• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சோழர்கள் தமிழர்களா?

Status
Not open for further replies.
சோழர்கள் தமிழர்களா?

chola-flag-2.jpg


தமிழ் நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் ஆகிய மூவேந்தர்களும் குறைந்தது 2500 ஆண்டுகளாக வரலாற்றில் இடம்பெறுகிறார்கள். போதாயனர், காத்யாயனர், வால்மீகி, வியாசர், அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியர், மாமன்னன் அசோகன், கலிங்க மன்னன் காரவேலன், இலங்கையின் மஹாவம்சம், கிரேக்க தூதன் மெகஸ்தனீஸ், காளிதாஸ் முதலிய பலராலும் பாராட்டப்பட்டவர்கள்.


1.தமிழ் இனத்தின் வயது என்ன?, 2.சுமேரியாவில் தமிழ்ப் பறவை, 3.தமிழ்-கிரேக்க தொடர்பு 4. திராவிட ராணி கி.மு.1320 (5) தமிழ் பூதமும் கிரேக்க பூதமும் 6. வியட்நாமை ஆண்ட பாண்டிய மன்னன் முதலிய பல கட்டுரைகளில் ஏற்கனவே தமிழ் இனத்தின் பழமையை, பெருமையை விளக்கிவிட்டேன்.


சேரர்களுக்கு முன்பாக பாண்டியர் பெயரும் சோழர் பெயரும் அடிபடுகின்றன. எல்லோரும் வடபுல மன்னர்களுடன் சொந்தம் பந்தம் கொண்டாடினாலும் சோழர்கள் பற்றிய செய்திகள் வியப்பை ஏற்படுத்துகின்றன. பிற்காலச் செப்பேட்டிலும், கல்வெட்டுகளிலும் மட்டும் இச்செய்தி வந்திருந்தால் இதைப் பலரும் வெறும் புகழுரை என்று ஒதுக்கி இருப்பார்கள். ஆனால் சங்கத் தமிழ் இலக்கியத்தின் பழமையான பகுதி என்று கருதப்படும் புறநானூற்றில் இச் செய்தி ஒன்றுக்கும் மேற்பட்ட புலவர்களால் பாடப்படுவதால் இதில் உண்மை இருக்கவேண்டும்.
(ஆரிய திராவிட வாதம் பேசும் பேதிலிகளுக்குப் புறநானூறும் ஏனைய சங்க இலக்கிய நூல்களும் தரும் பதில் இதோ):


சோழர்களின் மூதாதையர்கள் இந்தியாவின் வடக்கு, வடமேற்குப் பகுதில் இருந்து வந்தவர்கள்என்று தோன்றுகிறது. தமிழர்களின் ஆட்சி அவ்வளவு தூரம் பரவியிருந்தது என்று சொல்ல முயலலாம். ஆயினும் பெயர்கள் எல்லாம் சம்ஸ்கிருதத்தில், புராணத்தில் உள்ள மன்னர் பெயர்களாக இருக்கின்றன. பாண்டவர்களின் சந்திரகுலத்துடன் பாண்டியர்கள் சொந்தம் கொண்டாடுவது போல இவர்கள் ஸ்ரீ இராமனின் சூரிய குலத்துடன் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.


புறநானூற்றின் பாடல் 37, 39, 43, 46, 228 ஆகியவற்றில் சோழர்களின் முன்னோடியாக சிபிச் சக்ரவர்த்தி கூறப்படுகிறான். சிபிச் சக்ரவர்த்தியின் கதை புராண, இதிஹாசங்களிலும் பவுத்த ஜாதகக் கதைகளிலும் வருகிறது. ஒரு புறாவுக்காக தன்னையே தராசில் நிறுத்தவன் அவன். தியாகத்தின் சின்னம் அவன். மஹாபாரதம் வன பர்வத்தில் வரும் (அத்தியாயம் 200) வரும் சிபி- கழுகு, புறாக் கதையை சங்க இலக்கியம் அப்படியே கூறுகிறது.


