைகள்

Status
Not open for further replies.
அருணகிரிநாதர் போடும் 3 விடுகதைகள்

narada+palani.jpg


திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை-- 9

அருணகிரிநாதர் போடும் 3 விடுகதைகள்: உங்களுக்கு விடை தெரியுமா?


அருணகிரிநாதரால் பாடப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள அற்புதமான 1300+ திருப்புகழ் பாடல்களில் பல அழகான சொல்லாக்கமும், சொல்லாட்சியும், சொற்சிலம்பமும் இருப்பதை முந்தைய எட்டு கட்டுரைகளில் கண்டோம். அவர் போடும் பல புதிர்களுக்கு விடை கிடைக்காமல் அறிஞர்கள் திண்டாடுகிறார்கள் ஒரு மூன்று புதிர்களை மட்டும் இங்கே காண்போம்.


1. திருவேங்கட மலையில் முருகன் கோவில் இருப்பதாகப் பாடுகிறார். நமக்குத் தெரிந்து வேங்கடாசலபதி (பாலாஜி ) கோவில் இருக்கிறது. அப்படியானால் முருகன் கோவில் ஒன்று இருந்து அழிந்துவிட்டதா? அல்லது இப்போதைய பாலாஜி கோவில் ஒருகாலத்தில் முருகன் கோவிலாக இருந்ததா? இது அவர் போடும் முதல் புதிர்.

2. சரஸ்வதி நதிக்கரையில் வயிரவி வனம் என்று ஒரு இடம் இருப்பதாகவும் அங்கே முருகன் கோவில் இருப்பதாகவும் பாடுகிறார். சரஸ்வதி நதி வேத காலத்தில் ஓடி மகாபாரத காலத்தில் மறையத் துவங்கிவிட்டது. அருணகிரி காலத்தில் சரஸ்வதி நதி இல்லையே! நமக்குத் தெரிந்து வயிரவி வனம் என்று ஊரும் இல்லையே. வயிரவி வனம் எது? முருகன் கோவில் எங்கே? இது அவர் போடும் இரண்டாவது புதிர்.

3. பிள்ளையார் கையில் ஒரு மாதுளம் கனியை பார்வதி தேவி கொடுத்ததாகப் பாடுகிறார். அது என்ன புதிய கதை? நமக்குத் தெரிந்ததெல்லாம் பழனியில் மாங்கனி கொடுக்கப்பட்டது. முருகன் கோபித்துக் கொண்டு ஓடிப் போய் தண்டாயுதபாணியாக நின்றார். இந்த மாதுளம் பழக் கதை என்ன?

மூன்று கேள்விகளுக்கும் விடை தெரிந்தால் சொல்லுங்கள். என்னுடைய ஊகங்களை முதலில் கூறிவிடுகிறேன். திருப்பதி (திருவேங்கடம்) பற்றி அருணகிரி நாதர் பாடியது இதுதான்:


வேந்த குமார குகசேந்த மயூர வட
வேங்கட மாமலையில் உறைவோனே
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது
வேண்டவெறாது உதவு பெருமாளே

திருவேங்கடத்தில் பாடிய இன்னும் ஒரு திருப்புகழில்
ராவணார் முடி பொடியாகச்
சிலை வாங்கிய நாரணார் மரு
மகனாம் குகனே பொழில் சூழ்தரு
திருவேங்கடமாமலை மேவிய பெருமாளே


என்று பாடுகிறார்.

திருப்பதி கடவுள் பற்றி நிறைய புதிர்கள் உள்ளன. வேறு எந்த வைணவ தலங்களிலும் இல்லாத உருவ அமைப்பும், பல நடைமுறைகளும் பூஜைகளும் திருவேங்கடநாதருக்கு இருக்கின்றன. ஆனால் சிலப்பதிகார காலம் முதல் ஆழ்வார்கள் காலம் வரை அங்குள்ள விஷ்ணுவையும் பாடி இருக்கிறார்கள் அப்படியானால் முருகன் கோவில் எங்கே? இதுவரை ஏழு மலைகளில் முருகன் கோவில் கண்டுபிடிக்கப்படவில்லை.

வேங்கடேசன் என்று சிவனைப் போல ‘ஈஸ்வரன்’ என்று பெயர் வைக்கிறோம். பொதுவாக ‘ஈசன், ஈஸ்வரன்’ என்பது சிவனையே குறிக்கும். எதற்காக ஈசன் பெயரைச் சேர்க்கிறார்கள்? ‘வேங்கட சுப்ரமணி’யனென்றும் பெயர் வைக்கிறோம். வேங்கடத்தில் (திருப்பதி-திருமலை) சுப்பிரமணியன் எங்கே இருக்கிறார்? குன்று தோராடும் குமரன் தமிழக வட எல்லையான வேங்கடத்தில் கட்டாயம் கோவில் கொண்டிருப்பாரே? அது எங்கே? சிலர் விஷ்ணு கோவில் (பாலாஜி), முதலில் முருகன் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். அதற்கும் ஆணித்தரமான ஆதாரங்கள் இல்லை.

