1939 ஜூனில் காசி யாத்திரையின் முடிவாக ஸ்ரீசரணாள் வடபுலத்திலிருந்து திரும்பி தென்கோடியான ராமேஸ்வரம் சென்றுகொண்டிருக்கறார். ஏறக்குறைய இறுதிக்கட்டம். திருப்புனவாயிலைக் கடந்து தேவிபட்டணம் போகும் வழி..
சுக்ரவார பூஜை பொருத்தமாக தேவிபட்டணத்தில் ஏற்பாடாகியிருந்தத. அதற்குத்தான் விரைகிறார்..
ஆயின் தேவி அங்கே காளிரூபம் கொண்டிருப்பதாக அல்லவோ தோன்றுகிறது?
அங்கு ஊராட்சி முக்யஸ்தர் ஒரு முஸ்லீம் மரைக்காயர்.. வெளிப்படவே ஐக்கிய இந்தியக் கொள்கையிலும், ஹிந்து மதத்தாரிடமும் முஸ்லீம் லீக் பகமை பாராட்டி வந்த அந்நாளில் அவர் அங்கு ஒரு பெரிய கட்சிக்கூட்டத்திறகு ஏற்பாடு செய்திருந்தார். அதன் தொண்டர்கள் ஹிந்து சமுதாயத்தின் விஷயமாக குண்டர்களே ஆகித் தெருக்களில் ஆயுதமும் கையுமாக அன்று செய்த தர்பாரில் ஊரே கிடுகிடுத்துக் கொண்டிருந்தது. ஹிந்துக்கள் நடுநடுங்கிக்கொண்டருந்தனர்.
செல்லும் வழியில் ஸ்ரீசரணாளுக்குச் செய்தி வந்தது. பயணத்தைத் தொடராமல், இருந்த இடத்திலேயே அப்போதைக்கு ‘நிப்பாட்டி’ விடலாம்; தேவிபட்டணத்தில் கூட்டம் முடிந்து, ஊர் அமைதிக்குத் திரும்பியபின்னர் மீண்டும் பயணம் மேற்கொள்ளலாம்; வேறு வழியில்லை என்று அனைவரும் கருதினர்.
அந்த அனைவர் கருத்தும் எந்த ஒருவரின் அங்கீகாரத்தில்தான காரியமாகுமோ, அவர் ஏதும் சொல்லாமலே மோன சாந்த விக்ரஹமாக, ஆயினும் உத்ஸவ விக்ரஹமாக மேலே சென்று கொண்டேயிருந்தார்.
அதே வழியில் அந்த மரைக்காயரே எதிர்ப்படும்படி நேர்ந்தது! கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் சுற்றுப்பிரதேசங்கலும் செய்து விட்டு அவர் திரும்புகையில் ஸ்ரீசரணாரின் பரிவாரம் வருவதைக் கண்டார்!
பரிவாரத்திடை வந்த பரமரையும் கண்டார்.
எப்படிக் கண்டார்? மைத்ரீ தேவதையாகவேதான் கண்டிருக்கவேண்டும
பெரியவாளிடம் நெருங்கி வந்து பெரிதாகக் கும்பிட்டு நின்றார். அவர் நெஞ்சமெல்லாம் பக்தி பூரிக்க உருகியிருந்தது வெளிப்பார்வைக்கே தெரிந்தது.
முதல் தரிசன மாத்திரத்தில் முழு மனமாற்றம்! மாறு நினைத்த மனம் அன்பிலே கொண்ட அதிசய மாற்றம்!
தற்செயலாகக் கிடைத்த தரிசனம் தாம் எதிர்பார்க்காததோர& அமைதியையும், இன்பத்தையும் ஊட்டியதை அவருக்குத் தெரிந்த மொழிநடையில் உணர்ச்சியுடன் பெரியவாளிடம் தெரிவித்தார்.