சிபியின் வழித்தோன்றல் என்பது சம்ஸ்கிருதத்தில் ‘சைப்ய’ என்று வரும். அதைத் தமிழில் செம்பியன் என்று தமிழ்படுத்தினர். அகநானூறு பாடல் 36, நற்றிணைப் பாடல் 14 ஆகியவற்றில் சோழர்கள் செம்பியன் என்றே அழைக்கப்படுகிறான். வடமொழி ஆசிரியர்கள் தண்டி, வராஹமிகிரர் ஆகியோரும் சோழர்களை சிபியின் குடியினராகவே கருதுவர். அமராவதி, நாகார்ஜுனகொண்டா, பர்ஹுத், இந்தோநேசியாவில் போரோபுதூர் புடைப்புச் சிற்பங்களில் சிபியின் கதைகள் சித்திர வடிவம் பெற்றன.


sibiborobudur.jpg

Picture of Sibi in sculptures--Borobudur, Indonesia.

சிபி குலத்தை ரிக்வேதமும் ,ஐதரேய பிராமணமும் குறிப்பிடுகின்றன. குறைந்தது 3500 ஆண்டுக்கு முந்தியவர்கள் சிபி குலத்தினர். பஞ்சாபில் ஜீனாப் நதிக்கரையில் சிபிபுரம் உள்ளது. இதைத் தான் பாணினி சிவபுரம் என்று குறிப்பிட்டதாகவும் சில அறிஞர் கருதுவர். சிபிகள் செய்த கண் தானத்தை புத்த ஜாதகமும் அவன் வேள்விகள் இயற்றி சொர்க்கம் சென்றதை மஹாபாரத ஆதிபர்வமும் விளக்கும்.


மேலும் பல வியப்பான செய்திகள்

அகத்திய முனிவரின் ஆணையை ஏற்று, தொடித்தோள் செம்பியன் என்ற சோழன், 28 நாள் இந்திர விழாவினை ஏற்பாடு செய்ததாக மணிமேகலை காப்பியத்தில் காணலாம் (1-1-10). அவன் சிவபெருமான் போல அசுரர்களின் மூன்று ஆகாயக் கோட்டைகளத் தகர்த்ததை நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் தருகிறார் (தொல். பொருள் 102 உரை). புறநானூறும் (பாடல் 39) சிறுபாணாற்றுப்படையும் (81-82), சிலப்பதிகாரமும் (29-17) இதையே கூறும்.


சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் உள்ள இலக்கியங்கள் அனைத்தும், கல்வெட்டுகள், மெய் கீர்த்திகள், செப்பேடுகள் அனைத்தும் சோழர்களின் சூரியகுலத்தைப் போற்றிப் புகழ்கின்றன.
மாந்தாதாவின் மகனான முசுகுந்தன் என்னும் சோழன் இந்திரனின் தலைநகரான அமராவதியைக் அசுரரிடமிருந்து காத்தான் என்றும் அதற்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் காவல் பூதமும் ஐவகை மன்றமும் அனுப்பிவைத்தான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது (5-65/67; 6-7/17)


புராண, இதிஹாசங்களில் சிபிச் சக்ரவர்த்தி சூரிய குல மன்னனாகக் காட்டபடவில்லை. இதில் வியப்பு ஒன்றுமில்லை. சூரியகுல, சந்திரகுலக் கலப்புத் திருமணத்தில் எதுவும் சாத்தியமே.
வரலாற்றுப் பேரறிஞர், தொல்பொருட் துறை நிபுணர் டாக்டர் இரா.நாகசாமி எழுதிய புத்தகத்தில் (யாவரும் கேளிர்) பல அரிய செய்திகளைத் தருகிறார்:


சோழ மன்னர்கள் காஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்களுடைய செப்பேடுகளில் இருந்து அறியலாம். காச்யபர், அத்ரி ஆகிய இரண்டு ரிஷிகளின் பெயர்களும் அவர்களுடைய குடி முதல்வர்களாகக் குறிக்கப்பட்டுள்ளன.