sevarkotiyon.jpg


இருதரப்பு வாதங்களையும் படித்த பின்னர் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஒருவேளை இரண்டு கோவில்களும் இருந்து ஒன்று மறைந்திருக்கலாம். தமிழ் நாட்டில் கூட சிதம்பரம் போன்ற இடங்களில் சிவனும் விஷ்ணுவும் அடுத்தடுத்து இருப்பதைப் பார்க்கிறோம். “அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு” என்ற பொன்மொழியை அறிந்தவர்களுக்கு இது வியப்பு தராது. காலப் போக்கில் ஒன்று மறைந்திருக்க வாய்ப்பு உண்டு. தமிழ்நாட்டில் பலகோவில்களில் பலராமன் வழிபாடும் இருந்தது. ஆனால் இன்று அறவே இல்லை. புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் பலராமன் வழிபாடு உள்ளது. பழமுதிர்ச்சோலை காணாமற்போகவே நமது காலத்தில் நாமாக புதிய பழமுதிர்ச்சோலையை உருவாக்கினோம்.


சரஸ்வதி நதி மர்மம்

சரஸ்வதி நதிக்கரையில்தான் உலகின் மிகப் பழைய மதப் புத்தகமான ரிக்வேதம் உருவானது. அந்த நதி மறைந்து விட்டதால் பிரயாகை என்றும் த்ரிவேணி சங்கம் என்றும் அழைக்கப்படும் இடத்தில் கங்கையும் யமுனையும் இன்று கண்ணுக்குத் தெரிகின்றன. த்ரிவேணியில், மூன்றாவதான சரஸ்வதி பாதாளம் வழியாக கலப்பதாகச் சொல்லிக் கொள்வார்கள். இப்போது அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா எடுத்த புகைப்படங்களில் மறைந்து போன வழித்தடங்கள் தெரிகின்றன. ஆனால் இப்போது சரஸ்வதி நதியும் இல்லை, வயிரவி வனம் எங்கே இருக்கிறது என்றும் தெரியவில்லை. அருணகிரிநாதர் போன்ற ஆன்மீக உள்ளொளி பெற்றவர்களுக்கு வயிரவி வனம் என்ன, கைலாசம் க்குடத் தெரியும். ஆனால் நம்மை போன்றவர்களுக்கு வயிரவி வனத்தைக் கண்டுபிடிக்காத வரை தூக்கம் வராது. இண்டியானா ஜோன்ஸ் வேலை செய்து நாமும் முயற்சி செய்து பார்ப்போமே.
இதோ சரஸ்வதி நதி பாடும் திருப்புகழ்:
மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்
வயல்புடை கிடக்கு நீல மலர்வாவி
வளமுறு தடத்தினோடு சரஸ்வதி நதிக்கண் வீறு
murugan+arul.jpg

வயிரவி வனத்தில் மேவு பெருமாளே



மாங்கனியா? மாதுளங்கனியா?

திருவிளையாடல் திரைப்படம் பார்த்தவர்களுக்கு முருகன் – பிள்ளையார் இடையே நடந்த போட்டி தெரியும். கலகம் செய்வதையே பொழுது போக்காகக் கொண்ட நாரத மாமுனிவன் ஒரு மாம்பழத்தைக் கொண்டுவந்து அதை வெட்டாமல் சாப்பிடவேண்டும் என்று சொன்னார். உலகம் சுற்றும் வாலிபனுக்கே அந்தப் பழம் என்று போட்டி வைக்க, முருகன் மயில் மீது பறந்து சென்றார். கெட்டிக் கார பிள்ளையார் அம்மாவையும் அப்பாவையும் சுற்றிவந்து உலகத்தையே சுற்றிவிட்டதாகச் சொல்லி பழத்தை வென்றார்., முருகன் கோபித்துக் கொண்டு பழனி மலையில் குடியேறினார். ஆனால் அது மாம்பழக் கதை. அருணகிரிநாதர் சொல்வதோ மாதுளம்பழம். இது புதுக் கதையா? பழைய கதையில் செய்யப்பட்ட ஒரு சிறிய மாற்றமா?


இதோ மாதுளங் கனி திருப்புகழ்:

உவகாரியன்பர்பணி கலியாணி எந்தை இடம்
முறைநாய கங்கவுரி சிவகாமி
ஒளிர் ஆனையின் கரமில் மகிழ் மாதுளம் கனியை
ஒரு நாள் பகிர்ந்த உமை அருள் பாலா

ஏனைய எட்டு திருப்புகழ் கட்டுரைகளையும் படித்து இன்புறுக.
லண்டன் சுவாமிநாதனைத் தொடர்பு கொள்ள: [email protected]
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top