“நம்ம ஊர்ல சாமி வந்து பூசை பண்றது பாக்கியங்க! எங்களைச் சேர்ந்தவங்களுக்கு சொல்றேங்க! என்ன பணியானாலும் செஞ்சு குடுப்பாங்க. சாமி நல்லா நம்ம ஊர்ல இருந்து, எங்களுக்கெல்லாம் அருளு பண்ணிட்டுப் போகணுங்க” என்று வேண்டிக் கொண்டார்.
“உங்க மனஸுப்படியே ஆகட்டும்!” என்று ஸ்ரீசரணர் நெகிழ்ந்து கூறி ஆசி வழங்கினார்.
பெரியவாள் புன்ணியத்தில் குண்டராட்சி பெரியவாளுக்கே தொண்டர் மாட்சியாக உருமாறிற்று.
ஒருபுறம் லீக் கூட்டம் அமைதியாகவே நடக்க, மறுபுறம் தேவியின்---காளி ரூபத்தில் அல்ல; ஸௌம்ய லலிதா ரூபத்திலேயே உள்ள தேவியின்------பூஜையும் கோலாஹலமாக நடந்தேறியது.
அன்னையன்பின் வடிவான அவதார அன்னைக்குச் செய்யும் பூஜை மணிக்கணக்கில் நீள்வதுண்டுதானே? அப்படித்தான் அன்றும் நடந்தது.
கூட்டம் முடிந்த பின்னும், பூஜை நடப்பதறிந்த மரைக்காயர் தம் முஸ்லீம் பரிவாரத்துடன் முகாமுக்கு வந்து, அவர்களோடு வெளியே காத்திருந்து, தாங்கள் கொண்டு வந்திருந்த ஏராளமான பழக்கூடைகள், பூக்கூடைகள், கட்டுக்கட்டாக ஊதுபத்தி, புட்டி புட்டியாக அத்தர், பன்னீர் முதலானவற்றை உள்ளே அனுப்பி வைத்தார்.
பூஜை முடிந்ததும் நேரே பெரியவாள் அவர்களுக்குத் தரிசனம் வழங்கத்தான் வந்தார். எப்போதுமே அன்னையன்புக்கு மூர்த்தமான அவரது திருவுருவம் இதுபோன்ற அன்னை வழிபாட்டிற்குப் பின்னோ முன்னிலும் அன்பு மெருகேறி ஜ்வலிப்பது வழக்கம். இன்றோ அந்த வழக்கத்திற்கும் அதிகமான அன்பொளி வீச வந்து நின்று, திருநயனத்தால் அதனை அவர்களுக்கு அள்ளித் தெளித்தார்.
அப்போதும், அன்னிய மதத்தினர், அன்று சில மணிகள் முன்பு கூட, என்ன அநியாயம் செய்வரோ என்று அஞ்ச வைத்தவர்கள், கனிந்த மனத்தோடு, கனியும் மலரும், மணமிகு மற்ற கையுறைகளும் கொண்டுவந்து கொட்டிப் பணிந்தவாறிருந்தனர
‘அன்னியோன்னியம்’ என்று ஒரு அழகான சொல். அன்னியம் என்பது அன்னியமாகிவிடும் ஆரன்பைக் காட்டும் சொல். அதற்கு அற்புதச் சான்றாயிருந்தது அந்த நிகழ்ச்சி.
“இத்தனை அன்பா நீங்க செய்யறதை நான் ஸந்தோஷமா ஏத்துக்கத்தான் வேணும். ஆனாலும் இவ்வளவு தாங்குமா’ன்னு இருக்கு!” என்று உள்ளத்திலிருந்து கூறினார் ஸ்ரீசரணர்.
“ஏங்க தாங்காம?” என்றார் மரைக்காயர், பரம பவ்யமாக. “ சாமியை செகத்து குரு—வுன்னு சொன்னாங்க. அப்ப எங்களுக்கும் குருதானுங்களே! நாங்க என்னதான் செய்யக் கூடாது?” என்றார் அந்த முஸ்லீம் லீக் தீவிரவாதி!