சோழ மன்னர்கள் திலீபன், அரிச்சந்திரன், மாந்தாதா, முசுகுந்தன், நாபாகன், காகுத்தன், பகீரதன், தசரதன், ராமன் முதலியோர் தங்கள் குலத்தவர் என்று கூறிக்கொள்வதை கன்யாகுமரிக் கல்வெட்டும், திருவாலங்காட்டுச் செப்பேடும், கலிங்கத்துப் பரணியும், மூவர் உலாக்களும் கூறுவதைக் காணலாம்.


இமயத்தில் சின்னம் பொறித்தது, மஹாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவியது, இந்திரனுக்குச் சமமாக ஆசனத்தில் அமர்ந்தது ஆகியவற்றை மூவேந்தர்களும் தாங்கள் செய்ததாகக் கூறிக்கொள்கின்றனர்.

மாந்தாதா என்ற சோழன் ஒரே துறையில் புலியும் மானும் நீருண்ணும்படி பகை நீக்கி ஆண்டான் என்றும், ஒரு சோழன் உத்தரகுரு என்னும் போகபுரியை ஆண்டான் என்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன.


ஒருமன்னன் குட மலையை அறுத்து பொன்னி நதியக் கொண்டுவந்தான் என்றும் இன்னொருவன் மேல்கடல் நீரைக் கீழ்க்கடலில் விட்டான் என்றும் நாபாகன் என்ற சோழன் முதுமக்கள் தாழியை வழக்கத்தில் கொணர்ந்தான் என்றும், மனுநீதிச் சோழன் தனது மகனையே தேர்க்காலில் இட்டதையும், நரைமுடி தரித்து நீதி வழங்கியதையும் கல்வெட்டுகளும் இலக்கியங்களும் கூறும்.
கரிகால் சோழன் பருந்து (கழுகு) வடிவ யாக குண்டம் அமைத்து வேள்வி இயற்றியதையும் பருவக் காற்றைப் பயன்படுத்தி கப்பல் விட்டதையும் ஏற்கனவே எழுதிவிட்டேன் கீழே காண்க.
இந்தியர்களை ஆரியர், திராவிடர் என்று இனம் பிரித்து சூது வாது புரிந்தவர்களுக்கு புறநானூறு நல்ல சூடு போடுகிறது.


உதவிய நூல்கள்: 1.சங்கத் தமிழ் இலக்கியம், 2.இரு பெரும் காப்பியங்கள் 3.இந்தியப் பண்பாடும் தமிழரும்— எழுதியவர் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எஸ். இராமகிருஷ்ணன் 4. யாவரும் கேளிர்— தொல்பொருட் துறை அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி
sibi-colour.jpg


Please read my earlier posts:

1.Indra festival in the Vedas and Tamil Epics 2.Bull fighting: Indus valley to Spain via Tamil Nadu 3.Karikal Choza and Eagle shaped Fire Altar 4.Why do British judges follow a Tamil king? 5.Flags : Indus Valley- Egypt Similarity 6.தமிழ் முனிவர் அகஸ்தியர் 7.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் 8.கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி—எகிப்து அதிசிய ஒற்றுமை 9.வீரத் தாயும் வீர மாதாவும் 10.Veera Matha in the Vedas and Tamil Literature 11.இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும் 12.கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம் 13.பருவக்காற்றைக் கண்டுபிடித்தது தமிழனா? 14.பிரிட்டிஷ் நீதிபதிகள் நரை முடி தரிப்பது ஏன்? 15.தமிழ் இனத்தின் வயது என்ன? 16.தொல்காப்பியர் காலம் தவறு ( ஐந்து பகுதிகள் கொண்ட கட்டுரைகள்).17. Pandya king who Ruled Vietnam.+ 560 articles about Indian Culture.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top